Monday, June 24, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 280

எங்கு சென்றாலும் துர்வாசரை சக்கரப்படை துரத்திவந்தது.
அவர் சத்யலோகம் சென்றார். ப்ரும்மதேவரிடம் சரணடைந்தார்.
தானாகத் தோன்றியவரே! எல்லா ஜீவன்களையும் படைத்தவரே! பகவானின் ஒளிமிகுந்த சக்கரப்படையிலிருந்து என்னைக் காத்தருளுங்கள் என்றார்.

ப்ரும்மதேவரோ சக்கரப்படையைப் பார்த்ததும் பயந்துவிட்டார்.

துர்வாசரே! என் ப்ரும்ம பதவி, இந்தப் பிரபஞ்சம் அனைத்துமே இரண்டு பரார்த்த காலம் முடிந்ததும், கால ரூபியான பகவானின் புருவ நெறிப்பில் அழிந்து விடக்கூடியவை.

நான், பரமேஸ்வரன், தக்ஷன், பிருகு, பிரஜாபதிகள்,யமன், தேவர்கோன், அனைவருமே எந்த பகவானுக்குக் கீழ்ப்படிந்து கடைமையாற்றுகிறோமோ அவருடைய பக்தனுக்குத் தீங்கிழைத்தால் நாங்கள் எப்படிக் காக்கமுடியும்? அதற்கான திறன் எம்மிடம் இல்லை.
என்றார். இதைக் கேட்டதும், துர்வாசர் அங்கிருந்து கிளம்பி கைலாசம் வந்தார்.

சத்யலோகத்தின் வாயிலில் காத்திருந்த ஸ்ரீ ஸூதர்சனம், துர்வாசர் வெளியில் வந்ததும் தொடரலாயிற்று.

துர்வாசர் கைலாசம் வந்ததும் ஸ்ரீ சுதர்சனம் மரியாதை நிமித்தமாக வாசலில் நின்றது.

துர்வாசர் வருமுன்னரே, விஷயம் அறிந்துகொண்ட பரமேஸ்வரன்,
அப்பா துர்வாசா! நீ செய்தது தவறு. பகவானின் பக்தர்களுக்கு தீங்கிழைத்தவர்களைக் காக்கும் சக்தி ப்ரும்மா உள்பட இங்கு எவர்க்குமில்லை.

நான், ஸனத்குமாரர், நாரதர், ப்ரும்மா, கபிலர், தேவலர், தர்மராஜர், ஆஸுரி, மரீசி முதலியவர்களும் யோக சித்தி பெற்றவர்களும்கூட விஷ்ணு மாயையை வெல்ல இயலாது. சர்வசக்தனான பகவானின் சக்கரத்தை நிறுத்த எவரும் துணியார். நீ சென்று பகவானையே சரணடைவாய். அவர் அண்டியவர்களின் துன்பம் களைபவர். அவர் உனக்கு நன்மை செய்வார். என்றார்.

கைலாயத்திலும் தனக்குப் புகலிடம் இல்லை என்பதை உணர்ந்த துர்வாசர் வைகுந்தம் சென்றார்.

நாராயணா! வாசுதேவா! அச்சுதா! என்று அலறல் சத்தம் கேட்டதும்,
பகவான் கேட்ட குரலாயிருக்கிறதே என்று அனந்தசயனத்திலிருந்து எழுந்தார்.
வாருங்கள் துர்வாசரே! வாய் நிறைய வரவெற்றார் பகவான்.
என்னவாயிற்று? ஏன் பதட்டம்?

ப்ரபோ! என்னைக் காப்பற்றுங்கள்.

என்னவாயிற்று? சுதர்சனம் பின்னால் வருகிறதே. என்ன செய்தீர்கள்? ஒன்றுமறியாதவர்போல் கேட்க,
துர்வாசர் சொன்னார்.

அம்பரீஷனைக் காணச் சென்றேன் ப்ரபோ!

ஓ! என் பக்தனைப் பார்த்தாலே நாமம் வாயில் வருமே. என்னவாயிற்று? அவன் துவாதசி விரதம் ஏற்றிருந்தானே. போயிருந்தீர்களா

ஆம்.

ஏகாதசி பஜனைக்குப் போனீரா?

இல்லை. துவாதசிக்குத்தான் போனேன்.

ஓ. சரி. சாப்பிடப் போனீரோ. சாப்பிட்டீர்களா. ப்ரசாதம் மிகவும் பாவனமானதாயிற்றே.

இல்லை ப்ரபோ. அவன் மேல் கோபித்துக்கொண்டு ஒரு ஆபிசாரம்..

செய்யலாமா துர்வாசரே? உணவுண்ணச் செல்லும் வீட்டிற்கு இரண்டகமா? சாப்பிட வாவென்று அழைத்ததற்கு தண்டனையா?
அம்பரீஷன் பொறுமைசாலி. சுதர்சனம் பொறுக்காதே. அதனால்தான் துரத்துகிறதா?
ஒரு ரகசியம் சொல்கிறேன் கேளும் துர்வாசரே! என்னை எல்லாரும் ஸ்வதந்த்ரன் என்கிறார்கள். ஆனால், உண்மையில் நான் ஸ்வதந்த்ரன் இல்லை.
உமக்குத் தெரியுமா? நான் என் பக்தர்களுக்கு அடிமைப்பட்டவன்.
சாதுக்கள் என் இதயத்தைத் திருடிக்கொண்டு போய்விட்டார்கள். அவர்கள் என்னை நேசிக்க, நான் அவர்களை நேசிக்கிறேன்.
மனைவி மக்கள், உற்றார், நண்பர், சொத்து சுகம் அனைத்தையும் மறந்து என்னை நினைப்பவர்களுக்காக நான் சேவகம் செய்கிறேன். அவர்கள் என்னிடம் முக்தியைக் கூட வேண்டுவதில்லை.
நானோ அவர்களது குடும்ப பாரம், கடைமைகள் அனைத்தையும் என் பொறுப்பில் ஏற்கிறேன்.
எனக்கு தீங்கிழைத்தால் பொறுத்துக்கொள்வேன். என் பக்தனுக்குத் தீங்கு செய்தால்
என்னாலும் உங்களைக் காக்க இயலாது. குற்றமற்ற சாதுக்களுக்கு இழைக்கப்படும் துன்பம் துன்பம் இழைத்தவனுக்கே திரும்பும்.

தவமும் கல்வியும் அந்தணர்க்கு நன்மை பயப்பவை. ஆனால், வணக்கமின்றி செருக்கினால் அலைபவர்க்கு அவையே தீங்காய் முடியும்.
என்னால் உம்மைக் காக்க இயலாவிட்டாலும் உங்களைப் பார்த்தாலும் பாவமாக இருக்கிறது. எனவே ஒரு உபாயம் சொல்கிறேன்.

நீங்கள் காலம் கடத்தாமல் வேகமாகச் சென்று அம்பரீஷனையே சரணடையுங்கள். அவனிடமே மன்னிப்பு வேண்டுங்கள். என்றார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment