Thursday, June 13, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 274

ஸ்ரீ சுகர் மேலும் கூறலானார்.
பரீக்ஷித்! மனுவின் மகன் நபகன். அவனது மகன் நாபாகன். இவன் கவி என்றும் அழைக்கப்படுகிறான்.

அவன் குருகுலம் சென்று அனைத்து சாஸ்திரங்களையும் கற்றபின் வெகுகாலம் கழித்து வீடு திரும்பினான். வெகுநாள்கள் ப்ரும்மச்சாரியாக இருந்தபடியால், அவன் திருமணம் செய்து கொள்ளமாட்டான், அவனுக்கு எதற்கு சொத்து என்பதாக நினைத்து அவனது மூத்த சகோதரர்கள், சொத்தில் அவனுக்குப் பங்கு வைக்காமல் பிரித்துக் கொண்டனர்
படிப்பை முடித்துவிட்டு, குருகுலத்திலிருந்து திரும்பி வந்த கவி சொத்தில் தனக்கான பங்கைக் கேட்டான். அவனது சகோதரர்கள் நீ தந்தையை வைத்துக்கொள் என்று சொல்லிவிட்டனர்.

உடனே அவன் தந்தையைப் பார்க்க,
அவர்கள் உன்னை ஏமாற்றுகிறார்கள். நீ இதை ஏற்கவேண்டாம். எனினும் நீ தொடர்ந்து வாழ்க்கை நடத்த ஒரு உபாயம் சொல்கிறேன்.

நீ நன்கு படித்திருக்கிறாய். ஆங்கீரஸ கோத்ரத்து மஹரிஷிகள் இப்போது ஸத்ரயாகம் செய்கின்றனர். அவர்கள் மிகவும் மேதாவிகளாக இருப்பினும், ஆறு நாள்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டிய வேள்வி, மற்றும் அதன் கிரியைகள் அனுஷ்டானங்கள் ஆகியவற்றில் குழப்பம் ஏற்பட்டு செய்வதறியாமல் நிற்கின்றனர்.

நீ மகான்களாகிய அவர்களிடம் சென்று அவர்களின் குழப்பத்தைத் தீர்க்கும் வண்ணம் ரிக்வேதத்தில் அமைந்துள்ள மந்திரங்களை எடுத்துக்கூறு. அவர்கள் யாகத்தில் மிகுந்ததனைத்தையும் உனக்கு தக்ஷிணையாகத் தருவார்கள். அதை வைத்துக்கொண்டு உன் வாழ்வை சுகமாக வாழலாம் என்றார்.

கவி தந்தையான நபகனின் சொல்படி யாகசாலைக்குச் சென்று மஹரிஷிகளின் குழப்பத்தைத் தெளிவித்தார். அவர்கள் யாகத்தில் மிகுந்துபோன அத்தனை செல்வங்களையும் கவிக்கு அளித்துவிட்டு ஸ்வர்கம் சென்றனர்.

அவற்றைக் கவி எடுத்துக்கொள்ள முயன்றபோது, வடதிசையிலிருந்து ஸ்ரீருத்ரன் வந்தார்.
யாகத்தில் மீந்ததனைத்தும் என்னைச் சேர்ந்தது. என்று சொன்னார்.

அதைக் கேட்ட நாபாகன் (கவி)
இவற்றை ரிஷிகள் எனக்குக் கொடுத்தனர். எனவே என்னைத்தான் சேரும்
என்று கூற, ஸ்ரீ ருத்ரன்
எனில், உன் தந்தையிடம் இது பற்றிக் கேள் என்றார்.

நாபாகன் தந்தையிடம் சென்று, நடந்ததனைத்தையும் சொல்லி, செல்வம் பற்றிக் கேட்க, அவர்,
ஒரு சமயம் தக்ஷ யாகத்தில், வேள்வி முடிந்ததும், மிகுவதனைதும் ஸ்ரீ ருத்ரனைச் சேர்ந்தது என்று முடிவு செய்தனர். எனவே, இந்தச் செல்வம் முழுவதும் அவருக்குரியதே. அவரிடமே கொடுத்துவிடு என்றார்.

கவி, திரும்ப வேள்விச் சாலைக்கு வந்து, ஸ்ரீ ருத்ரனை வணங்கி,
இறைவா! என் பிழையைப் பொறுத்தருளுங்கள். வேள்விச் சாலையில் மிகுந்ததனைத்தும் தங்களைச் சேர்ந்ததே என்று என் தந்தை கூறலுற்றார். எனவே என்னை மன்னித்துவிடுங்கள் என்றார்.
இதைக் கேட்டு ஸ்ரீ ருத்ரன் மிகவும் மகிழ்ந்தார்.

குழந்தாய்! உன் தந்தை அறநெறிகளின்படி தீர்ப்பு கூறினார். நீயும் அதை அப்படியே ஸத்யமாக என்னிடம் சொன்னாய். நீ வேதமந்திரங்களை நன்கு அறிந்திருக்கிறாய். உனக்கு ப்ரும்மஞானத்தை அளிக்கிறேன்.
மேலும், இங்கு வேள்வியில் மிகுந்த செல்வம் அனைத்தையும் உனக்கே அளிக்கிறேன். என்று கூறி கவிக்கு அனுக்ரஹம் செய்துவிட்டு மறைந்தார்.

ரிக்வேதத்தில் விளக்கப்பட்டுள்ள இக்கதையை காலை மாலை இரு வேளைகளிலும் கேட்பவர் புத்திக்கூர்மை பெறுவர். வேதக்கருத்தை அறிந்து பரமாத்ம நிலையை அடைவர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment