Sunday, December 27, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 616

உத்தவா! முன்பே ஞான, பக்தி, கர்ம யோகங்கள் பற்றி விளக்கினேன். கர்மாக்களிலும், அவற்றின் பலன்களிலும் விரக்தி அடைந்து‌ அவற்றை விட்டு விட்டவர்கள் ஞானயோகத்திற்கு அதிகாரிகள் ஆவர். கர்மபலனில் ஆசை உள்ளவர்க்கு கர்மயோகமே சரி. 

கர்மபலனை முற்றிலுமாகத் துறக்காமல் முன்வினைப் புண்ணிய பலனால் என் கதைகளில் ஈடுபாடு வந்துவிட்டால் அவனுக்கு பக்தியோகம் பொருந்தும். 

எதுவரையில் கர்மாவில் போதும் என்ற நிறைவு ஏற்படவில்லையோ அதுவரை கர்மயோகம் செய்யவேண்டும். அவரவர்க்கான தர்மத்தில் நிலை பெற்று என் மீது பக்தியுடன் கர்மாக்களைச் செய்து பலனை எனக்கு அர்ப்பணிப்பது மிகவும் சுலபமான வழி.

செய்யத்தகாதன என்று அறிவுறுத்தப்படும் கர்மாக்களை விலக்கி விதிக்கப்பட்டவற்றை பக்தியுடன் செய்தால் ஸ்வர்கமும் இல்லை, நரகமும் இல்லை. வினைப்பயன் ஒட்டாமல் போவதால் கர்மத்தளை அகன்றுவிடுகிறது.

சுவர்கத்தில் இருப்பவராயினும், நரகத்தில் இருப்பவராயினும் அவர்கள் ஆசைப்படுவது மனிதப் பிறவிக்குத்தான்.

ஏனெனில் மனித உடல்தான் யோக சாதனமாக இருக்கிறது. புண்ணிய பலனால் கிடைக்கும் தேவ உடல் பெற்று ஸ்வர்கம் செல்கிறான். பாவ பலனால் யாதனா (நிழல்) உடல் பெற்று நரகம்‌செல்கிறான். இவை இரண்டும் எந்த சாதனைக்கும் பயன்படாது. விவேகமுள்ளவன் இரண்டு உடலுக்கும் ஆசைப்படக்கூடாது. உடலில் பற்று வைத்தால் பரமாத்மாவை அடையும் முயற்சி வெற்றி பெறாது.

இம்மானுட உடல் அழியும் தன்மையுடையதுதான். ஆனால் இதை வைத்துக்கொண்டு தான் பரமாத்மாவை அடைய இயலும். எனவே புத்திசாலியானவன் மரணத்திற்கு முன்பாக ஆத்ம சாதனைகளைச் செய்து பிறவிச் சுழலினின்று விடுபடும் முயற்சியில் ஈடுபடவேண்டும்.

உடல் என்ற மரத்தில் கூடு கட்டிக்கொண்டு ஜீவன் என்ற பறவை வசிக்கிறது‌. யமதூதர்கள் ஒவ்வொரு விநாடியும் மரத்தை வெட்டிக்கொண்டிருக்கிறார்கள். வெட்டிய மரத்தை விட்டு பறவை கிளம்புவதுபோல உடலின் மீது அபிமானம் இல்லாதவன் உடலை விட்டபின் மோக்ஷத்தை அடைந்துவிடுகிறான். உடலின் மீது பற்றுள்ளவனுக்கு துக்கம் மிஞ்சுகிறது.

இரவும் பகலுமாக ஒவ்வொரு நாளும்‌ ஆயுள்‌ கழிகிறது. இதை உணர்ந்து பயத்தால் பீடிக்கப்படும் மனிதன் பரமாத்ம தத்வ ஞானத்தை அடைகிறான். 

எல்லா விதமான நற்பலன்களையும் அடைவதற்கு உடல் உதவுகிறது. அது எந்த முயற்சியும் இன்றி தானாகக் கிடைத்துள்ளது. ஸம்ஸாரக் கடலை பகவானுடைய எல்லையற்ற அருளால் கடக்க உதவுவது உடல். இந்தக் கடலில் படகைச் செலுத்துவதற்குச் சிறந்த மாலுமிகளாக இருப்பவர்கள் குருமார்கள். என்னை நினைத்தால் நான் அனுகூலமான காற்றாக வந்து என் அருளால் படகைச் செலுத்துகிறேன். இவ்வாறு அனைத்து வாய்ப்புகளும் இருந்தும் அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு ஸம்ஸாரத்தை வெற்றி கொள்ளாதவன் தன் ஆன்மாவைத் தானே கொன்றவன் ஆவான்.

நரஜென்மம் அரிதானது - இதை
மறுக்காமல் மறக்காமல்
கருத்தினில் கொண்டு செயலாற்றுவாய் 
-மதுரகீதம்

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment