Friday, December 18, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 612

கண்ணன் அதன் பின் ஒவ்வொரு ஆசிரமத்திலிருப்பவரின் கடைமைகளையும் விளக்குகிறான். 

ப்ரும்மச்சாரி, இல்லறத்தான், வானப்ரஸ்தம் மற்றும் ஸந்நியாஸ தர்மங்களை விரிவாக விளக்குகிறான். நைஷ்டிக ப்ரும்மச்சர்யம், உஞ்ச வ்ருத்தி தர்மம், ஒவ்வொரு நிலையிலும் செய்யத் தக்கன எவை, தகாதன எவையெவை என்பதெல்லாம் கூறும் கண்ணன் அதே சமயம் பக்தியை விட்டுவிடக் கூடாது என்பதை வலியுறுத்துகிறான். 

பக்தனானவன் விதிக்கப்பட்ட குடும்பக் கடைமைகளைச் செய்துகொண்டு என்னை ஆராதிக்கலாம். அல்லது காட்டுக்குச் செல்லலாம். புதல்வன் இருப்பின் அவனிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு ஸந்நியாசியும் ஆகலாம். எந்த நிலையிலும் அவனது பக்தியை அவன் கைவிடாமல் இருப்பானானால் என்னால் காப்பாற்றப் படுகிறான். 

நான் ஈஸ்வரனாக இருந்தபோதிலும் கர்மாக்களை லீலையாகச் செய்கிறேன். அதே போல பக்தனும் விதிகளுக்கு அடிமையாகிச் செய்ய வேண்டியதில்லை. பலனளிப்பவன் நானே என்பதால் என் ப்ரீதிக்காக கர்மாக்களை ச்ரத்தையாகவும், சுமையாகக் கருதாமலும், அவற்றின் பிடிகளில் மாட்டிக்கொள்ளாமலும் செய்ய வேண்டும். 

ஞானிக்கு வேற்றுமை என்பதே இல்லை.

எப்போதாவது பேத புத்தி ஏற்பட்டாலும் அது மறைந்துவிடுகிறது. 

அனுபவிக்கும்போது மகிழ்ச்சி தரும் பொருள்கள் பின்னர் துன்பங்களை விளைவிக்கின்றன. 
என்னை அடையும் வழி அறியாவிடின் ப்ரும்மநிஷ்டரான ஒரு ஆசார்யரிடம் சரணாகதி செய்யவேண்டும். குருவிடம் திடமான பக்தியும் சிரத்தையும் வைக்கவேண்டும். அவரிடம் குற்றம் காணலாகாது. குருவும் நானும் ஒன்றே என்று எண்ணி பக்தி செய்யவேண்டும்.

காமத்தை அடக்காமல், புலன்களை வெல்லாமல், ஞான வைராக்யம் இல்லாமல் ஸந்நியாச ஆசிரமத்தில் இருப்பவன், மூங்கில் தண்டத்தைச் சுமந்து வயிற்றைப் போஷிப்பவன் ஆவான். அவன் ஸந்நியாச தர்மத்தை அழிப்பதோடு தனக்குள் ஆத்மாவாக விளங்கும் என்னை ஏமாற்றுகிறான். உடை மட்டும் காவியாக இருந்து உள்ளத் தூய்மை இல்லையெனில் இகத்திலும் பரத்திலும் சௌக்கியம் இல்லை.

துறவிகளின் முக்கியமான தர்மம் சாந்தியும், அஹிம்சையுமாகும்‌. வானப்ரஸ்தனின் முக்கிய தர்மம் தவமும் பக்தியும். இல்லறத்தானின் முக்கிய தர்மம் மற்ற ஜீவன்களைக் காப்பாற்றுவது, ப்ரும்மச்சர்யம், அனைவரிடத்தும் அன்பு, ஆகியவை. ப்ரும்மச்சாரியின் முக்கிய தர்மம் குரு சேவை செய்வதே‌.

இவ்விதமாக வேறு விஷயங்களில் மனத்தைச் செலுத்தாமல் எனக்குச் சேவை செய்து வருபவன், எல்லா ஜீவன்களிடமும் என்னையே காண்பவன் ஆகியோருக்கு என்னிடம் அசைக்க முடியாத பக்தி உண்டாகிறது.

அதன் காரணமாக உள்ளத் தூய்மையடைந்து தெள்ளறிவு பெற்று என்னையே அடைந்துவிடுவான்.
தன் இயல்பான கர்மாக்களுடன் பக்தியைச் சேர்த்து செய்வதே போதும். வேறு முயற்சிகள் இல்லாவிடினும் முக்திப் பாதை திறக்கும்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment