Friday, November 6, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 593

தத்தாத்ரேயர் தொடர்ந்தார்

அடுத்ததாக பிங்களை என்னும் பொதுமங்கை ஒரு காலத்துக்குப் பிறகு, தன்னைத் தேடி எவரும் வராதது கண்டு துயருற்றாள். பின்னர் அவளது சுகமான வாழ்வு பறிபோக, ஏழ்மையில் அவளுக்கு வைராக்யம் பிறந்தது. பாவச் செயல்களுக்காக வருந்தி இறைவனைச் சரணாகதி செய்தாள்.

அதன் பின் மனத்துன்பம் அனைத்தும் நீங்கி நிம்மதியாக பவித்ரமான வாழ்வை வாழ்ந்தாள்.

புலன்களுக்கு பிரியமானவற்றிற்காக மனம் ஏங்கும் வரை துன்பம் பெருகுகிறது. வாழ்விற்கு அவசியமான அளவு மட்டும் பொருளை வைத்துக்கொண்டு வாழ்பவனுக்கு நீங்காத செல்வமான நிம்மதி கிடைக்கிறது. 

அடுத்த குரு ஒரு குர்ரப் பறவை. ஒரு நாள் அதற்கு ஒரு மாமிசத்துண்டு கிடைத்தது. ஆனால் அதை நிம்மதியாக உண்ணமுடியவில்லை. ஏனெனில் மாமிசம் கிடைக்காத மற்ற பறவைகள் அதைக் கடுமையாகத் தாக்கின. தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காக அது மாமிசத்துண்டைக்‌கீழே போட்டுவிட்டது. மற்ற பறவைகள் குர்ரப் பறவையை விட்டுவிட்டு மாமிசத்தின் பக்கம் ஓடின. பொருளின் மீதுள்ள பற்றினால் துன்பம் என்பதே கருத்து.

எனக்கோ‌ மான அவமானங்கள், வீடு மக்கள், எதுவும் இல்லை. ஒரு குழந்தையைப் போல் ஆனந்தமாகச் சுற்றி வந்துகொண்டிருக்கிறேன்.

உலகில் கவலையற்றவர் இருவர். ஒன்றுமறியாத குழந்தை மற்றும் அனைத்தும் அறிந்த ஞானி.

அடுத்த பாடத்தை ஒரு பெண்ணிடமிருந்து கற்றேன். அந்தப் பெண்ணின் வீட்டுக்கு சில விருந்தாளிகள் வந்தார்கள். அவளது பெற்றோர் வெளியூர் சென்றிருந்த நிலையில் அவளே விருந்தாளிகளை உபசரித்தாள். அவர்களுக்கு சமைப்பதற்காக அரிசி எடுக்க நெல்லைக் குத்தத் துவங்கினாள். பணியாளர்கள் இன்றி தானே நெல்லைக் குத்துவதால் வந்திருப்பவர்கள் தன்னை ஏழை என்று எண்ணக்கூடும் என்று அவளுக்குத் தோன்றியது. எனவே நெல்‌குத்தும் சத்தம் வந்தவர்களுக்குக் கேட்காமல்‌ இருக்க கைகளில் இருந்த வளையல்களில் இரண்டைத் தவிர மீதி எல்லாவற்றையும் ‌கழற்றிவிட்டுக் குத்தினாள். அப்படியும் இரண்டு வளையல்கள் உராய்ந்து சத்தம் கேட்டது. பின்னர் அதிலும் ஒன்றைக் கழற்றிவிட்டுக்‌ குத்தினாள்.

சமுதாயத்தின் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுத்து அவர்களுள் ஒருவராகத்தான் வாழவேண்டும். 

மேலும் பலர் இருந்தால் வீண்பேச்சு, சண்டை வரும். எனவே அப்பெண்ணின் வளையலைப்போல ஓசையற்று தனித்திருக்கவேண்டும். மனத்தை ஒருமுகப் படுத்த அமைதியாக இருத்தல் அவசியம். 

யோகி ஆசனம், சுவாசம் ஆகியவற்றை வெல்லவேண்டும். வைராக்யம் பயின்று மனத்தை ஓரிடத்தில் நிறுத்துதல் வேண்டும்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment