Friday, March 1, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 220 கர்பஸ்ரீமான்

நாரதர் உபதேசம் செய்தார் என்று கேட்டதும், அசுரக் குழந்தைகள் கேட்டனர்.

ப்ரஹலாதா! குரு புத்திரர்களான சண்டாமர்க்கர்களைத் தவிர நமக்கு வேறு குருமார்களைத் தெரியாது. நீ இங்கு சிறியவன். வேறு எவரையும் நாங்கள் இங்கு பார்த்ததே இல்லை. அப்படியிருக்க நாரத முனிவர் உனக்கு எப்போது உபதேசம் செய்தார்?

அதைக்கேட்டு ப்ரஹலாதன் சிரித்தவாறே கூறலானான்.

என் தந்தை தவமியற்ற மந்தரமலைக்குச் சென்றார். அப்போது, இந்திரன் முதலான தேவர்கள் அசுரர் மீது போர் தொடுத்தனர்.
அப்போது அசுரர்கள் தேவர்களைக் கண்டு அஞ்சி ஓடினர்.

வெற்றி கொள்ள வேண்டி, அசுர அரண்மனையை ஆக்கிரமித்தனர். இதற்குள் இந்திரன் என் தாய் கயாதுவைச் சிறைப்பிடித்தான்.

பயந்து நடுங்கிய அவளை இந்திரன் இழுத்துச் சென்றான். அப்போது தேவரிஷி நாரதர் எதிர்ப்பட்டார்.

அழுது புலம்பும் என் தாயைக் கண்டு, தேவர்கோனே! இதென்ன அநீதி! இவள் பிறன் மனைவி. பதிவிரதை. தவறு செய்யாதே. இவளை விட்டுவிடு என்றார்.

இந்திரன் கூறினான்.

மஹரிஷி! இவள் வயிற்றில் தேவர்களின் பகைவனான ஹிரண்யகசிபுவின் தேஜஸ் வளர்கிறது.

அதை இவள் பெற்றெடுக்கும் வரை என் மாளிகையில் இருக்கட்டும். பிறந்ததும், அதைக் கொன்றுவிட்டு, இவளை விட்டு விடுகிறேன் என்றான்.

அப்போது நாரதர், இவள் வயிற்றில் பரம பக்தனல்லவா இருக்கிறான்? உலகமனைத்தும் அவனைக் கொண்டாடப்போகிறது. பரம கல்யாண குணங்கள் கொண்டவன். மஹாத்மா. அவனையா கொல்லப்போகிறாய்? உன்னால் முடியுமா என்ன?
என்றார்.

இதைக் கேட்டதும் தேவேந்திரன் நாரதரை வணங்கி, என் தாயை விட்டு விட்டான்.  என் தாயை வலம் வந்து வணங்கிச் சென்றான்.

அதன் பின் நாரதர் என் தாயை அவரது ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று,

உன் கணவர் திரும்பி வரும் வரை நீ இங்கே நிம்மதியாக இரு

என்று கூறி அடைக்கலம் தந்தார்.

என் தாயும் என் தந்தை தவம் முடித்துத் திரும்பும்வரை அங்கேயே தங்கினாள்.

கருவுற்றிருந்த அவள், நல்லபடியாக ப்ரசவம் ஆக விரும்பி, நாரதருக்குப் பல பணிவிடைகள் செய்தாள்.

நாரதர், பாகவத தர்மமான பக்தி தத்வத்தையும், உண்மைப்‌பொருள், மற்றும் பொய்ப்பொருள் பற்றிய அறிவையும் என் தாய்க்கு உபதேசம் செய்தார்.


வெகுகாலம் ஆனதாலும், மற்ற வேலைகளில் கவனம் செலுத்துவதாலும் என் தாய்க்கு அவை நினைவில்லை. ஆனால், நாரத மஹரிஷியின் கருணையால் கருவில் இருந்துகொண்டு அனைத்தையும் கேட்ட எனக்கு எதுவுமே மறக்கவில்லை. என்றான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.

No comments:

Post a Comment