Monday, April 1, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 240 கடல் கடைந்த கடல்வண்ணன் - 4

தேவர்களும் அசுரர்களும் பகவானின் உதவியுடன் பாற்கடலைக் கடைந்தனர். அதிலிருந்து முதலில் வெளிப்பட்டது ஹாலஹாலம் என்னும் கொடிய விஷம்.

வெளியில் வந்த விஷத்தின் நெடியும், புகையும் எங்கும் பரவியது. அனைவருக்கும் மயக்கம் வந்தது. கஷ்டம் பொறுக்க இயலாமல், அனைவரும் பரமேஸ்வரனை சரணடைந்தனர்.

ஸ்ரீ ஹரிக்கு மிகவும் ப்ரியமானவரும், எப்போதும் நாமம் சொல்பவரும், ஞானியும், பற்றற்றவருமான பகவான் பரமேஸ்வரனை அவர்கள் பலவாறு துதித்தனர்.

மற்றவர் துன்பத்தைச் சற்றும் பொறுக்காத பரமேஸ்வரன், அந்த ஹாலஹால விஷத்தை சற்றும் தாமதியாமல் அருந்திவிட்டார்.

ஸதி தேவி விஷம் அவருக்குத் தீமை செய்யாவண்ணம் அதைக் கழுத்தில் நிறுத்தினார். அவரது கழுத்து நீல நிறமாகிவிட்டது.
அதுமுதல் நீலகண்டன் என்னும் திருநாமம் அவருக்கு உரித்தாயிற்று.

பிறருக்கு உதவி செய்யும் சான்றோர்களுக்கும் துன்பங்கள் வரும். ஆனால், அதை அவர்கள் சற்றும் மதிக்க மாட்டார்கள். அதையும் பகவானின் பூஜை என்றே ஏற்பர்.

அனைத்து ஜீவராசிகளுக்கும் நலத்தையே அருளும் பரமேஸ்வரனின் செயலை அனைவரும் கொண்டாடினர்.
அவர் அருந்தும்போது சிந்திய சில விஷத்துளிகளை பாம்புகளும், விஷச் செடி கொடிகளும், மற்ற விஷ ஜந்துக்களும் பெற்றுக்கொண்டன.

தேவர்களும் அசுரர்களும் இணைந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் மீண்டும் கடலைக் கடையத் துவங்கினர்.
அடுத்தாக காமதேனு வெளிவந்தாள்.

அக்னிஹோத்ரம் முதலிய கர்மாக்களுக்கு வேண்டிய பாலைத் தருவதால், அவளை ப்ரும்மவித்துக்களான ரிஷிகள் பெற்றுக்கொண்டனர்.

பிறகு உச்சைஸ்ரவஸ் என்ற வெண்மை நிறக்குதிரை வந்தது. பலிச் சக்ரவர்த்தி அதை எடுத்துக் கொண்டான்.

பிறகு வெள்ளிமலை போன்று ஐராவதம் தோன்றியது. அதை இந்திரன் ஏற்றான்.

அடுத்து வந்த கௌஸ்துப மணியை பகவான் ஏற்றார்.

அதன் பின் விண்ணுலகையே ஒளிரச் செய்யும் ப்ரகாசத்துடன் கற்பக மரம் வந்தது. அதையும் இந்திரன் ஏற்றான்.

அடுத்ததாக பட்டாடையும், பல ஆபரணங்களும் அணிந்த அப்ஸரப் பெண்டிர் வந்தனர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.

No comments:

Post a Comment