Thursday, March 14, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 230 நாரதரின் கதை

நாரதர் தன் பூர்வாசிரம கதையைக் கூறலானார்.

யுதிஷ்டிரா! என் முற்பிறவியில் சென்ற மஹா கல்பத்தில், ஒரு கந்தர்வனாக இருந்தேன்.
அப்போது என் பெயர் உபபர்ஹணன் என்பதாம். கந்தர்வர்களுள் சிறந்தவனாக இருந்தேன். அனைத்து கந்தர்வர்களும் என்னைப் புகழ்ந்து கொண்டாடுவர்.

அழகு, இளமை, இனிய பேச்சு, உடற்கட்டு‌ ஆகியவற்றால் அனைவரின் மனத்திலும் சுலபமாக இடம் பிடித்துவிடுவேன். தேவ கன்னிகைகள் முதல் எந்தப் பெண் என்னைப் பார்த்தாலும் மனம் மயங்குவர். அதனால் அளவற்ற கர்வம் கொண்டு போகத்தில் திளைத்திருந்தேன்.


ஒரு சமயம் தேவர்கள் ஞான ஸத்ரம் என்னும் வேள்வி நடத்தினர். அங்கு அனைத்து ப்ரஜாபதிகளும் வந்திருந்தனர். வேள்வியின் விராம காலத்தில்  பகவானின் புகழ் பாடுவதற்காக அப்ஸரஸ் பெண்கள் வந்திருந்தனர்.

அது சான்றோர் கூடிய சபை என்பதால் பகவானைப் பற்றி மட்டும்தான் பாடுவார்கள் என்பதை நான் நன்கு அறிவேன். இருப்பினும், அஹங்காரத்தால், பெண்கள் சூழ, ஒரு பைத்தியம்போல் பாமரத்தனமான ஒரு பாடலைப் பாடிக்கொண்டு அங்கு சென்றேன். இதனால் தேவர்கள் தங்களை அவமதித்ததாக எண்ணி, 'உன் அழகும், பெருமையும் அழியட்டும். பாமரனாகப் பிறந்து பூமியில்‌ உழல்வாய்' என்று சாபமிட்டனர்.

அவர்கள் சாபத்தால் பூமியில்  ஒரு வேலைக்காரியின் மகனாகப் பிறந்தேன். அங்கு வந்த சான்றோர்களின் அருளாலும், அவர்களுக்குப் பணிவிடை செய்ததாலும், மறுபிறவியில் ப்ரும்மதேவரின் மகனாகப் பிறக்கும் பேறு பெற்றேன்.

சான்றோர்களை அவமதித்தல், சான்றோர்க்குப் பணிவிடை செய்தல் ஆகிய இரண்டு செயல்களின் பலன்களையும் அனுபவத்தில் உணர்ந்தவன் நான்.

ஆகவே, தர்மநந்தனா! சான்றோர்க்குச் செய்யும் பணிவிடைகளால் இறைவன் வெகு சீக்கிரம் மனம் மகிழ்கிறார் என்பதை உணர்.

இல்லறத்தானின் அனைத்துப் பாவங்களையும் போக்கும் வழிமுறைகளை உனக்குக் கூறினேன். இந்த அறநெறிகளை ஒருவன் முறைப்படி பின்பற்றினாலேயே, துறவிகள் மிகவும் சிரமப்பட்டு அடையும் பலனை எளிதில் அடைந்துவிடலாம்.

உங்கள் வீட்டில் எப்போதும் அலைந்து கொண்டிருக்கும் இந்த பரப்ரும்மத்தை மகான்கள் தேடியலைகின்றனர். இதுதான் இவரது ஸ்வரூபம் என்று ப்ரும்மா உள்பட ஒருவராலும் நிர்ணயித்துக் கூற இயலாதவர்.
இவரைப் பூஜை செய்வோம். என்றார்.

தர்மபுத்ரர் நாரதர் சொன்னதைக் கேட்டு கண்ணீர் மல்க, கண்ணனை முறைப்படி பூஜை செய்தார்.

பின்னர் நாரதர் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார்.

ஏழாவது ஸ்கந்தம்‌ முற்றிற்று.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment