Tuesday, March 5, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 222 தூணில் இருக்கிறானா?

அசுரக் குழந்தைகள் ப்ரஹலாதனோடு இணைந்து நாமகீர்த்தனம் செய்வதைப் பார்த்துக்கொண்டே  வந்த சண்டாமர்க்கர்களுக்கு பயம்‌ பிடித்துக்கொண்டது.

விரைந்து சென்று அனைத்தையும்  அரசனிடம் தெரிவித்தனர்.

அதைக் கேட்டதும் ஹிரண்யகசிபுவின் உடல் கோபத்தில் பதறியது.

என் மகனை நானே கொன்றுவிடுகிறேன். அவனை அழைத்து வா என்று கர்ஜித்து பற்களை நறநறவென்று கடித்தான்.

மனவடக்கமும் புலனடக்கமும் கொண்ட ப்ரஹ்லாதன் வணக்கமாய்த் தந்தை முன் இருகரம் கூப்பி நின்றான். பால் வடியும் முகம் கொண்ட பாலகனைக் கண்டு காலால் மிதிபட்ட நாகம் போல் சீறினான் ஹிரண்யகசிபு. அவனைக் கொடூரமான வார்த்தைகளால் அவமதித்துக் கூறலானான்.


வினயமற்றவனே! குலம் கெடுக்க வந்த கோடரிக் காம்பே! நீசனே! உன்னை இப்போதே எமனுலகம் அனுப்புகிறேன்.
நான் கொஞ்சம் சினந்தாலும் மூவுலகங்களும் அதன் தலைவர்களும் நடுங்குகின்றனர். நீ யாருடைய பலத்தால் என் கட்டளையை மீறுகிறாய்?

ப்ரஹலாதன் கூறலானன்.

அரசே! ப்ரும்மா முதல், சிறு புல் வரை, அசைவன அசையாதன அனைத்தும் பகவானின் கட்டளையில் உள்ளன. தங்களுக்கும் இந்த ப்ரபஞ்சத்திற்கும் கூட ஒரே பலம் அந்த பகவான் அன்றோ?

மனவலிமை, உடல் வலிமை, மற்றும் புலன்கள் அனைத்திற்கும் ஆதாரம் அவரே. அந்த ஸர்வேஸ்வரன்தான் இந்த ப்ரபஞ்சத்தைப் படைத்து, காத்து, அழிக்கிறார்.

அப்பா! இந்த அசுர குணத்தை விடுங்கள். தன்வயப்படாது தீயவழிச்செல்லும் மனமே பெரும் பகைவன். எல்லாவற்றிலும் சமபுத்தி கொள்ளுதலே இறைவனின் பூஜை. மனம் மற்றும் ஐம்புலன்களான  ஆறு பகைவர்களை வெற்றிகொள்ளாதவன் பத்து திசைகளை வென்றதாக எண்ணுவது எவ்வளவு முட்டாள்தனம்?

ஹிரண்யகசிபு, தொடையைத் தட்டிக்கொண்டு குதிக்கலானான்.
அசடே! நீ என்ன பேசிக்கொண்டே போகிறாயே. உன் முடிவு நெருங்கிவிட்டது.

உயிரைவிடத் துணிந்து விட்டாய். இறக்கப்போகிறவர்கள் தான் முன்னுக்குப் பின் முரணாய்ப் பேசுவார்கள். என்னைத் தவிர வேறொரு தலைவன் இருக்கிறான் என்று கூறினாயே? அவன் எங்கேயடா?

அவர் எங்கும் இருக்கிறார்.

அப்படியா? இந்தத் தூணில்?

இதோ தெரிகிறாரே என்று கூறி, ஹிரண்யகசிபு காட்டிய தூணை வலம்வந்து நமஸ்கரித்தான் ப்ரஹலாதன்.


#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment