Saturday, June 22, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 279

துர்வாசர் மிகுந்த கோபத்துடன் ஆபிசாரம் செய்து ஒரு பிசாசைப் படைத்து, அதை அம்பரீஷன் மீது ஏவினார்.
தீப்பிழம்பைப் போல் ஒளிர்ந்த அந்தப் பிசாசு கையில் ஒரு கத்தியை ஏந்திக்கொண்டு, பூமி அதிரும்படி நடந்து அம்பரீஷனை நோக்கி வந்தது.
அம்பரீஷன் தான் நின்ற இடத்திலிருந்து சற்றும் அசையவில்லை. கலங்கவும் இல்லை. கைகளைக் கூப்பிக்கொண்டு அசையாமல் நின்றான்.

ஏன் அப்படி?
துர்வாசர் ஸாக்ஷாத் பரமேஸ்வரனின் அவதாரம். ஞானி. மஹான்கள் புலன்களையும் உணர்வுகளையும் ஜெயித்தவர்கள். அத்தகைய ஒரு மஹரிஷிக்கே கோபம் வரும்படி தான் நடந்து கொண்டிருந்தால், அதற்குப் பின் உயிருடன் இருந்து என்ன செய்யப் போகிறோம்?

மாபெரும் தவறைச் செய்துவிட்டு, தண்டனையிலிருந்து எதற்காகத் தப்பிக்க வேண்டும்? இங்கு தண்டனை யிலிருந்து தப்பிக்க நினைத்தால், அதைப்போல் இரு மடங்கு நரகத்தில் அனுபவிக்க நேரிடும்.

சாதுக்களுக்கு கோபம் வரும்படி உண்மையிலேயே நான் நடந்து கொண்டிருந்தால் அந்தப் பிசாசு என்னைக் கொல்லட்டும் என்று நினைத்தான் அரசன்.

கணத்திற்கொருதரம் பகவன் நாமத்தைச் சொல்லும் அம்பரீஷன், இப்போது பகவானை அழைக்கவில்லை. காப்பாற்றச் சொல்லி வேண்டவில்லை. அமைதியாக கைகூப்பி, கண்களை மூடியபடி நின்றான்.

சபையிலிருந்தவர் அனைவரும் தெறித்து ஓட, சிலை போல் நின்ற அம்பரிஷனைக் கொல்ல பிசாசு வந்து கொண்டிருந்தது.

தன்னை முழுவதுமாக இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்ட பக்தனைக் காப்பது இறையின் கடைமையாகிவிறது. தன்னைக் காத்துக்கொள்ள சிறு முயற்சி செய்தாலும், அது நம்பிக்கைக் குறைபாடு.

பிரஹலாதனின் நிலையைப்‌ பார்த்தோமல்லவா?
நெருப்பில் போட்டாலும், மலையிலிருந்து உருட்டினாலும், விஷம் கொடுத்தாலும், யானையை விட்டு இடறச் சொன்னபோதும், குழந்தை தன்னைக் காக்கும்படி வேண்டவில்லை. நாராயண நாமத்தை விடவும் இல்லை.

இப்போது அமைதியாக நின்ற அம்பரீஷனைக் காப்பது இறையின் பொறுப்பாகிவிட்டது. ஆனால், அவர்தான் முன்னமேயே ஸ்ரீ சுதர்சனத்தை அம்பரீஷனின் பாதுகாப்பிற்காக விட்டுச் சென்றிருந்தாரே.

ஸ்ரீ சுதர்சனத்தால் அதற்குமேல் பொறுக்க இயலவில்லை. சிம்மாசனத்திலிருந்து சீறிப் பாய்ந்துவந்த சுதர்சனம், சிறு பாம்பைக் காட்டுத் தீ பொசுக்குவதுபோல க்ருத்தியா என்ற அந்த பிசாசைப் பொசுக்கியது.

ஆபிசாரம் செய்வதில் உள்ள ஆபத்து என்னவெனில், ஏவப்பட்ட சக்தி தோல்வியுற்றால் அது ஏவியவரைத் தாக்கும்.
இங்கே பிசாசை எரித்த ஸ்ரீ சுதர்சன ஆழ்வார், அதை ஏவிய துர்வாசரின் பக்கம் திரும்பினார்.

அவ்வளவுதான். பயந்துபோன துர்வாசர், தன் உயிரைக் காத்துக்கொள்ள எட்டுத் திக்கிலும் ஓடினார்.

ஆழிப்படை தன்னைத் துரத்துவதைக் கண்ட துர்வாசர் மேருமலையின் தாழ்வறைகளில் சென்று ஒளிந்துகொள்ளத் தலைப்பட்டார். அங்கேயும் சுதர்சனம் தொடர்ந்து வரவே, விண்ணுலகம், அதலம், விதலம், முதலிய கீழ் உலகங்கள், ஸமுத்ரம், ஸ்வர்கம் எல்லா இடங்களுக்கும் ஓடினார். அவர் எங்கு சென்றாலும் பின்னாலேயே சக்கரம் தொடர்ந்தது.

இங்கு ஒன்றை கவனிக்கவேண்டும்.
துர்வாசரோ கிழவர். கால்களால் தடுமாறி ஓடுகிறார். ஸ்ரீ சுதர்சனமோ கால சக்கரத்தைக் காட்டிலும் சக்தியும், வேகமும் வாய்ந்தது.
ஒருவர் தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பினால் அதிவேகமாக ஓடமுடியும் என்றாலும்,
சக்கரப்படையை விட வேகமாக அவரால் ஓடமுடியுமா?

ஆக, அவரை எரிப்பதல்ல நோக்கம். அவரை பயமுறுத்தி, தன் தவற்றை உணரச் செய்வதே ஸ்ரீ சுதர்சனத்தின் நோக்கமாக இருக்கவேண்டும்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment