Thursday, June 18, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 493

முரனைக் கண்ணன் கொன்றதும் அவனது ஏழு புதல்வர்களும் கண்ணனுடன் சமருக்கு வந்தனர்.

பீடன் என்ற சேனாதிபதியின் தலைமையில் வந்த அவர்களைக் கண்ணன் தன் அம்புகளால் துண்டு துண்டாக ஆக்கினான்.

அதைக் கண்டு நரகாசுரனே நேரில் யுத்தம் செய்ய பெரிய யானைப் படையுடன் வந்தான்.

நூற்றுக் கணக்கானவர்களை ஒரே சமயத்தில் தாக்கும் சதக்னீ என்ற வேலை கண்ணன் மீது வீசினான் நரகன். கண்ணன் அவனது வேலை உடைத்ததோடு நரகனின் படையையும் த்வம்சன் செய்தான். 

கண்ணனைத் தாங்கிக் கொண்டிருந்த கருடனும் தன் இறக்கைகளால் யானைகளைத் தாக்கினார்.

நரகன் கருடன் மீது வஜ்ராயுதத்தை வீச, அது யானையைப்‌ பூமாலையால் அடிப்பதுபோல் கருடன் தாங்கிக் கொண்டார்.

நரகன் சூலத்தை ஏந்திக்கொண்டு கண்ணனைத் தாக்க ஓடிவந்தான். அதைக் கண்ட ஸத்யபாமா ஸ்வாமி! அவன் பயங்கரமானவனாக இருக்கிறான். அவனைக் கொல்லுங்கள் என்று கூறி வாளை எடுத்துக் கொடுத்தாள்.

கண்ணன் ஒரு புன்னகையுடன் அவள் கொடுத்த வாளை வாங்கி அதைக் கொண்டு யானையின் மேலிருந்த நரகாசுரனின் தலையை வெட்டினான்.

பூமியில் விழுந்தாலும் நரகனின் தலை மிகவும் ஒளியுடன் விளங்கியது. தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.

அப்போது பூமாதேவி ஓடிவந்து அதிதியின் ஒளிமிக்க குண்டலங்கள், வருணனின் குடை, தேவர்களுக்குச் சொந்தமான மந்தர மலையின் கொடுமுடி ஆகியவற்றைக் கண்ணனிடம் ஸமர்ப்பித்தாள்.
வைஜயந்தி மாலையைக் கண்ணனின் கழுத்தில் இட்டாள்.

பின்னர் கண்ணனை வணங்கித் துதி செய்தாள்

தேவாதிதேவரே! உமக்கு நமஸ்காரம். சங்கு சக்கரம் ஏந்தியவரே! பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவரே! தாமரையைத் தொப்புளில் உடையவரே! தாமரை மாலை அணிபவரே! தாமரைபோன்ற திருவடிகளை உடைவரே! உமக்கு நமஸ்காரம்!

பக்தர்களின் தாபங்களை நீக்கிக் குளிர்விக்கும் தாமரைக் கண்ணரே! தாமரைப் பூவைப்போல் அனைவராலும் கொண்டாடப்படுபவரே!

உமக்கு நமஸ்காரம்!

நம: பங்கஜநாபா4ய நம: பங்கஜ மாலினே |
நம: பங்கஜநேத்ராய நமஸ்தே பங்கஜாங்க்3ரயே||

இதே ஸ்லோகத்தை குந்தியும் கூறித் துதித்தது நினைவிருக்கலாம்.

தாங்களே பகவான். எங்கும் நிறைந்து விளங்கும் நீர் விளையாட்டிற்காக வசுதேவரின் புதல்வராக அவதாரம் செய்திருக்கிறீர்.

மாயைக்கு முன்பாக ஸத் ஸ்வரூபமாக விளங்குபவரே! அனைத்து காரணங்களுக்கும் மூலகாரணர் தாங்களே! ஞானஸ்வரூபரே! தங்களுக்கு நமஸ்காரம்!

தாங்கள் பிறப்பற்றவர்! பேராற்றல் கொண்டவர்! ப்ரபஞ்சத்தின் அனைத்து பொருள்களின் ஆத்மா ஆவீர்! அனைத்தும் தன்னிச்சையாக செயல்படுவதற்கும் தாங்களே காரணம்!
தங்களுக்கு நமஸ்காரம்!

இந்த நரகனுக்கு தாங்கள் முக்தியளிக்கவேண்டும். மேலும் அவன் புகழ் உலகம் நிலைபெறும்வரை நிற்கவேண்டும். இந்த பகதத்தன் நரகனின் புதல்வன் ஆவான். இவனுக்கு ஆசீர்வாதம் நல்குங்கள். என்றாள்.

பகதத்தன் கண்ணனை வணங்க, கண்ணன் அவனுக்கு அபயம் அளித்தான்.

பின்னர் பாமாவை அழைத்துக்கொண்டு ப்ராக்ஜோதிஷபுரத்திற்குள் நுழைந்தான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment