Friday, June 7, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 271

த்ருணபிந்துவின் மகன்கள் விசாலன், சூன்யபந்து, தூம்ரகேது. இவர்களுள் விசாலனால் அந்த வம்சம் வளர்ந்தது. அவன் விசாலி என்ற நகரத்தை நிர்மாணம் செய்தான்.

அவனது மகன் ஹேமச்சந்த்ரன். அவனது மகன் தூம்ராக்ஷன். தூம்ராக்ஷனின் புதல்வன் ஸம்யமன். இவனுக்கு தேவஜன், க்ருசாஸ்வன் என்று இரு மகன்கள்.
க்ருச்வாஸ்வனின் மகன் ஸோமதத்தன். அவன் பல அஸ்வமேதயாகங்களால் பகவானை ஆராதித்தான். ஸாது சேவையில் மிகவும் நாட்டமுற்று முக்தியடைந்தான்.

ஸோமதத்தனின் மகன் ஸுமதி. அவனது மகன் ஜனமேஜயன். இவர்கள் அனைவரும் த்ருணபிந்துவின் பெருமைகளை உயர்த்தும் வண்ணம் மிக நன்றாக ஆட்சி செய்தனர்.

வைவஸ்வத மனுவின் புதல்வரான சர்யாதி மாமன்னராவார். வேதங்களை நன்கறிந்தவர். ஆங்கீரஸ கோத்ரத்து ரிஷிகள் நடத்திய யாகத்தில் இரண்டாவது நாளின் கர்மங்களையும் விதிகளையும் விளக்கியவர் இவரே.
இவரது மகன்கள் உத்தானபர்ஹிஸ், ஆனர்த்தன், பூரிஷேணன் ஆகியோர். மகள் கற்புக்கரசியான சுகன்யா ஆவாள்.

முதலில் அவளைப் பற்றிக் கூறுகிறேன் என்று துவங்கினார் ஸ்ரீ சுகர்.
சர்யாதியின் மகளான சுகன்யா தன் தோழிகளுடன் ஒருநாள் வனத்தில் சுற்றி வந்துகொண்டிருந்தாள். அப்போது ஒரு கரையான் புற்றின் துவாரத்திலிருந்து மின்மினிப்பூச்சி போல் வரும் ஒளியைக் கண்டாள். அறியாமையாலும், ஆர்வக்கோளாறினாலும், அந்த துவாரங்களுக்குள் ஒரு முள்ளை நுழைத்தாள். அதிலிருந்து குபுகுபுவென்று குருதி பீறிட்டதும், பயந்துபோய் ஓடி வந்துவிட்டாள்.
அப்போது நாட்டிலுள்ள சர்யாதியின் படைகள் அனைவர்க்கும் உடல் உபாதைகள் ஒரே சமயத்தில் தோன்றின.

அதைக் கண்டு வியந்த சர்யாதி, தன் படைகளைப் பார்த்து, காட்டிலுள்ள ப்ருகு வம்சத்து சியவன மஹரிஷியை யாரேனும் தொந்தரவு செய்தீர்களா? நம்முள் யாரோதான் அவருக்குத் தீங்கிழைத்திருக்கவேண்டும்.
என்றார்.

இதைக் கேட்ட சுகன்யா பயந்துபோய், தந்தையிடம் சொன்னாள்.
அப்பா, நான்தான் தெரியாமல், ஒளிவந்த ஒரு துவாரத்தில் முள்ளால் குத்தினேன்.
என்றாள்.

அதைக் கேட்டு பயந்துபோன சர்யாதி, சியவன மஹரிஷியிடம் போய் பிழை பொறுத்தருளும்படி வேண்டினான். அதன் பின் கண்ணில்லாமல் இருக்கும் அவருக்குப் பணிவிடைகள் செய்வதற்காக, சுகன்யாவை சியவனருக்கு விவாஹம் செய்துவைத்தான்.

இதனால், சியவனர் மனம் மகிழ்ந்தார். நாட்டிலுள்ளோர்க்கு உபாதைகள் நீங்கின.
சுகன்யா, சியவனரின் மனப்போக்கையும், விருப்பத்தையும் அறிந்து, மிகுந்த கவனத்துடன் அவருக்குப் பணிவிடைகள் செய்து அவரை மகிழ்வித்தாள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment