Saturday, March 30, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 239 கடல் கடைந்த கடல்வண்ணன் - 3

தேவர்களும் அசுரர்களும் நாகராஜனான வாசுகியிடம் சென்று, அமுதத்தில் உனக்கும் பங்கு தருகிறோம் என்று இனிக்க இனிக்கப் பேசி அழைத்து வந்தனர்.

நம்பி வந்த வாசுகியை மலையைச் சுற்றிக் கட்டினர். பிறகு, பெரு முயற்சியுடன் மலையைக் கடலில் போட்டு கடையத் துவங்கினர்.

ஒவ்வொரு விஷயத்தையும் திட்டமிட்டுச் செய்த பகவான், தான் சென்று முதலில் வாசுகியின் தலைப் பக்கம் பிடித்துக் கொண்டார். அவரைத் தொடர்ந்து தேவர்களும் வாசுகியின் தலைப்பக்கம் வந்து பிடித்தனர்.

தன் பக்கம் வந்து பிடித்த தேவர்களைப் பார்த்து பகவான் விஷமமாகச் சிரித்தார். அதைக் கண்ட
அசுரர்கள் அதில் ஏதோ சூது இருக்கிறதென்று சந்தேகம் கொண்டு, பாம்பின் அமங்கலமான வால் பக்கத்தை நாங்கள் பிடிக்கமாட்டோம்.
தேவர்களை விட நாங்கள் எவ்விதத்திலும் தாழ்ந்தவர் அல்லர் என்றனர்.

அவர்களைக் கண்டு பகவான் புன்முறுவல் பூத்தவாறு வாசுகியின் வால் பக்கம் சென்றார். அவரைத் தொடர்ந்து தேவர்களும் வாசுகியின் வால் பக்கம் சென்று பிடித்துக்கொண்டன. தங்கள் உரிமையை மீட்டதாக மகிழ்ந்த அசுரர்கள் தலைப் பக்கம் பிடிக்க, பாற்கடலைக் கடையத் துவங்கினர்.
பெரும்பலம் படைத்த அனைவரும் சேர்ந்து உறுதியாகப் பிடித்துக்கொண்டு கடைந்தபோதும், மலை பாரம் தாங்காமல் கடலில் மூழ்கத் துவங்கியது.

தங்கள் முயற்சி வீணாவது கண்டு தேவர்களும் அசுரர்களும் உற்சாகம் இழந்தனர். அவர்கள் மனம் சோர்வதைக் கண்டு மனம் பொறாத பகவான் தானே பெரிய ஆமை உருவம் கொண்டு கடலுக்குள் இறங்கினார். மலைக்கடியில் சென்று முதுகில் தாங்கினார்.

மலை மேலே எழும்புவதைக் கண்டு அனைவரும் மீண்டும் மகிழ்ச்சியோடு கடையத் துவங்கினர். அழுத்தி அழுத்திக் கடைய கடைய மலை பகவானின் முதுகில் சுழன்றது.
அவ்வளவு பெரிய மலையின் அடிப்புறம் முழுதும் பகவான் முதுகில் படிய அவர் ஒரு பெரிய தீவைப் போல் பாற்கடலில் பரந்து விரிந்திருந்தார்.

மலை அவர் முதுகில் சுழல்வது கூர்மபகவானுக்கு முதுகைச் சொறிந்து கொடுப்பதுபோல் இருந்ததாம்.

கடல் கடையத் துவங்கியதும், தேவர்களின் பக்கத்தில் ப்ரத்யக்ஷமாக நின்று கடைந்த பகவான், அசுரர்களின் உடலினுள் பெரும் சக்தியாகப் புகுந்தார். களைப்படைந்த தேவர்களின் உடலிலும் சக்தியாகப் புகுந்தார். கடையும்போது ஏற்படும் சிரமத்தால் வாசுகிக்குத் துன்பம் ஏற்படாத வாறு மயக்கமாகப் புகுந்தார்.

மலை ஒரே அச்சில் சுழல்வதற்காக பகவான் தானே இன்னொரு மாபெரும் மலைபோல் உருக்கொண்டு அதன் கொடுமுடியைப் பிடித்துக் கொண்டார்.

ஒரு பக்கம் மேலே அழுத்திப் பிடித்துக் கொண்டும், இன்னொரு புறம் கீழே மலையைத் தாங்கிக் கொண்டும், அத்தனை பேரின் உடலிலும் சக்தியாகவும், தானே நேரிலும் நின்று மலையை சுழற்றி சுழற்றிக் கடைந்தார்.

அப்போது கடல் வாழ் உயிரினங்கள் அனைத்தும் கலங்கின. வாசுகியின் முகத்திலிருந்து கொடுமையான விஷப்புகை கிளம்பியது. அப்புகையால் அசுரர்கள் துன்புற்றனர்.

தேவர்களுக்கும் வாசுகியின் விஷம் நிரம்பிய மூச்சுக்காற்றினால் மயக்கம் வந்தது. பகவான் உடனே காற்றைக் குளிர்வித்து, மேகங்களைத் தூண்டி மழை பெய்வித்தார்.

நீலமேகத் திருமேனி, அரையில் தங்கப் பட்டாடை, காதுகளில் மின்னலன்ன ஒளிரும் மகர குண்டலங்கள், தாமரைக் கண்கள், கழுத்தில் வனமாலை அசைய தாமரைக் கரங்களால் வாசுகியைப் பற்றிக்கொண்டு, முன்னும் பின்னும் அசைந்தசைந்து பாற்கடலைக் கடைந்தார் பகவான்.

வெகுநேரம் கடைந்தபின்பு, கலங்கிய கடலினுள்ளிருந்து முதன்முதலில் வெளியில் வந்தது ஹாலஹாலம் எனப்படும் கொடிய விஷம்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment