Thursday, June 27, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 283

வைவஸ்வத மனுவின் பத்து புதல்வர்களுள் ப்ருஷத்ரன், கவி இருவருக்கும் வம்சமில்லை. கரூஷன் முதலான ஏழு புதல்வர்களின் வம்சத்தையும் பார்த்தோம். இனி பத்தாவது புதல்வரான இக்ஷ்வாகுவின் வம்சத்தைக் கூறினார் ஸ்ரீ சுகர்.

முன்பொரு சமயம் மனு தும்மினார். அப்போது அவரது தும்மலிலிருந்து பிறந்தவர் இக்ஷ்வாகு. அவருக்கு நூறு புதல்வர்கள். அவர்களில் விகுக்ஷி, நிமி, தண்டகன் ஆகியோர் மூத்தவர்கள்.

இவர்களுள் கடைசி இருபத்தைந்து மகன்களும் ஆர்யாவர்த்தம் எனப்படும் இப்புண்யபூமியின் கிழக்குப் பகுதியின் அரசர்கள்.

மூத்தவர் மூவரும் நடுப்பகுதியை ஆள, இருபத்தைந்து பேர் மேற்குப் பகுதியின் பொறுப்பை ஏற்றனர்.

மீதி நாற்பத்தேழு பேரும் தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளை ஆண்டனர்.
ஒரு சமயம் விகுக்ஷி ஒரு பெரிய தவறிழைத்ததற்காக அவனை நாடு கடத்தினார் இக்ஷ்வாகு. பின்னர், வஸிஷ்டரின் அருளுடன் ஞானவிசாரம் செய்து, யோகத்தால் உடலை நீக்கி பரமபதம் எய்தினார்.
அதன்பின் நாடு திரும்பிய விகுக்ஷி மண்ணுலகை ஆண்டு வந்தான். பற்பல வேள்விகள் செய்து ஸ்ரீமன் நாராயணனை ஆராதித்தான். அவனுக்கு சசாதன் என்ற பெயரும் உண்டு.

விகுக்ஷியின் புதல்வன் இந்திரவாஹனன். அவனை ககுத்ஸ்தன் என்றும் அழைப்பர்.
க்ருதயுகத்தின் முடிவில் தேவாசுர யுத்தம் வந்தது. அதில் தேவர்கள் தோற்கும் நிலை ஏற்பட்டது. அப்போது தேவர்கள் புரஞ்ஜயன் என்ற வீரனை உதவிக்கு அழைத்தனர்.
அவன் தேவர்கோன் தனக்கு வாகனமாக வந்தால் தான் போர் செய்வேன் என்று கூறினான். முதலில் இந்திரன் மறுத்தான். பின்னர் ஸ்ரீமன் நாராயணனின் கட்டளைக்கிணங்க ஒரு காளையுருவம் தாங்கி வந்தான்.

போருக்குத் தயாரான புரஞ்ஜயன், தெய்வீகமான ஆயுதங்களுடன், தேவர்கள் புகழ் பாட, காளையாய் வந்த தேவேந்திரனின் முதுகுத் திமிலில் அமர்ந்து கொண்டான்.

ஸ்ரீ மன் நாராயணனை தியானம் செய்ய, அவரது பலமும் சேர்ந்தது. தேவர்கள் புடைசூழச் சென்று அசுரர்களின் நகரத்தை முற்றுகையிட்டான்.

அசுரர்களுக்கும் புரஞ்ஜயனுக்கும் கடும்போர் நடந்தது. அவனை எதிர்த்தவர்கள் அனைவரையும் 'பல்லம்' எனப்படும் பாணங்களால் அடித்து யமலோகம் அனுப்பினான்.
அசுரர்கள் சினாபின்னமாகி பாதாளத்திற்கு ஓடிச்சென்றனர்.

புரஞ்ஜயன் அசுரர்களின் நகரை வென்று அனைத்து செல்வங்களையும் இந்திரனுக்கு அளித்தான். அசுரர் நகரை வென்றதால் புரஞ்ஜயன் என்றும், இந்திரனை வாகனமாகக் கொண்டதால் இந்திரவாஹனன் என்றும், காளையின் திமில் மீதமர்ந்து போர் செய்ததால் ககுத்ஸ்தன் என்றும் (ககுத் என்றால் காளையின் திமில் என்று பொருள்) அழைக்கப்பட்டான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment