Thursday, June 4, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 482

துவாரகையை அடைந்ததும் ருக்மிணியை அழைத்துச் சென்று தேவகி மாதாவிடம்‌ ஒப்படைத்தான் கண்ணன். வசுதேவர் கர்காசார்யர் முதலிய குல ப்ரோஹிதர்களைக் கொண்டு ஒரு நல்ல திருநாளை நிச்சயம் செய்தார்.

அனைத்து தேசத்து அரசர்களுக்கும் கண்ணன் மற்றும் ருக்மிணியின் திருமணத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டது.

துவாரகையின் மக்கள் அனைவரும் கண்ணனைத் தங்கள் வீட்டுப் பிள்ளை என்றே எண்ணினர். அவரவர் வீடுகளைத் தோரணங்களாலும் மாலைகளாலும் தீபங்களாலும் அலங்கரித்தனர். ஏராளமான அன்பளிப்புகளைக் கொண்டுவந்து கண்ணனுக்கு அளித்தனர்.

அழைப்பை ஏற்று வந்த மன்னர் பரிவாரங்களால் துவாரகையின் வீதிகள் அனைத்தும் நிறைந்தன.

கண்ணன் ருக்மிணியைக் கடத்தி வந்த கதையை உடன் சென்ற வீரர்கள் மூலம் கேட்டு ஆங்காங்கே அதைப்பற்றிய  பாடல்களைப் பாடி ஆடினர்.

துவாரகையின் மக்கள் அனைவரும் கண்ணனின் திருமணத்தைக் காண விரும்பியதால்‌ நகரின் மத்தியில் வெட்ட வெளியில்   ஆயிரம் கால்களைக் கொண்ட  ஒரு அழகிய ஸ்வர்ண மண்டபம் அமைக்கப்பட்டது. 
ஏராளமான ரத்தினங்கள் பதிக்கப்பட்டு ஒளிர்ந்தது அம்மண்டபம்.
பூலோகத்தில் நடக்கும் பரவாசுதேவனின் திருமணத்தைக் காண அனைத்து யோகிகளும் முனிவர்களும் தேவர்களும்  வந்துவிட்டனர்.

மகளின் திருமணத்தைக் காண பீஷ்மகரும் வந்துவிட்டார். அவளுக்கான அத்தனை சீர் வரிசைகளையும் குறைவின்றிக் கொண்டு வந்திருந்தார்.

பேரழகி ருக்மிணியை திருமணக்கோலத்தில்  கண்டவர் அனைவரும் இவள் மஹாலக்ஷ்மியேதான் பேசிக்கொண்டனர்.
அவள் சூட்டிய மணமாலையின் மீது மகரகுண்டலம் வசதியாய் அமர்ந்துகொண்டது.

கந்தர்வர்கள் வந்து கன்னூஞ்சலுக்குப் பாடினர். அப்ஸரஸ்கள் நாட்டியமாட அனைவரும் தேவலோகத்தில் இருப்பதாகவே உணர்ந்தனர்.

அனைவரும் வாழ்த்த மங்கை ருக்மிணியின் கழுத்தில் தங்கமணி மாலையிட்டான் கண்ணன். திருமணச் சடங்குகள் அனைத்தையும் மற்ற தவ ச்ரேஷ்டர்களுடன் இணைந்து குறைவற நடத்தி வைத்தார் கர்காச்சாரியார்.

துவாரகையில் எழுப்பப்பட்ட கெட்டிமேளச் சத்தம் தேவலோகம் வரை ஒலித்தது.

ஸ்ரீ ருக்மிணி ஸமேத க்ருஷ்ண சந்திரன் ரத்ன ஸிம்மாசனத்தில் அமர்ந்து அருள் செய்த காட்சியைக் கண்டவர் அனைவரும் சொல்லோணாத பேரின்பத்தை அடைந்தனர்.

த்3வாரகாபுர மண்டபே
த்3வாத3சாதி3த்ய ஸந்நிபே4
பூ4ரிரத்ன ஸிம்மாஸனே
பூ4ஸுரகணே
வீராஸனே ஸுகா2ஸீனம் விஶ்வமங்கள தா3யினம்
தீ4ரயோகி3 ஸம்ஸேவனம் 
தே3வகீ வஸுதே3வ ஸூனும்

ஆலோகயே ருக்மிணி கல்யாண கோ3பாலம்

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment