Saturday, June 27, 2020

ஸ்ரீ மத் பாகவத பழம் - 500


ஒரு நாள் பாணாசுரன் நகரைச் சுற்றி வரும்போது பரமேஸ்வரனைக் கண்டான். 
அவரை நமஸ்காரம் செய்தான். பின்னர் மிகுந்த செருக்குடன்,

ஐயனே தாங்கள் எனக்கு ஆயிரம் கரங்களைக் கொடுத்தீர்கள். ஆனால் அவை எனக்குச் சுமையாய் உள்ளன. என்னை எதிர்க்கும் வல்லமையுள்ள யாரும் மூன்று லோகங்களிலும் இல்லை. 
நான் தினவெடுத்தவனாக மலைகளை உடைத்து திக்கஜங்களைத் தாக்கினேன். அவை பயந்து ஓடிவிட்டன. என்று கூறிச் சிரித்தான்.

வரத்தினால் பெற்ற சக்தியை அவன் தவறாகப் பயன்படுத்துவதைக் கேட்ட பரமேஸ்வரன் கோபம் கொண்டார்.
முட்டாளே! என்னையொத்தவன் ஒருவன் வருவான். உன் திமிரை அடக்கும் போர் அவனுடன் நேரும் என்று கூறினார்.

சண்டையில் மிகுந்த விருப்பம் கொண்ட பாணன் அதைக் கேட்டு மகிழ்ந்தான். 

பாணனின் மகளின் பெயர் ஊஷை என்பதாம்.
அவளது கனவில் கண்ணனின் பேரனான அநிருத்தன் அடிக்கடி தோன்றினான். கனவில் கண்ட அவனைக் காதலிக்கத் துவங்கினாள் ஊஷை.

பாணாசுரனின் மந்திரி கும்பாண்டன் என்பவன். அவனது மகள் சித்ரலேகா என்பவள் இளவரசியின் தோழியாவாள். 

அவள் தன் தோழி, கனவில் கண்ட வாலிபன் யாரென்று கண்டுபிடிக்க பல்வேறு இளவரசர்களின் உருவங்களை வரைந்து காண்பித்தாள். பின்னர் தேவர்கள், அசுரர், வித்யாதரர், கின்னரர், ஸித்தர் யக்ஷர் அனைவரையும் வரைந்தாள். ஊஷையோ அவர்களுள் எவருமில்லை என்றாள்.

பின்னர் மனிதர்களை வரைந்தாள். சூரர், வசுதேவர், பலராமன், கண்ணன், ப்ரத்யும்னன் என்று வரிசையாக வரைந்து தள்ளினாள். ப்ரத்யும்னனைப் பார்த்ததும் மாமனார் என்பதால் ஊஷை வெட்கமடைந்தாள். பின்னர் ப்ரத்யும்னனின் மகனான அநிருத்தனை வரைந்ததும் இவர்தான் இவர்தான் என்று குதித்தாள் ஊஷை.

மிகுந்த யோகசக்தி வாய்ந்த சித்ரலேகா அநிருத்தன் துவாரகையிலிருப்பதைக் கண்டுபிடித்தாள். 

உடனே இரவு வேளையில் வான் வழியாகச் சென்று துவாரகையை அடைந்தாள். அங்கே அழகிய மாளிகையில் பஞ்சணையில் உறங்கிக்கொண்டிருந்தான் அநிருத்தன். அவனைக் கட்டிலோடு சோணிதபுரம் தூக்கிக்கொண்டு வந்து ஊஷையிடம் விட்டாள்.

கண்விழித்த அநிருத்தனுக்கு ஒன்றும் புரியவில்லை. பின்னர் சித்ரலேகா  அவனுக்கு ஊஷையின் காதலைக் கூற, பேரழகியான அவளைக் கண்டதும் அவனும் காதல் கொண்டான்.

அவனை அங்கேயே மறைத்துவைத்தார்கள் இருவரும். ஊஷையும் அநிருத்தனும் கன்னிமாடத்திற்குள்ளேயே களித்திருந்தனர்.

ஊஷையின் அன்பினாலும் உபசரிப்பினாலும் அநிருத்தன் தான் எங்கிருக்கிறோம், வந்து எத்தனை நாள்களாயிற்று என்பதையெல்லாம் மறந்துவிட்டான்.

ஊஷையிடம் ஏற்பட்ட மாறுதல்களைக் கண்ட மற்ற அரசியரும் வீரர்களும் அதற்கான காரணம் என்னவென்றறிய முயன்று தோற்றனர்.

திருமணவயதில் இருக்கும் அவளது கன்யாவிரதம் பங்கமாகுமோ என்றஞ்சி, பாணனிடம் முறையிட்டனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment