Wednesday, March 6, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 223 ஸிம்மம் தோன்றினான்

ப்ரஹலாதன் தூணை வணங்கியதும் ஹிரண்யகசிபுவுக்கு அடக்கவொண்ணாத கோபம் தலைக்கேறிற்று.
வேகமாகச் சென்று அந்தத்தூணை முஷ்டியால் குத்தினான்.

அப்போது, ப்ரும்மாண்டமே வெடித்ததோ என்னும்படி சத்தம் கேட்டது.

அதைக்கேட்டு ப்ரும்மா முதலிய அனைவரும் தத்தம் லோகங்களுக்கு அழிவு வந்ததோ என்று எண்ணிக் கலங்கினார்.

அந்த சத்தம் கேட்ட ஹிரண்யகசிபு சற்றே பயந்தவண்ணம் சத்தம் எங்கிருந்து வந்ததென்று தேடினான்.

அப்போது,
தன் பரம பக்தனான ப்ரஹலாதனின் இதோ தூணில் தெரிகிறாரே என்ற வார்த்தையை சத்யமாக்கவும்,

ஹிரண்ய கசிபு கேட்ட அனைத்து வரங்களையும் தந்தேன் என்று சொன்ன ப்ரும்மாவின் வாக்கை சத்யமாக்கவும்

நாராயண பக்தனால் அவனுக்கு அழிவு வரும் என்று இந்திரனுக்குக் கொடுத்த வாக்கை சத்யமாக்கவும்,

மூன்று அசுரப் பிறவிகள் பிறக்கக்கடவது. ஒவ்வொரு முறையும் பகவான் கையால் விமோசனம் என்று கூறிய ஸனகாதிகளின் வாக்கை மெய்ப்பிக்கவும்,

காணும் பொருள் அனைத்திலும் பகவான் நீக்கமற நிறைந்துள்ளான் என்ற ப்ரஹலாதனின் வாக்கை உண்மையாக்கவும்,

என்னடியாரை நான் எப்போதும் காப்பேன் என்ற பகவானின் வாக்கை மெய்ப்பிக்கவும்,

அந்தத் தூணைப் பிளந்துகொண்டு மனித உடலும், சிங்க முகமும் கொண்டு, அக்னி போல் ஜொலிக்கும் ப்ரகாசத்துடன்,  பயங்கரமாக கர்ஜனை செய்துகொண்டு நரஹரி உருவில் பகவான் தோன்றினார்.

சிம்ம கர்ஜனை கேட்டு நாற்புறமும் ஹிரண்யகசிபு தேட, தூணிலிருந்து வெளிப்பட்ட அந்த அற்புதமான மூர்த்தியைக் கண்டான். மனிதனுமில்லை. மிருகமும் இல்லை. மூவுலகிலும்  இந்த மாதிரி பார்த்ததே இல்லையே. இதென்ன விந்தை!

இவ்வாறு அவன் திகைத்துப்போய் நிற்கும் சமயம், அவனெதிரில் வந்து நின்றார் பகவான். மிகவும் பயங்கரமான உருவம். உருக்கி வார்த்த தங்கம் போல் மஞ்சளான கண்கள். கோரைப் பற்கள். பளபளக்கும் கூர்மையான நாக்கு, புருவ நெறிப்பால் இன்னும் பயங்கரமாகத் தோற்றமளிக்கும் முகம். காதுகள் மேல்நோக்கி அசைவின்றி நிற்கும். மலைக்குகை போன்ற விரிந்த மூக்கு, திறந்த வாய், பயமுறுத்தும் உருவமாகத் தோன்றினார்.

விண்ணளாவிய மேனி. குறுகிய கழுத்து, பரந்த மார்பு, சிறுத்த இடை, நிலவொளிபோல் வெளுத்த ரோமங்கள், கூரிய நகங்களைக் கொண்ட திருக்கரங்கள்.

அவரைக் கண்டு, தைத்யர்கள், தானவர்கள் அனைவரும் சிதறி ஓடினர்.

இதைக் கண்டு பயந்தாலும், மாயாவியான விஷ்ணுதான் என்னைக் கொல்ல இவ்வாறு வந்திருக்கிறார். இந்த மாயங்களெல்லாம் என்னை என்ன செய்துவிடும்? என்றெண்ணினான் ஹிரண்யகசிபு.

கதையைக் கையிலேந்தி அவர் மேல் பாய்ந்தான். ஆனால், விட்டில் பூச்சி தீயில் விழுவதுபோல் ஆயிற்று.


அவரது ஒளியின் முன்னால் அவன் மிகவும் குன்றிக் காணப்பட்டான். கருடன் பாம்பைப் பற்றுவதுபோல் அவனை ஒரு கையால் இறுகப் பிடித்தார் பகவான். அவனோடு சற்று விளையாட நினைத்தார். உடனே அவன் அவர் கையிலிருந்து நழுவினான்.

இதைக் கண்ட தேவர்கள் பயந்தனர். ஹிரண்யனோ, தன் புஜபலம் கண்டு பயந்துதான் நரஹரி தன்னை நழுவவிட்டார் என்று எண்ணினான். போரில் களைப்படையாத ஹிரண்யன், மீண்டும் அவரை நோக்கிப் பாய்ந்தான்.

கத்தியையும் கேடயத்தையும் நாற்புறமும் சுற்றினான். பகவான் ஒரு பெரிய கர்ஜனை செய்ய, அவ்வொலியில் ஹிரண்யனின் பார்வை மங்கியது. பாம்பு எலியைப் பிடிப்பதுபோல் பாய்ந்து வந்து அவனைப் பிடித்துக் கொண்டார் பகவான். இப்போது அவன் எவ்வளவு முயன்றும் பகவானது பிடியிலிருந்து விடுபட இயலவில்லை. பகவானோ அவனைத் தூக்கிக்கொண்டு  அச்சபையின் வாயிற்படியில் நின்று விளையாட்டாக அவனை நகங்களால் கிழித்துப் போட்டார்.

தன் கூரிய நகங்களால் அவன் மார்பைப் பிளந்தார். வயிற்றைக் கிழித்து குடல்களை உருவிப்போட்டார். குருதி தெளித்து அவரது பிடரி மயிர்கள் சிவந்தன. யானையைக் கொன்ற சிங்கம் போல் விளங்கினார்.

தன் பிடரி மயிர்களை அடிக்க, மேகக்கூட்டங்கள் சிதறின. தேவர்கள் இக்காட்சியை நன்கு கண்டு களிக்கட்டும் என்று அப்படிச் செய்தார் போலும்.

மீண்டும் உரக்க கர்ஜனை செய்ய, சமுத்திரம் கலங்கிற்று. எண்டிசை யானைகளும் பயந்து சிதறின.


முரளீதர ஸ்வாமிஜியின் மதுர கீதம்

ராகம்: ஶுத்த தன்யாஸி தாளம்: ஆதி

பல்லவி
ஸிஹ்மம் தோன்றினான் நரஸிஹ்மம் தோன்றினான்
விண்ணும் மண்ணும் அதிரும்படி ஸிஹ்மம் தோன்றினான் || ஸி ||

அனுபல்லவி
பிள்ளை சொல் கேட்டு துள்ளி எழுந்தவன்
தூணைப் பிளக்கவே அங்கு தோன்றினான் || ஸி ||

சரணம்

01. பக்த வத்ஸலன் அங்கு தோன்றினான்
ஸத்ய ஸந்தன் அங்கு தோன்றினான்
முக்தி தருபவன் அங்கு தோன்றினான்
அந்தி நேரத்தில் அங்கு தோன்றினான்

02. கால காலன் அங்கு தோன்றினான்
கோலாஹலன் அங்கு தோன்றினான்
மாலோலன் அங்கு தோன்றினான்
பாலபாலகன் அங்கு தோன்றினான்

03. மண்ணைக் கேட்டவன் அங்கு தோன்றினான்
விண்ணை அளந்தவன் அங்கு தோன்றினான்
நாண் ஏற்றியவன் அங்கு தோன்றினான்
வெண்ணெய் உண்ட முரளீதரன் அங்கு தோன்றினான்

No comments:

Post a Comment