Wednesday, March 13, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 229 யுதிஷ்டிர நாரத ஸம்வாதம்

தர்மபுத்ரர் நாரதரிடம் மனிதர்கள் பின்பற்ற வேண்டிய தர்ம நெறிகளை விளக்கிக் கூறும்படி கேட்டார்.

நாரதர், நான்கு வர்ணத்தவரின் தர்மங்களையும், அவர்கள் வாழ்க்கை நடத்தவேண்டிய முறைகள், பெண்களின் தர்மங்கள் பற்றியும் மிக விரிவாக எடுத்துக் கூறினார். இவர்களைத் தவிர ஜாதிக் கலப்பால் பிறந்தவர்களின் தர்மங்களையும், விரிவாகக் கூறினார்.

வேதங்களை ஆராய்ந்த ரிஷிகளும், முனிவர்களும் அந்தந்த யுகத்திற்கும், மனிதர்களின் இயல்பிற்கும் ஏற்றவாறு அறநெறிகளை வகுத்துள்ளனர். அவற்றுள் தனக்கென்று விதிக்கப்பட்ட வழிமுறையை ஏற்றுக் கடைமையாகச் செய்பவன் அந்த கர்மங்களாலேயே உயர்ந்து குணாதீதனாகவும், இறைவனுக்குப் பிடித்தவனாகவும் ஆகிறான்.

தொடர்ந்து உழுது சாகுபடி செய்யப்படும் வயல், நாளடைவில் செழிப்பை இழந்துவிடுகிறது. அதில் பயிர் விளைவதும் நின்று போகிறது. நல்ல விதைகளை விதைத்தாலும் கூட முளைப்பதில்லை.

அதுபோல், முற்பிறவி வாசனைகளைத் தாங்கி நிற்கும் மனம், அதிகப்படியான உலக ஆசைகளை அனுபவிப்பதால் திறனிழந்து சேர்ந்து விடுகிறது. அளவோடு இன்பங்களை நுகர்ந்தால் மனச்சோர்வு ஏற்படாது. சொட்டு சொட்டாக விடப்படும் நெய் அக்னியை வளர்க்கும். அதே அக்னியில் ஒரே சமயத்தில் அதிக அளவு நெய்யை ஊற்றினால், அக்னி அணைந்துபோகும்.

ஒவ்வொரு வர்ணத்தாருக்கும், ஏற்ற விதிமுறைகள் கூறப்பட்டாலும், அவர்களது மன இயல்பு பிற வர்ணங்களுக்கேற்றபடி அமையுமானால், அதன் படியே அவனது வர்ணமும் அமைகிறது.

மேலும், ப்ரும்மசாரி, க்ருஹஸ்தன், வானப்ரஸ்தன், ஸன்யாசி ஆகியவர்களின் வாழ்க்கை முறை, அவர்கள் செய்யத் தகாதவை, பின்பற்றவேண்டிய அறங்கள் ஆகியவற்றை விரிவாக எடுத்துரைத்தார்.

ஒரு சமயம் ப்ரஹலாதன், பூவுலகைச் சுற்றி வரும்போது அவதூதர்களைச் சந்தித்ததையும், அவர்களிடம், தியான முறைகள், பகவானை அடையும் வழிகள், மோக்ஷதர்மம் ஆகியவற்றையும் கேட்டுத் தெரிந்தான். அவற்றையும் நாரதர் ஐயம் திரிபற யுதிஷ்டிரருக்கும், சபையோருக்கும் எடுத்துரைத்தார்.

இல்லறத்தான் செய்ய வேண்டிய கர்பாதானம் முதல் இறுதிச் சடங்குவரை உள்ள அத்தனை சடங்குகளின் செயல் முறையையும், அவற்றின் உண்மைப் பொருளையும், பலன்களையும் விரிவாகக் கூறினார். 

மோக்ஷத்தின் வழிகளான பித்ருயானம், தேவயானம் ஆகிவற்றைப் பற்றியும் விரொவாகக் கூறினார். 

பின்னர் ஆன்ம தத்துவம் பற்றி விளக்கலானார்.

உடல் என்பது பொய் என்பதை பஞ்ச பூதங்களின் தன்மையையும் குணங்களையும் கொண்டு மிக விரிவாக விளக்கினார்.

ஆன்மாவின் குணங்கள், இயல்புகள், உணரும் முறைகள் ஆகியவையும் விளக்கப்பட்டன.

மனம், சொல், உடல் வாயிலாகச் செய்யப்படும் அனைட்க்து காரியங்களும், பரமனால் செய்யப்படுபவை. அவனையே சென்றடைபவை என்ற எண்ணத்துடன் செய்யப்படும் செயல் அனைத்தையும் பகவானிடம் அர்ப்பணிப்பது க்ரியாத்வைதம் எனப்படும்.

இவ்வுலகிலுள்ள உறவுகள், பொருள்கள் ஆகியவை அனைத்தும் போகங்களே. இதில் தனது, பிறனது என்ற வேறுபாட்டைத்  துறப்பது த்ரவ்யாத்வைதம் எனப்படும்.

யாருக்கு, எந்த ஒரு பொருள், எச்சமயத்தில் எவ்விடத்தில் எந்த உபாயத்தால் யாரிடமிருந்து பெறலாம் என்று அறநெறிகளில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறதோ, அவ்விதமே வாழ்க்கையை நடத்திச் செல்லவேண்டும். ஆபத்துக் காலங்கள் தவிர இவற்றிலிருந்து மாறுபடுதல் கூடாது. 

இறையினிடத்தினில் அன்பு கொண்டவன், தன் நித்ய நைமித்ய கர்மாக்களை வீ ட் டி லிருந்து கொண்டே முறைப்படி செய்து,  இறைவனுக்கு அர்ப்பணம் செய்வதன் வாயிலாகவே வைகுண்டத்தை அடையலாம்.

தர்மநந்தனா! தேவர்களால் கூட உதவ இயலாத பெரும் ஆபத்துக்களிலிருந்து  பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனின் தயவால் காப்பாற்றப்பட்டீர்கள். அவரது கருணையாலேயே, அனைத்து அரசர்களையும் வென்று ராஜசூய யாகத்தைச் செய்து முடித்தீர்கள். அவனருளாலேயே இந்த ஸம்ஸார சாகரத்தையும் தாண்டுவீர்கள்.

என்று கூறி, தனது முற்பிறவிக் கதையைக் கூற த் துவங்கினார் நாரதர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment