Sunday, June 28, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 501

ஊஷையின் அன்னையர்களும், காவலர்களும் சொன்ன செய்தியைக் கேட்டு மிகவும் கவலை கொண்டான் பாணாசுரன்.

என்னதான் பெரிய அசுரன், மூவுலகத்தோரையும் நடுங்கவைக்கும் பலம் பொருந்தியவன் என்றாலும் மகள் விஷயமாக ஏதேனும் தவறு நேர்ந்தால் உள்ளிருக்கும் பாசம் மிக்க மென்மையான மனம் கலங்கத்தானே செய்யும்.

மகளை வேவு பார்க்க ஆள்களை அனுப்ப அவனது மனம் இசையவில்லை. தானே நேரில் சென்று பார்க்கலாம் என்று கன்னிமாடத்திற்குச் சென்றான்.

அப்போது அநிருத்தனும் ஊஷையும் சொக்கட்டான் ஆடிக் கொண்டிருந்தனர்.

திடீரென்று எதிர்பாராமல் பாணன் நுழைந்ததும் அநிருத்தனால் ஒளிய முடியவில்லை. 

கன்னிமாடத்தில் அழகே உருவான ஆண்மகன். மன்மதனின் மகன். கண்ணனின் மகனான ப்ரத்யும்னனும் அநிருத்தனும் நீலத் திருமேனி கொண்டவர்கள். சட்டென்று பார்க்க கண்ணனைப்போலவே இருப்பார்கள். மஞ்சள் ஆடை உடுத்திய அவன் பெரும் வீரன் என்பதை அவனது அங்க லட்சணங்கள் கூறின. தாமரை போன்ற கண்கள், சுருண்ட கேசம். இவனது அழகில் மகள் மயங்கியதில் வியப்பில்லை என்று தோன்றியது பாணனுக்கு. 

ஒரு பக்கம் இவ்வளவு பலத்த காவலைத் தாண்டி இவன் எப்படி கன்னிமாடத்திற்குள் வந்தான் என்று வியப்புதான். ஆனால் மறுபக்கம் பாணனுக்கு மஹாகோபமும் வந்தது.
 
அவனது கண்ணசைவில் படைவீரர்கள் ஓடிவந்து அநிருத்தனைச் சூழ்ந்தனர். அநிருத்தனை அப்போதே கொல்ல எண்ணி கதையை ஏந்திக்கொண்டு பாணாசுரன் நின்ற கோலம் காலதேவனே உருவெடுத்தது போல் இருந்தது.

தன்னைப் பிடிக்க வந்த காவலர்களை அலட்சியமாகப் பந்தாடினான் அநிருத்தன். அவர்கள் எலும்புகள் நொறுங்க வலி தாங்காமல் ஓடிவிட்டனர். 

பாணாசுரனின் கோபம் தலைக்கேற அநிருத்தனை நாகபாசத்தால் கட்டினான். அதைக் கண்டு ஊஷை அழத் துவங்கினாள்.

அநிருத்தனைக் காணாமல் துவாரகையில் அனைவரும் கவலையில் மூழ்கினர். 

எப்போதும் ஒருவர் எல்லா விஷயங்களையும் அறிந்துகொண்டு தானே வந்து தெளிவித்துக் கவலை போக்குவாரே..

ஆம்.. 

அவரேதான்..

அவர் துவாரகையினுள் ப்ரவேசித்தார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment