Wednesday, June 26, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 282

சக்கரம் அமைதியடைந்ததும், அம்பரீஷன் துர்வாசரை வணங்கி உணவு ஏற்க அழைத்தான்.
தான் திரும்பி வரும்வரை அவன் ஒரு வருட காலமாக உணவு ஏற்கவே இல்லை என்பதையறிந்து துணுக்குற்றார் துர்வாசர். தான் உண்டால்தான் அவன் உண்பான் என்பதற்காக அம்பரீஷன் பக்தியோடு பரிமாறிய உணவை ஏற்றார்.
பின்னர் அம்பரீஷனைப் பலவாறு புகழ்ந்தார்.

அம்பரீஷா! உன்னைப்போல் ஒரு பக்தனை இதுவரை எவருமே கண்டிருக்க இயலாது. பகவான் நாராயணன் உன் விஷயத்தில் பேருவகை கொண்டிருக்கிறார். அதை அவரே என்னிடம் சொன்னார். இதைவிட ஒருவனுக்கு வேறென்ன வேண்டும். இனி நான் ஈரேழு பதினான்கு லோகங்களிலும் சென்று உன் பக்தியையும் புகழையும் அனைவர்க்கும் எடுத்துக் கூறுவேன். உனக்கு எல்லா நலன்களும் உண்டாகட்டும் என்று மனமார ஆசீர்வாதம் செய்துவிட்டுக் கிளம்பினார்.

இங்கு அம்பரீஷனால் காப்பாற்றப்பட்டோம் என்ற கழிவிரக்கம் அவரிடம் இல்லை. மாறாக பகவான் நடத்திய இந்தச் சோதனையில் தான் ஒரு பகடைக்காயாக ஆனதையும், அதில் அம்பரீஷன் வென்றதையும் மிகவும் பெருமையாய் எண்ணினார்.

அஹங்காரம் என்பதே இல்லாத உண்மையான ஸாதுவான துர்வாசர் வேண்டுமென்றே தன்னைத் தாழ்த்திக் கொண்டு, அம்பரீஷனை உயர்த்தினார். உண்மையில் பகவானின் குணமும் இதுவே.
துர்வாசர் விடைபெற்றுச் சென்றபின், அம்பரீஷன் பிரசாதமாகச் சிறிது உண்டான்
.
தன்னால் முனிவர் துன்பமடைந்ததையும், பின்னர் தன் பிரார்த்தனை யினால் அவரது துன்பம் நீங்கியதையும் அவன் பெருமையாக எண்ணவில்லை. அனைத்தும் பகவானின் திருவுள்ளம் என்றெண்ணினான்.

மென்மேலும் தன் பக்தியை வளர்த்துக்கொண்டான். ஸத்சங்கத்தில் ஈடுபட்டான். அனைத்து சுக போகங்களையும் நரகத்திற்குச் சமமாய் எண்ணினான்.

வெகுகாலம் நல்லாட்சி செய்த பின், தன்னைப்போலவே உயர்ந்த குணங்கள் கொண்ட தன் புதல்வர்களிடம் அரசை ஒப்படைத்துவிட்டுக் கானகம் ஏகினான். பகவான் வாசுதேவனிடம் மனத்தை நிலைநிறுத்தி உடலை விட்டு முக்குண பிரபஞ்சத்தைக் கடந்து அழியா உலகம் சென்றான்.
இப்புண்யக்கதையைக் கேட்பவரும் நினைப்பவரும் ஸ்ரீமன் நாராயணனின் பக்தராகிவிடுவர்.

ஸ்ரீ சுகர் தொடர்ந்து கூறினார்.
பரீக்ஷித்! அம்பரீஷனின் புதல்வர்கள் விரூபன், கேதுமான், சம்பு என்பவர்கள். விரூபனின் மகன் பிருஷதசுவன். அவனது மகன் ரதீதரன்.

மக்கட்பேறற்ற ரதீதரன் வாரிசு வேண்டுமென்பதற்காக ஆங்கிரஸ‌முனிவரை வேண்டினான். அவர் தன் பிரும்மதேஜஸை ரதீதரனின் மனைவிக்கு அருள, அவள் மிகவும் சக்தியுள்ள புதல்வர்களைத் தோற்றுவித்தாள்.

(ரிஷி கர்பம் என்பது இந்நாளில் உள்ளதுபோல் தாம்பத்தினால் ஏற்படுவதல்ல. சூரிய பகவானும் மற்ற தேவர்களும் குந்திக்கு எப்படி அருளினால் புதல்வர்களை வழங்கினார்களோ அப்படி என்று அறிக. அஞ்சனை வயிற்றில் வாயுவின் அம்சமாகவும், சிவனின் அம்சமாகவும் ஹனுமான் தோன்றிதும் இவ்வாறே)

ஆங்கீரஸ மஹரிஷியின் திருவருளால் தோன்றியதால் அந்தப் புதல்வர்கள் ஆங்கீரஸர்கள் எனவும், ரதீதரன் வம்சம் என்பதால் ரதீதரர்கள் எனவும் அழைக்கப்பட்டனர். பிராமணர் மற்றும் க்ஷத்ரியர் இரு வர்ணங்களையும் சேர்ந்தவர்கள்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment