Monday, November 30, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 604

உத்தவா! இவ்வுலகம்‌ மனத்தினாலேயே தோற்றுவிக்கப்படுகிறது. உண்மை போலிருந்தாலும் அப்படி அல்ல. இவ்வுடல் மூவகை குணங்களால் வந்த பேதமாகும். மாயை கனவு போன்றது‌. 

மது அருந்துபவனுக்கு போதையால் உடல் பற்றிய உணர்வு இருக்காது. அதுபோலத்தான் ஞானிக்கும். உடலைக் கொண்டு ஆன்மாவை அறிந்தபின் உடல் பற்றிய உணர்வு இருக்காது. 
அதைப் பற்றிக் கவலையும் படமாட்டான். 

உடல் கர்மாவினால் ஏற்படுகிறது. கர்மா இருக்கும் வரை உடல்‌  இருக்கும். அதனால் ஞானி அதன் மீதுள்ள பற்றை ஒழித்துவிடுகிறான்‌.

இவ்வாறு கூறிய நான் பின்னர் ஸனகாதியரிடம், நான் தான் பகவான், தத்துவ ஞானத்தை போதிக்க வந்தேன் என்பதைக் கூறினேன். 

நானே எல்லா விதமான குணங்களுக்கும் ஆதாரம். ஆனால் நானோ குணங்கள் அற்றவன். எல்லோரிடமும் சமமாக இருப்பவன், ஒட்டுத்தல் அற்றவன் ஆகியவை என் குணங்கள். இவை என்னிடம்‌ எப்போதும் உள்ளவை. ஸத்வ ரஜஸ், தமஸ் ஆகிய குணங்களின் பரிமாணங்கள் அல்ல. அனைவர்க்கும் பிரியமான ஆத்மா நானேதான்.

இவ்வாறு நான் உபதேசம் செய்தபின் ஸனகாதியர் என்னைப் பலவாறு துதித்தனர். அதன்பின் அங்கிருந்து மறைந்துவிட்டேன்.

என்றான் கண்ணன்.

உத்தவர் அடுத்த கேள்வியைத் தயாராக வைத்தார்.

கண்ணா! உன்னை நன்கறிந்த சான்றோர் உன்னை அடையப் பல வழிகளைக் கூறுகிறார்கள். அவை அனைத்துமே பின்பற்றப்பட வேண்டியவையா? அல்லது முக்கியமான வழி ஏதாவது ஒன்று உள்ளதா?

கண்ணன் கூறத் துவங்கினான்‌

உத்தவா! ப்ரளயம் முடிந்து வெகுகாலம் ஆனதால் மறைஞானம் முற்றிலுமாக அழிந்துபோயிருந்தது. மீண்டும் படைப்பைத் துவங்கியபோது நான் ப்ரும்மாவிற்கு ஞானத்தை உபதேசம் ‌செய்தேன். ப்ரும்மா தன் மூத்த மகனான மனுவிற்கு உபதேசம் செய்தார். அப்போது ஸப்தரிஷிகளும் உடன் கேட்டு அறிந்துகொண்டனர்.

அவர்களுடைய புதல்வர்களான தேவர்கள், கிம்புருஷர்கள், தானவர்கள், குஹ்யகர்கள், மனிதர்கள், சித்தர்கள், கந்தர்வர்கள், வித்யாதரர்கள், சாரணர்கள், கின்னரர்கள், நாகர்கள், அரக்கர்கள் ஆகியோர் அவரவர் குண விசேஷத்திற்கேற்ப வேதத்தை ரிஷிகளிடமிருந்து அறிந்துகொண்டனர்.

அவரவர் இயல்பு, யுக்திகளுக்கேற்ப பற்பல வாதங்கள் தோன்றின. சிலர் அவற்றை ஏற்கிறார்கள். சிலர் வேதத்திற்குப் புறம்பான பாஷண்ட மதத்தை ஏற்கிறார்கள்.

அவர்களது மனம் எந்தக் கர்மாவில் மயங்குகிறதோ அதையே மோக்ஷ ஸாதனம் என்று கூறத் துவங்கினர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment