Friday, June 12, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 488

கண்ணன், பலராமன் இருவரும் துவாரகையில் இல்லாத சமயம் ஒரு சதி அரங்கேறியது.

அக்ரூரர் கண்ணனின் அத்யந்த பக்தர். ஆனால், மாயை என்பது எப்பேர்ப்பட்ட பக்தர்களையும் ஒரு கை பார்த்து விடுகிறது. இறைவனை ஒரு கணம் மறந்தாலும், மாயை ஆட்கொள்ளத் துடித்துக்கொண்டிருக்கிறது என்பது அக்ரூரரைப் பார்த்து நாம் அறியவேண்டிய பாடம்.

க்ருதவர்மாவும் அக்ரூரரும் சததன்வாவின் நண்பர்கள். சததன்வா ஒரு சிற்றரரசனாக விளங்கினான். 
கவனிக்கவும். கண்ணன் அரசன் அல்ல. உக்ரசேனரின் தலைமையிலேயே ஆட்சி நடைபெற்று வந்தது.
ஸ்யமந்தகமணி தந்த செல்வம் அவர்களின் கண்களை உறுத்திற்று. அளவுக்கதிகமான செல்வம் ஆபத்தை விளைவிக்கும்.

அக்ரூரரும் க்ருதவர்மாவும் கண்ணன் ஊரில் இல்லாத சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு சததன்வாவிடம் சென்றனர்.

என்ன இருந்தாலும் சத்ராஜித் செய்தது பெரும் தவறு. ரத்தினம் போன்ற சத்யபாமாவை உனக்குத் திருமணம் செய்துதருவதாக எங்கள் முன்னால் வாக்களித்தான். ஆனால், என்னவோ சொல்லி கண்ணனுக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டான். இப்போது கண்ணன் பலராமன் இருவரும் ஊரில் இல்லை. அஸ்தினாபுரம் வரை போயிருக்கும் அவர்கள் திரும்ப சில மாதங்களாகும்.  சத்யபாமா கிடைக்காவிட்டால் பரவாயில்லை. ஆனால் ஸ்யமந்தகமணியை வைத்துக்கொள்ளும் தகுதி சத்ராஜித்துக்கு இல்லை. நீ அதைக் கவர்ந்து வந்துவிடு என்று தூபம் போட்டார்கள்.

ஏற்கனவே பாமா கிடைக்காததால்  சத்ராஜித்தின் மீது மிகுந்த கோபத்தில் இருந்தான் சததன்வா. இப்போது அவனது பொல்லாத வேளையும் சேர்ந்துகொண்டது. நண்பர்களின் தூண்டுதலால் வெறிகொண்டு கிளம்பிச் சென்றான். நள்ளிரவில் சத்ராஜித்தின் அரண்மனைக்குள் சாமர்த்தியமாகச் சென்று உறங்கிக்கொண்டிருந்தவனின் தலையைக் கொய்தான். சத்ராஜித்தின் கழுத்திலிருந்த ஸ்யமந்தகமணியைப்‌ பறித்துக்கொண்டு வந்துவிட்டான்.

பொழுது விடிந்ததும் தந்தை கொல்லப்பட்டதைக் கேட்ட ஸத்யபாமா அலறித் துடித்தாள்.
கதறி கதறி மயங்கி விழுந்தாள்.

தந்தையின் உடல் கெடாமல் எண்ணெய்க் கொப்பறையில் போட்டுவைத்தாள். ஸத்ராஜித்துக்கு மகன்கள் இல்லாததால் ஈமக்கடன்களைச் செய்யும் அதிகாரம் மருமகனான கண்ணனைச் சார்ந்தது.
கண்ணனை உடனே அழைத்து வருவதற்காக தானே தேரிலேறி அஸ்தினாபுரம் புறப்பட்டாள் பாமா.

பாண்டவர்கள் இறக்கவில்லை என்று விதுரரும் ஊகித்திருந்தார்‌. இருந்தாலும் அவரும் யாரிடமும் கூறவில்லை. துக்கத்தில் ஆழ்ந்திருந்த பீஷ்மர், த்ருதராஷ்ட்ரன், காந்தாரி முதலியவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்கள் கண்ணனும்‌ பலராமனும்.

அப்போது ஸத்யபாமா அங்கு வந்து சேர்ந்தாள். அவள் கூறிய விவரங்கள் கேட்டு மிகவும் வருந்தினான் கண்ணன்.

பலராமனுக்கும் மிகவும் கஷ்டமாக இருந்தது. இருவரும் உடனடியாக பாமாவை அழைத்துக்கொண்டு துவாரகை வந்து சேர்ந்தனர்.

சத்ராஜித்தைக் கொன்றது சததன்வா என்று கண்டுபிடிக்க கண்ணனுக்கு வெகுநேரம்‌ பிடிக்கவில்லை. அங்கிருந்தவர்கள் கூறிய விவரங்களும் அதை ஊர்ஜிதம் செய்ய, சததன்வாவைத் தேடிச் சென்றான் கண்ணன்.

கண்ணன் தன்னைத் தேடுவதை அறிந்த சததன்வா ஒளிந்துகொண்டான். ஓடிச்சென்று க்ருதவர்மாவிடம் தன்னைக்‌ காப்பாற்றும்படி வேண்டினான்.


நண்பனைத் தீயசெயல்களைச் செய்யச் சொல்லி ஏவி்விட்டு அவன் மாட்டிக்கொள்ளும் தருணத்தில் கைவிட்டார்கள் க்ருதவர்மாவும் அக்ரூரரும்.

கண்ணன் ஸர்வேஸ்வரன். பகவான். பலராமனும் அவ்வாறே. அவர்களை எதிர்க்கும் துணிவு எனக்கில்லை. கம்சன் எவ்வளவு பெரிய பலசாலி. அவனையே கொன்றவன் கண்ணன். ஜராசந்தன் கண்ணனிடம் பதினேழு முறை தோற்று நிராயுதபாணியாகச் சென்றவன். இந்தக் கண்ணன் கோவர்தன மலையை ஒருவிரலால் தூக்கியவன். ஏதோ விளையாட்டிற்காக அவதாரம் செய்திருக்கிறான்.
அவன் ஆதி அந்தமற்ற பரம்பொருள். அவனைப் பகைக்கலாகாது என்றான் க்ருதவர்மா. அக்ரூரரும் இதேமாதிரி கூறி சததன்வாவைக் கைவிட்டார். 

என்ன செய்வதென்று தெரியாமல் தன்னிடம்‌ இருந்த ஸ்யமந்தகமணியை அக்ரூரரிடம்‌ கொடுத்துவிட்டு ஒரு குதிரையின் மீதேறித் தப்பி ஓடினான் சததன்வா.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment