Thursday, June 20, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 277

இறைவனால் அளிக்கப்பட்ட ஸ்ரீ சுதர்சன சக்கரத்தை சிம்மாசனத்தில் ஏற்றி வைத்துவிட்டு கீழமர்ந்து அரசபாரம் வகித்தான் அம்பரீஷன்.

ஒரு சமயம் தன்னைப் போலவே உலகப் பற்றுக்களைத் துறந்து அறநெறியுடன் விளங்கும் ஸ்ரீமதியுடன் துவாதசி விரதம் இருந்து ஒருவருடம் வரை அனுஷ்டிக்க உறுதிகொண்டான் அம்பரீஷன்.

விரதம் ஏற்கும் நாள்களில் முழுமனத்துடன் இறைவனின் தியானத்திலும், கதைகளிலும், பஜனைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பிய அரசன் அரசப் பொறுப்பை தகுந்தவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, ஸ்ரீசுதர்சனத்தையும் அழைத்துக்கொண்டு கண்ணன் நித்யவாசம் செய்யும் மதுவனம் சென்று அங்கு ஒரு வருடம் தங்கினான்.

மதுவனம் என்பது கண்ணன் அவதரித்த மதுராவாகும்.
துருவனையும் அவனது குருவான நாரதர் தவம் செய்வதற்காக மதுவனத்திற்கு அனுப்பினார் என்பதைப் பார்த்தோம்.

பல்வேறு மஹரிஷிகள் பலகாலம் தவம் செய்து வந்த புண்யபூமி மதுவனம் ஆகும். கண்ணன் பிறந்த சமயத்தில் நகரமாக மாறிவிட்டிருந்தது. இப்போதும் அதைச் சுற்றிய அடர்ந்த விருந்தாவனக் காடுகள் உள்ளன.

மதுவனத்தில் ஒரு வருடம் தங்கியிருந்து புண்ய நதியான யமுனையில் ஸ்நானம் செய்து, விதிப்படி துவாதசி விரதத்தை அனுஷ்டித்து வந்தான் அம்பரீஷன்.

ஒரு வருட முடிவில் கார்த்திகை மாதத்து துவாதசி சமயத்தில் தொடர்ந்து மூன்று நாள்கள் உபவாசம் இருந்தான். நீர் கூட அருந்தாமல் ஸ்ரீமன் நாராயணனை பூஜை செய்தான்.

மஹா அபிஷேக விதிமுறைப்படி, ஸ்ரீசுதர்சன ஆழ்வாருக்குத் திருமஞ்சனம் செய்து, சான்றோர்களையும் பூஜை செய்தான்.

பின்னர் மிகவும் ருசியான பலவிதமான பக்ஷ்யங்களுடன் கூடிய உணவை அந்தணர்களுக்குப் படைத்தான். பின்னர் கொம்புகளில் தங்கக்குப்பிகளும், குளம்புகளில் வெள்ளியும் , அழகிய பட்டு வஸ்திரங்களால் போர்த்தப்பட்டதும், சாதுவான குணமுள்ளவைகளும், நன்றாகப் பால் கறப்பவைகளும், கன்றுகளுடன் கூடியவைகளுமான அறுபதுகோடி பசுக்களை அந்தணர்களுக்குத் தானமாக அளித்தான். அவ்ற்றுடன் அவைகளைப் பராமரிக்க ஆகும் செல்வத்தையும், பால் கறக்கும் பாத்திரங்களை யும் அவர்களது வீட்டுக்கு அனுப்பினான்.

வந்த அனைவரும் உணவேற்றபின் உயர்ந்த தக்ஷிணைகள் கொடுத்து அனுப்பிவைத்துவிட்டுக் கடைசியாகத் தான் பெரியோரின் அனுமதி பெற்று பாரணம் செய்ய அமர்ந்தான்.

அவ்வமயம், ஸாக்ஷாத் பரமேஸ்வரனின் அவதாரமான துர்வாச முனிவர் அதிதியாக (அழையா விருந்தாளி) அங்கு வந்தார்.

அளவற்ற அருள்புரியவும், சாபம் கொடுக்கவும் திறன் பெற்றவர் அவர். மற்ற ரிஷிகள் அனைவருக்கும் சாபம் கொடுத்தால் தவசக்தி குறையும். ஆனால், துர்வாசரோ, சாபம் கொடுக்க கொடுக்க தவசக்தி வளருமாறு அருள் பெற்றிருந்தார்.
எனவே, துர்வாசரைக் கண்டாலே அனைவரும் ஓடி ஒளிந்துகொள்வர்.

தானாகத் தன் இருப்பிடம் தேடி ரிஷி வந்திருப்பதை அறிந்த அம்பரீஷன் உணவு ஏற்காமல் ஓடிச் சென்று வரவேற்றான். பதினாறு வித உபசாரங்கள் செய்து முறைப்படி பூஜை செய்தான். அவரது திருவடிகளில் விழுந்து வணங்கி உணவு ஏற்குமாறு அன்புடன் வேண்டினான்.

தன்னைத் தாழ்த்திக்கொண்டு பக்தனுக்கு உயர்வளிப்பதில் பகவானைப் போலவே சான்றீர்களும் விரும்புவர்.

துர்வாசர் தலைசிறந்த பக்தனான அம்பரீஷனின் புகழை உலகில் சூரிய சந்திரர்கள் இருக்கும் வரை நிலைநிறுத்தத் திருவுளம் கொண்டார் துர்வாசர்.

அம்பரீஷனின் வேண்டுகோளை ஏற்று, யாம் யமுனையில் நீராடி அனுஷ்டாங்களை முடித்துப் பின் வந்து உணவு ஏற்கிறோம் என்று சொல்லிவிட்டுத் தன் சீடர்களுடன் கிளம்பி யமுனைக்குச் சென்றார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment