Wednesday, June 3, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 481

ருக்மியும் மற்ற அரசர்களும் பெரும்படையுடன் கண்ணனைத் துரத்திக்கொண்டு வந்தனர்.
அவர்கள் கண்ணனின் படை மீது அம்பு மழை பொழிந்தனர்.

அதைக் கண்ட ருக்மிணி பயந்து கண்ணனை இன்னும் இறுகப் பிடித்துக்கொண்டாள்.

கண்ணன் சிரித்துக்கொண்டே 

 க்ஷத்ரிய கன்னிகையே! பயப்படாதே! இவர்கள் அனைவரும் இப்போதே அழிக்கப்படுவர் என்றான்.

பலராமன் எதிரிகளின் யானைப்படையை முற்றிலுமாக அழித்தான்.

தேர்கள் முறிக்கப்பட்டன.
சண்டைக்கு வந்த அத்தனை வீரர்களின் அங்கங்களும் அறுக்கப்பட்டன.

கண்ணனின் படைகள் மிகவும் ஆக்ரோஷமாகத் தாக்குவதைக் கண்டு சால்வன் முதலான அரசர்கள் எஞ்சிய வீரர்களுடன் போர் முனையிலிருந்து பின்வாங்கி ஓடினர்.

ஜராசந்தன் சிசுபாலனிடம்

வருந்தாதே நண்பா! வெற்றி தோல்வியெல்லாம் வினைப்பயனாகும். நம் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும் பகவான் ஆட்டிவைப்பதாலேயே நடக்கிறது.

நான் பதினேழு முறை கண்ணனிடம் தோற்றபோதும் வருந்தவில்லை. விதியால் ஏவப்பட்ட காலம் என்னை விரட்டுகிறது என்று அமைதியாய் இருந்தேன்.

இப்போதும் நமது பெருஞ்சேனையை யாதவர்களின் சிறுபடை தோற்கடித்தது என்றால் அதற்குக் காரணம் விதியே அன்றி வேறில்லை.

இப்போது காலம் அவர்களுக்குச் சாதகமாக இருக்கிறது. நமக்கொரு காலம் வரும். அப்போது நாமும் வெல்லலாம். இப்போது இவ்விடம் விட்டுக் கிளம்பலாம் வா. என்று சொன்னான். 

சிசுபாலனைச் சார்ந்து வந்திருந்த அத்தனை அரசர்களும் மீதமிருந்த சேனையுடன் சொல்லிக்கொள்ளாமல் கிளம்பி தத்தம் நகரம் திரும்பினர்.

அனைவரும் திரும்பி ஓடிவிட்டபோதும் ருக்மிணியின் அண்ணனான ருக்மி விடுவதாயில்லை. தோல்வியை ஏற்க மறுத்தான். மீதமிருந்த ஒரு அக்ஷௌஹிணி சேனையைத் திரட்டிக்கொண்டு கண்ணனுடன் சமர் செய்யப் புகுந்தான்.

தோற்றோடிய அரசர்கள் முன்னால் 

கோழைகளே! என் தங்கையைத் திரும்ப அழைத்து வராமல் ஊர் திரும்பமாட்டேன். இது சத்தியம் என்று சூளுரைத்து விட்டிருந்தான்.

ரதத்தை நேராகக் கண்ணனிடம் ஓட்டிச் சென்று அவனுடன் நேருக்கு நேராக யுத்தத்திற்கு அழைத்தான்.

ஹே இடையனே! மாடு மேய்க்கும் உனக்கு அரசகுலப் பெண் வேண்டுமா? இப்போதே உன்னை என் பாணங்களால் பிளந்துவிட்டு என் தங்கையை என்னுடன் அழைத்துச் செல்வேன் என்று கத்தினான்.

கண்ணன் அவனுடன் போர் செய்ய விரும்பாமல் தொடர்ந்து ரதத்தைச் செலுத்தப் பணித்தான்.

ருக்மி அவன் பின்னாலேயே நில் நில் என்று கத்திக்கொண்டே துரத்திச் சென்று அம்புகளை எய்தான். அம்புகள் ருக்மிணியின் மேல் பட்டுவிடப்போகிறதே என்று அவற்றைப் பிடித்து ஒடித்துப் போட்டான் கண்ணன். பின்னர் தன் வில்லை எடுத்து ருக்மியை‌ நோக்கி ஒரே சமயத்தில் ஆறு‌ அம்புகளை எய்தான். அவனது வில் முறிந்து போயிற்று. மேலும் எட்டு அம்புகளால் குதிரைகளையும், இரண்டு அம்புகளால் தேரோட்டியையும், மூன்று அம்புகளால் தேரின் கொடியையும் அறுத்தான்.

ருக்மி மறுபடி வில்லை எடுக்க அதுவும் முறிக்கப்பட்டது. மேலும் ருக்மி எந்த ஆயுதத்தை எடுத்தாலும் அடு எடுக்கும் தறுவாயிலேயே உடைக்கப்பட்டது.

ருக்மியின் தேரையும் முறித்தான் கண்ணன். அவன் வாளை உருவிக்கொண்டு கண்ணனைத் தாக்க வந்தான். அவனைக் கொல்ல தானும் வாளை எடுத்தான் கண்ணன்.

கண்ணனின் பராக்ரமம் அனைத்தையும் நேரில்‌ கண்ட‌ ருக்மிணி தன் அண்ணனைக் கொன்றுவிடுவான் என்று பயந்தாள். உடனே கண்ணனின் திருவடிகளில் விழுந்தாள்.

ஹே! நாதா! நீங்கள் அளவிலாப் பெருமைகள் கொண்டவர். இன்று நமக்கு மிகவும் நன்னாளாகும். இச்சமயத்தில் என் தமையனைக் கொல்லலாகாது. என்று வேண்டினாள்.

கண்ணன் ருக்மியின் வாளைத் தட்டிவிட்டு அவனை கருடன் பாம்பைப்‌ பிடிப்பது போல் பிடித்தான்.

ருக்மிணி பயப்படுவதைப் பார்த்து, கண்ணனின் மனம் இளகியது. ருக்மியைக் கொல்லாமல் விட்டான். ஆனாலும் அவனுடைய கேசத்தையும் மீசையையும் மழித்து ஐந்து குடுமிகள் வைத்து அலங்கோலமாக்கினான்.

கேசத்தை மழிப்பது உயிரை விடுவதற்குச் சமமாகக் கருதப்படுகிறது. அதனாலேயே இன்றும் இறைவனிடம் ஏதாவது வேண்டிக்கொள்ளும் சமயத்தில் ஆத்மாவை சமர்ப்பணம் செய்வதற்கு அடையாளமாக மொட்டையடித்துக்கொள்ளும் வழக்கம் பின்பற்றப்படுகிறது.

அப்போது அருகே வந்த பலராமன் கண்ணனைக் கண்டித்தான். 

கண்ணா! இது நல்லதற்கல்ல. உன்னை நம்பி வந்தவளின் உறவினன் இவன். அலங்கோலப்படுத்துவதும் கொலைக்குச் சமம். இவனை விட்டுவிடு என்றான். பின்னர் ருக்மிணியைப் பார்த்து,

மங்களமானவளே! எங்களைத் தவறாக எண்ணாதே. இவன் க்ஷத்ரிய குலப் பெண்ணான உன் விருப்பத்தை மதிக்காமல் விவாஹத்தை எதிர்த்து கொல்ல வந்து விட்டான். இவனைச் சும்மா விட இயலாது. அவன் தன் வினைப்பயனையே அனுபவிக்கிறான். 
என்றான்.

மீண்டும் கண்ணனிடம் 
கொலை செய்யத் தக்க தவறிழைத்தாலும் உறவினனைக் கொல்வது சரியல்ல. உறவைத் துண்டித்துவிடலாம். அதுவே கொலைக்குச் சமமாகும். செருக்கினால் அவ்வாறு வீணாக ஒதுக்கிவைப்பவர்கள் பலனை அனுபவிப்பார்கள்.

மாயைக்கு வசப்படுபவர்களுக்கே நண்பன், எதிரி என்ற வேற்றுமைகள் தெரியும். 

என்று சொல்லி மேலும் படைப்பின் தத்துவங்களை ருக்மிணிக்கு விளக்கினான். 

பின்னர், இத்துயரத்தை எண்ணி மனம் கலங்காதே. என்று கூறினான்.

புதிதாக இன்று வந்த பெண் தங்களைத் தவறாக எண்ணக்கூடாது. அதே சமயம்‌ கண்ணனை விட்டுக்கொடுக்கவும் இயலாது. இவ்விரண்டையும் மிக அழகாக சமன் செய்து பேசினான்‌ பலராமன்.

மஹாலக்ஷ்மியே ஆனாலும் பெண்களுக்கு பிறந்தவீட்டுப் பாசம் அறுக்க இயலாத ஒன்று. தன் தமையனை எண்ணிக் கலங்கியிருந்த ருக்மிணிக்கு பலராமனின் உபதேசம் ஆறுதல்‌ அளித்தது.

அவர்கள் ருக்மியை அப்படியே விட்டுவிட்டு படையுடன் துவாரகைக்குக் கிளம்பினார்கள்.

ருக்மிணி இல்லாமல் ஊருக்கு வரமாட்டேன் என்று சூளுரைத்துவிட்டபடியால் ருக்மியால் மீண்டும் விதர்ப்ப தேசத்திற்குள் போக இயலவில்லை. துஷ்டர்களே ஆனாலும் வாக்கைக் காப்பாற்றுபவர்களாக இருந்தார்கள் என்பதை ப் கவனிக்க வேண்டும். ருக்மி தான் இருந்த இடத்திலேயே போஜகடம் என்ற ஒரு புதிய நகரத்தை நிர்மாணித்துக்கொண்டு அங்கேயே வசிக்கத் துவங்கினான். போஜகடம் என்றால் போஜனான ருக்மி சபதம் செய்த இடம்‌ என்று பொருள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment