Thursday, June 25, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 498

துவாரகை முழுவதும் கண்ணனின் குடும்பம் நிறைந்தது. மனைவிகள், மகன்கள், பேரக்குழந்தைகள் என்று கண்ணனின் வழித்தோன்றல்கள் லட்சக்கணக்கில் இருந்தனர்.

ப்ரத்யும்னன் ருக்மியின் மகளான ருக்மவதியைத் திருமணம் செய்தான் என்று கேட்டதும் பரீக்ஷித் கேட்டான்.

ருக்மி கண்ணனைப் பகைவனாக எண்ணுபவன் ஆயிற்றே. கண்ணனால் அவமதிக்கப்பட்டவன். கண்ணனைக் கொல்வதற்கு சமயம் எதிர்பார்த்திருந்தவன். அவன் எவ்வாறு தன் பெண்ணைக் கண்ணனின் மகனுக்குக் கொடுத்தான்.
பகைவர்களுக்கிடையே திருமண உறவு எவ்வாறு சாத்தியமாயிற்று?

நீங்கள் நிகழ்ந்தது, நிகழவிருப்பது, புலன்களுக்கப்பாற்பட்டது, தூரத்தில் இருப்பது, மறைந்துள்ளது போன்ற அனைத்தையும் நேருக்கு நேர் காண்பவராயிற்றே. எனக்கு விளக்கிச் சொல்லுங்கள். என்றான் அரசயோகி.

ஒவ்வொரு முறையும் பரிக்ஷித் கேள்வி கேட்கும்போது அதை‌மிகவும் ரசித்தார் ஸ்ரீ சுகர். கதை சொல்வதற்கு ஆர்வத்தைத் தூண்டுவது கேட்பவர்கள் எழுப்பும் கேள்விகளே.

பரிக்ஷித்தைப் பார்த்து அன்பு பொங்கும் பார்வையுடன் கூறலானார்.

ப்ரத்யும்னன் இப்போது உடலை அடைந்த மன்மதன் ஆவான்.

ருக்மிணியைக் கண்ணன் அழைத்துக்கொண்டு வந்த பின்பு, ருக்மி தங்கை இல்லாமல் விதர்ப்பதேசத்துக்குள் ப்ரவேசிக்கமாட்டேன் என்று ப்ரதிக்ஞை செய்தான். 

துஷ்டர்களாயினும் தான் சொன்ன வாக்கைக் காப்பாற்றுபவர்களாயிருந்தனர். 

எனவே ருக்மி விதர்ப்பத்திற்குள் செல்லாமல் கண்ணன் அவனை அவமானப்படுத்திய இடத்திலேயே தான் வாழ போஜகடம் என்ற ஒரு நகரத்தை அமைத்துக்கொண்டான்.

தன் மகள் ருக்மவதியின் திருமணத்திற்கு சுயம்வரம் ஏற்பாடு செய்தான். அதில் மன்மதனாகிய ப்ரத்யும்னனின் அழகில் மயங்கிய ருக்மவதி அவனுக்கு மாலையிட்டாள். 

சுயம்வரத்திற்கு வந்திருந்த மற்ற அரசர்களைத் தன் பராக்ரமத்தால் வெற்றி கொண்டு ருக்மவதியை எடுத்து வந்தான் ப்ரத்யும்னன்.

ஏற்கனவே ருக்மிணியின் கல்யாணத்தில் ஏற்பட்ட பகையினால் தங்கையின் முகத்தைக் கூட பார்க்க முடியாமல் போய்விட்டது. இப்போது மகள் விஷயத்திலும் பகை பாராட்ட விரும்பவில்லை ருக்மி. தங்கை ருக்மிணியின் மனமகிழ்ச்சிக்காகவும், மகளின் மேலிருந்த பாசத்தாலும் ருக்மவதியை ப்ரத்யும்னனுக்கு முறைப்படி மணம் முடித்துக் கொடுத்தான்.

பத்து புதல்வர்களுக்குப்‌ பின் ருக்மிணிக்கு சாருமதி என்ற அழகான மகள் பிறந்தாள். அவளை க்ருதவர்மாவின் மகன் பலி என்பவனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார்கள்.

ப்ரத்யும்னனின் மகன் அநிருத்தனுக்கு ருக்மி தன் மகன் வயிற்றுப் பேத்தி ரோசனையைத் தானே விரும்பித் திருமணம் செய்து கொடுத்தான்.

அந்தத் திருமணத்தில் பங்கேற்க ருக்மிணி, கண்ணன், பலராமன், சாம்பன், ப்ரத்யும்னன் ஆகியோர் போஜகடம் சென்றனர்.

ருக்மி தங்கையின் அன்பைப் பெறுவதற்காகவும், கண்ணனிடம் நட்பு பாராட்டவும் மகள், பேத்தி இருவரையும் கண்ணனின் மகன் மற்றும் பேரனுக்குக் கொடுத்தான். இவ்வாறு திருமணம் செய்வது தர்மமில்லை என்றாலும் தங்கையின் அன்பிற்காக இவ்வாறு செய்தான். ஆனால் எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்த ருக்மிக்கு அவனது நண்பர்கள் பகையை அடிக்கடி நினைவூட்டிக்கொண்டே இருந்தனர்.

ரோசனையின் திருமணம் முடிந்ததும் பலராமனை சூதாட்டத்திற்கு அழைக்கச் சொல்லி ருக்மியைத் தூண்டினர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment