Sunday, June 30, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 285

மாந்தாதா ஆன்ம ஸ்வரூபத்தை நன்கறிந்தவன். இருப்பினும் நிறைய தக்ஷிணைகள் கொடுத்து பெரு வேள்விகளைச் செய்தான். 
யக்ஞஸ்வரூபனான நாராயணனை ஆராதித்தான்.
எம்பெருமானைத் தவிர இரண்டாவதாக எதுவுமே இல்லை. வேள்வி, அவியுணவு, மந்திரங்கள், செயல்முறை, வேள்வியை நடத்தும் யஜமானன், ரித்விக்குகள், வேள்வியின் பயன், வேள்வி செய்யும் காலம், திரவியங்கள் அனைத்துமே பகவானின் ஸ்வரூபம் என்று எண்ணினான்.

பூமண்டலத்தில் சூரியன் உதிக்கும் இடம் முதல், மறையும் இடயும் வரை அவனது ஆட்சியின் கீழ் இருந்தது.

மாந்தாதாவின் மனைவி சசபிந்துவின் மகளான பிந்துமதி. மகன்கள் புருகுத்ஸன், அம்பரீஷன் (சுதர்சனத்திடமிருந்து துர்வாசரைக் காத்த அம்பரீஷன் அல்ல), முசுகுந்தன் ஆகியோர். பெண்குழந்தைகள் ஐம்பதுபேர். அவர்கள் அனைவருமே சௌபரி என்னும் முனிவரை மணக்க விரும்பினர்.

ஒரு சமயம் சௌபரி யமுனை நதியில் நீருக்கடியில் அமர்ந்து யோகம் செய்து கொண்டிருந்தார்.
எவ்வளவுதான் வைராக்யமாக இருந்தாலும் யோகிகளையும் கூட உலக விஷயங்கள் ஒரு கணத்தில் கவிழ்த்துவிடுகின்றன. காட்டில் தவம் செய்தால் தொந்தரவு வருமோ என்று எண்ணி நீருக்கடியில் தவம் செய்த சௌபரிக்கு அங்கும் தொந்தரவு காத்திருந்தது.

யோகம் செய்துகொண்டிருந்த சௌபரி, ஒரு கணம் கண்ணைத் திறந்தார். கண்ணெதிரே மீன்களின் அரசன் தன் மனைவிகளுடன் களியாட்டம் புரிந்து கொண்டிருந்தான்.

உடனே அவருக்கும் இல்லற இன்பத்தை நுகர ஆசை எழுந்தது.

நேராக மாந்தாதாவிடம் சென்றார். உன் ஐம்பது பெண்களில் ஒருத்தியை எனக்குத் திருமணம் செய்து வை என்று கேட்டார்.

தபஸ்விதான். ஆனால், மிகவும் வயதான, உடல் சுருங்கி, தாடியும் மீசையுமாக, ஒட்டி உலர்ந்துபோய் இருக்கும் முனிவருக்குப் பெரும் வனப்புள்ள தன் இளம் பெண்களில் ஒருத்தியைக் கொடுக்கச் சற்றுத் தயங்கினார் மாந்தாதா.

பெற்ற பாசம் கண்களை மறைத்தது. ஆனால், மறுத்துவிட்டுப் பின் முனிவரின் சாபத்திற்கு ஆளாகவும் விரும்பவில்லை. எனவே சாமர்த்தியமாகச் சொல்வதாக நினைத்துக் கொண்டு
என் பெண்களின் திருமணத்திற்காக ஸ்வயம்வரம் ஏற்பாடு செய்யப்போகிறேன். அதில் என் புதல்விகளில் யார் உங்களைத் தேர்ந்தெடுக்கிறாளோ அவளை உங்களுக்கு மணம் செய்து கொடுக்கிறேன் என்றார்.

பருவ வயதிலிருக்கும் தன் பெண்கள் வயதான இந்த முனிவரைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்பது மன்னனது எண்ணமாக இருந்தது.

ஆனால், யோகேஸ்வரரான சௌபரி மன்னனின் எண்ண ஓட்டத்தை அறிந்தார். மன்னன் சொன்னதை ஏற்றுக்கொண்டார்.
இக்காலத்திலேயே திருமணம் என்றால் ஒப்பனைகளால் மணமக்களின் தோற்றத்தையே அடையாளம் தெரியாமல் மாற்றுகிறார்கள்.
யோகேஸ்வரருக்கு தோற்றத்தை மாற்றுவது கடினமா என்ன? ஸ்வயம்வரத்திற்கு வரும்போது யோக சக்தியால் தன் உடலை மிக அழகிய, கட்டுக்கோப்பான இளைஞனாக மாற்றிக்கொண்டார்.

மாந்தாதாவின் ஐம்பது பெண்களும் அவ்விளைஞனின் அழகில்‌ மயக்கி அவரையே மணக்க விரும்பினர். அதோடு மட்டுமல்லாமல், இவர் எனக்கேற்றவர். நீ இவர் மீது ஆசைப்படாதே என்று ஒருவருக்கொருவர் சண்டையிடத் துவங்கினர்.

கொடுத்த வாக்கைக் காப்பாற்றவேண்டி ஐம்பது பெண்களையும் சௌபரிக்கே திருமணம் செய்து கொடுத்தார் மாந்தாதா.

சௌபரி தன் யோகசக்தியால் அனைத்து இன்பங்களும் நிரம்பிய ஒரு பெரும் மாளிகைகளையும், தோட்டங்கள், தெளிந்த நீரோடைகள், பூஞ்சோலைகள், ஏராளமான அணிகலன்கள், பட்டாடைகள், நீராடும் இடங்கள், உடற்பூச்சுகள், பணிமகளிர், துதி பாடகர்கள் அனைத்தையும் படைத்து தன் மனைவிகளுக்கு ஒரு குறையும் ஏற்படாத வண்ணம் அங்கு சுகமாக வாழ்ந்தார்.

ஏழு தீவுகளடங்கிய புவிமண்டலத்தைக் காத்து வரும் மாந்தாதா, சௌபரி நடத்தும் நல்லறத்தைப் பார்த்து ஏகசக்ராதிபதி என்ற தன் செருக்கை விட்டொழித்தார்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment