Monday, June 29, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 502

அநிருத்தனைக் காணாமல் துவாரகையிலுள்ளவர்கள் கவலைப்பட்டுக்கொண்டிருந்தனர். அப்போது நாரதர் அங்கு வந்தார். அவரை முறைப்படி வரவேற்று உபசாரம் செய்தான் கண்ணன். 

நாரதர், அநிருத்தன் சோணிதபுரம் சென்ற கதையையும் தற்போதைய நிலைமையையும் எடுத்துக் கூறினார்.

அநிருத்தனை பாணன் நாகபாசத்தால் கட்டினான் என்று கேட்டதும் பலராமன் துள்ளியெழுந்தான். பன்னிரண்டு அக்ஷௌஹிணி படையைத் திரட்டிக்கொண்டு அனைவரும் கிளம்பினர்.

கண்ணனின் சேனை பாணனின் நகரை நாற்புறங்களிலும் சூழ்ந்து கடுமையாகத் தாக்கியது. 

பாணன் கோபம் கொண்டு தானும் பன்னிரண்டு அக்ஷௌஹிணி சேனையைத் திரட்டிக்கொண்டு வந்தான்.

பாணனுக்காக காவல் இருந்த பரமேஸ்வரன் அவன் சார்பில் போரிட வந்தார். தந்தையுடன் தேவசேனாதிபதியான முருகனும் சமருக்கு வந்தார்.

கண்ணனுக்கும் சிவனுக்கும், ப்ரத்யும்னனுக்கும் முருகனுக்குமாக கடும் போர் மூண்டது.

ப்ரும்மா முதலான அத்தனை தேவர்களும் பயந்துபோய் வானில் குழுமினர்.

பரமசிவனின் பரிவாரங்களான பூதகணங்கள், குஹ்யர்கள், டாகினிகள், ராக்ஷஸர்கள், வேதாளர்கள், விநாயகர்கர்கள் இன்னும் பல கணங்களையும் கண்ணன் தன் அம்புகளால் அடித்து விரட்டினான்.

பரமேஸ்வரன் விட்ட அத்தனை அம்புகளையும் அடக்கினான் கண்ணன்.

கண்ணன் ஜ்ரும்பனாஸ்திரம் என்ற அஸ்திரத்தை ஏவி பரமேஸ்வரனை மயக்கி கொட்டாவியாக விடச் செய்தான். அவர் சற்று செயலற்ற சமயத்தில் பாணனின் படைகள் முழுவதையும்‌ அழித்தான். முருகன் இது ஏதோ லீலை என்று புரிந்துகொண்டு மயில் மீதேறி போர்க்களத்தைவிட்டு வெளியேறினார்.

பாணனின் மந்திரிகள்‌ கும்பாண்டன், கூர்பாண்டன் முதலியோர் அடிபட்டு விழுந்தனர். தளபதியர் இல்லாத பாணனின் மீதிப் படை சிதறி ஓடியது.

கடுங்கோபம் கொண்ட பாணன் தானே நேராக கண்ணனுடன் போரிடச் சென்றான். ஒரே சமயத்தில் ஐநூறு விற்களை ஏந்தி ஒவ்வொன்றிலும் இரண்டிரண்டு அம்புகளைத் தொடுத்தான்.

கண்ணன் அவையனைத்தையும் ஒடித்தான். பாணனின் சாரதியையும்‌ குதிரைகளையும்‌ கொன்று தேரைச் சிதைத்தான். பின்னர் பாஞ்சஜன்யத்தை எடுத்து முழக்கினான்.

அதைக் கேட்ட பாணனின் தாய் தன் மகனுக்கு ஆபத்தென்று உணர்ந்தாள். மகனைக் காப்பாற்ற ஆடைகளின்றி கண்ணனின் எதிரில் தலைவிரிகோலமாய் ஓடிவந்தாள்.

கண்ணன் வில்லைக் கீழே வைத்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டான். கிடைத்த அவகாசத்தில் பாணன் நிராயுதபாணியாக நகருக்குள் சென்றான்.

அதற்குள் கண்ணனை ஜ்வரதேவதை எதிர்க்க வந்தது. மூன்று தலைகளும் மூன்று கால்களும் கொண்டு மஹாகோரமாய் விளங்கிய அந்த ஜ்வர தேவதையை அடக்க கண்ணன் இன்னொரு வித ஜ்வர தேவதையை அனுப்பினான். இரண்டும் தங்களுக்குள் சண்டையிட்டன. கண்ணன் அனுப்பிய தேவதையின் தாக்குதல் தாங்காமல் அந்த ஜ்வர தேவதை கண்ணனைச் சரணடைந்தது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment