Friday, June 28, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 284

புரஞ்ஜயனின் மகன் அநேனஸ். அவனது மகன் பிருது. பிருதுவின் மகன் விச்ரவந்தி. அவனது மகன் சந்திரன். அவனது மகன் யுவனாச்வன்.

அவனது மகன் சாபஸ்தன். அவன் சாபஸ்தீ என்ற நகரத்தை உருவாக்கினான். அவனது மகன் பிருஹதச்வன். இவன் மகன் குவலயாச்வன். இவன் மிக்க பலம்‌கொண்டவன். இவனுக்கு இருபத்தோராயிரம் புதல்வர்கள். அவர்கள் அனைவருடனும் சேர்ந்து 'துந்து' என்ற அசுரனைக் கொன்றான். அதனால் துந்துமாரன் என்று பெயர் பெற்றான்.

ஆனால், அசுரன் துந்துவின் வாயிலிருந்து வெளிப்பட்ட அக்னியால் அவன் மகன்களில் மூவரைத்தவிர மீதி அனைவரும் சாம்பலானார்கள்.
அழிவிலிருந்து தப்பித்த மூன்று மகன்களின் பெயர்கள் திருடாச்வன், கபிலாச்வன், பத்ராச்வன்‌ என்பதாகும்.

திருடாச்வனின் மகன் ஹர்யச்வன். அவனது மகன் நிகும்பன்.

நிகும்பனின் மகன் பர்ஹணாச்வன். அவனது மகன் கிருசாச்வன். இவனது மகன் ஸேனஜித். ஸேனஜித்தின் மகன் யுவனாச்வன்.நூறு மனைவிகள் இருந்தும் அவனுக்கு மக்கட்பேறில்லை. எனவே மனைவிகளுடன் கானகம் சென்றான்.

கானகத்திலிருந்த முனிவர்கள் அவன் மீது கருணை கொண்டு இந்திரனைக் குறித்து ஒரு யாகம் செய்துவைத்தனர்.

ஒரு நாள் கானகத்தில் ஆசிரமத்தில் நள்ளிரவில் யுவனாச்வனுக்கு தாகம் எடுத்தது. எங்குமே நீரில்லாமல் அவன் வேள்விச்சாலைக்குள் நுழைந்து யாகத்தின் கலச நீரைக் குடித்துவிட்டான்.

காலையில் எழுந்த முனிவர்கள் கலசத்தில் நீரில்லாததைக் கண்டு திகைத்தனர்.
மன்னன் அதைக் குடித்துவிட்டான் என்றறிந்த ரிஷிகள் இறைவனின் சங்கல்பத்தை மாற்ற முடியாதென்று உணர்ந்து துதித்தனர்.

பத்து மாதங்கள் கழித்து யுவனாச்வனின் வயிற்றைக் கிழித்துக்கொண்டு ஒரு ஆண்மகவு பிறந்தது.

குழந்தை பிறந்ததும் தாய்ப்பாலுக்கு அழுதது. என்ன செய்வதென்று அனைவரும் திகைத்தபோது, தேவேந்திரன் அங்கு வந்து,
இதோ நான் தருகிறேன்.(மாம் தாதா) குழந்தாய் அழாதே என்று சொல்லித் தன் வலது கை ஆள்காட்டி விரலைக் குழந்தையின் வாயில் வைத்தான். இந்திரன் மாம் தாதா என்று கூறியதால், குழந்தைக்கு மாந்தாதா என்ற பெயர் நிலைத்தது.

யுவனாச்வனின் வயிறு கிழிந்தபோதிலும், இறைவனின் அருளால் அவன் இறக்கவில்லை. அவன் அங்கேயே தங்கி தவமிருந்து முக்தியடைந்தான்.

மாந்தாதா பெரும் பலசாலியாக விளங்கினான். திருடர்கள் அவனைக் கண்டு படந்ததால் இந்திரன் அவனுக்கு த்ரஸத்தஸ்யு என்று பெயரிட்டான்.
மாந்தாதா பகவானின் அருளால் ஸார்வபௌமனாக, ஏழுதீவுகள் கொண்ட இப்பூவுலகம் முழுவதையும் தன் ஒரே குடையின் கீழ் ஆண்டான்.

#மஹாரண்யம்‌‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment