Thursday, June 11, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 487

ஸ்யமந்தக மணியைக் கண்ணனிடமிருந்து பெற்றுக்கொண்ட ஸத்ராஜித்துக்கு சுய பச்சாதாபம் அதிகமாகிவிட்டது. அநாவசியமாக கண்ணன் மீது பழி போட்டுவிட்டதற்காக மிகவும் வெட்கினான். தலையைக் குனிந்துகொண்டு வீடு சென்றாலும் அமைதியின்றித் தவித்தான். அதற்காக ஏதாவது ப்ராயசித்தம்‌ செய்துவிட அவனது மனம் துடித்தது.

கண்ணனை மகிழ்விக்க ஒரு உபாயம் தேடினான்.
எதைச் செய்தால் தன்மீதுள்ள பழி போகுமென்று பலவாறு யோசித்தான். கண்ணனிடமே‌ மணியைக் கொடுத்துவிடலாம் என்றெண்ணினான். ஆனால், கண்ணன் வாங்க மறுத்தால் என்ன செய்வது?

ரத்தினம் போன்ற தன் மகளைக் கண்ணனுக்குக் கொடுத்து சீராக ஸ்யமந்தக மணியைக் கொடுத்து விட முடிவு செய்தான்.

தானாகவே கண்ணனிடம் சென்று ஸத்யபாமையைத் திருமணம் செய்துகொடுக்க விரும்புவதாகத் தெரிவித்தான். ஸத்யபாமைக்கும் தன்னை மணம் செய்ய விருப்பம் என்றறிந்தபின் கண்ணன் சம்மதம் தெரிவித்தான்.

நல்லதொரு திருநாளில் ஸத்யபாமாக்கும் கண்ணனுக்கும் முறைப்படி வெகு விமரிசையாகத் திருமணம் நடைபெற்றது. ஸத்யபாமையைத் திருமணம் செய்ய பல அரசர்கள் போட்டி போட்டுக்கொண்டிருந்தனர். ஆனால், ஸத்ராஜித்தே இந்தத் திருமணத்தை விரும்பி ஏற்பாடு செய்துவிட்டதால் அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அனைவரும் வந்து வாழ்த்திவிட்டுச் சென்றனர்.

தன் மகளுக்குச் சீராக ஸ்யமந்தக மணியைக் கண்ணனிடம் கொடுத்தான் ஸத்ராஜித்.

ஆனால், கண்ணனோ அது தங்களிடமே இருக்கட்டும். ரத்தினம் போன்ற தங்கள் மகளை ஏற்கிறேன். தாங்கள் விரும்பினால் மணியின் பயனாக தினசரி கிடைக்கும் எட்டு பாரம் தங்கத்தை அரசரிடம் ஸமர்ப்பியுங்கள். அவற்றைக் கொண்டு இன்னும் தானங்களும் ஸத்காரியங்களும் நிகழ்த்தலாம். ஸத்காரியங்கள் ஏராளமாக நடைபெறுவதற்காகவும் அவற்றால் மங்களம் பெருகவுமே ஸ்யமந்தகம் செல்வத்தை அளிக்கிறது. மணி தரும் செல்வத்தை கஜானாவில் வைத்துப் பூட்டினால் அது ஆளை விழுங்கிவிடும் என்றான்.

ஸத்ராஜித்தும் அதற்கு உடன்பட்டான். எப்படியோ கண்ணன் மனம் மகிழ்ந்ததே அவனுக்குப் போதுமாக இருந்தது. மீண்டும் கண்ணன் சொல்லைத் தட்டும் துணிவில்லை அவனுக்கு.

ஆனந்தமாக வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது.

 அவ்வமயம் பாண்டவர்களும் குந்தியும் அரக்கு மாளிகையோடு எரிந்துபோய்விட்டதாக அஸ்தினாபுரத்திலிருந்து தகவல் வந்தது.
கண்ணனுக்கு அவர்கள் தப்பிச்சென்றது தெரியும் என்றாலும் அதை யாரிடமும் கூறவில்லை. கால ஓட்டத்திற்கேற்ப ஞானியைப்போல் நிகழ்வுகளை வேடிக்கை பார்த்துக்கொண்டும் நடித்துக்கொண்டும் இருந்தான்.

சூரசேனரின் மகள் ப்ருதை. வசுதேவரும் சூரசேனரின் மகனாவார்.

தன் சகோதரரான குந்தி போஜனுக்கு சந்ததி இல்லாததால் சூரசேனர் தன் மகளான ப்ருதையை அவருக்கு ஸ்வீகாரமாகக் கொடுத்தார்.

குந்திபோஜனின் மகளான ப்ருதை குந்தி என்ற பெயர் பெற்றாள். தந்தையின் சகோதரி என்ற வகையில் குந்தி கண்ணனுக்கு அத்தையாவாள்.

அத்தையும் அத்தையின் வாரிசுகளும் இறந்ததைக் கேள்விப்பட்டதும் உறவுமுறைய அனுசரித்து துக்கம்‌ கேட்பதற்காக பலராமனும் கண்ணனும் அஸ்தினாபுரம் சென்றனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment