Thursday, March 28, 2019

ஸ்ரீ மத் பாகவத பழம் - 237 கடல் கடைந்த கடல்வண்ணன் - 1

ஸ்ரீ சுகர் மேலும் கூறலானார்.
இனி ரைவத மன்வந்தரம் பற்றிக் கூறுகிறேன். நான்காவது மனுவான தாமஸ மனுவின் உடன் பிறந்தவன் ரைவதன். அவனது புதல்வர்கள் அர்ஜுனன், பலி, விந்தியன் ஆகியோர். இதில் இந்திரனாக இருந்தவன் விபு. பூதரயன் முதலானோர் தேவர்கள். இரண்யரோமா, வேதசிரஸ், ஊர்த்வபாகு முதலியோர் ஸப்தரிஷிகள்.

அவர்களில் சுப்ரர் என்ற ரிஷிக்கும் அவர் மனைவி விகுண்டாவிற்கும் வைகுண்டன் என்ற பெயருடன் பகவான் அவதரித்தார்.

சக்ஷுஸ் என்பவரின் புதல்வர் சாக்ஷுஸ் என்பவரே ஆறாவது மனு. அவரது புதல்வர்கள் பூரு, பூருஷன், ஸுத்யும்னன் முதலியோர்.
அந்த மன்வந்தரத்தில் மந்த்ரத்ருமன் என்பவன் இந்திரன். ஆப்யர் முதலியோர் தேவகணங்கள். ஹவிஷ்மான், வீரகன் முதலியோர் ஸப்தரிஷிகள். அப்போது வைராஜகன் என்பவருக்கும் ஸம்பூதி என்பவளுக்கும் அஜிதர் என்ற பெயருடன் பகவான் பிறந்தார். அவரே திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் அளித்தவர். கூர்மாவதாரம் செய்து மந்தர மலையைத் தூக்கி நிறுத்தியவரும் அவரே.

பரிக்‌ஷித் உடனே கேட்டான். அதென்ன கதை மஹரிஷி? பாற்கடலை எதற்காகக் கடைந்தார்கள்? ஆமை உருவேற்று பகவான் எதற்காக மந்தர மலையைத் தூக்கினார்?
விவரமாகக் கூறுங்கள் என்றான்.

இக்கேள்வியைக் கேட்டதும் மிகவும் மகிழ்ந்தார் சுகமுனி.
பரீக்ஷித்! முன்பொரு சமயம் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த யுத்தத்தில், அசுரர்கள் கூர்மையான ஆயுதங்கள் கொண்டு தாக்கினர். தேவர்கள் பலர் படுகாயமடைந்தனர். துர்வாசரின் சாபத்தால், இந்திரனும் தேவர்களும் செல்வங்கள் அனைத்தையும் இழந்தனர்.

அவர்கள் அனைவரும் சுமேரு மலையின் கொடுமுடியிலிருந்த ப்ரும்ம சபைக்குச் சென்று ப்ரும்ம தேவரிடம் முறையிட்டனர்.


ப்ரும்மா, அவர்களிடம் மனமிரங்கினார். பின்னர், தேவர்களே! நீங்கள், நான், மனிதர்கள், விலங்குகள், அசுரர்கள், ஜீவராசிகள் அனைத்திற்கும் புகலிடம் பகவான் ஒருவரே. அவர் சரணத்தையே பற்றுவோம். அவர் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவர். ஸத்வ, ரஜஸ், தமஸ் ஆகிய குணங்களை ஏற்று முத்தொழில் புரிகிறார். இப்போது ஸத்வ குணமேற்றிருக்கிறார். இந்த ப்ரபஞ்சத்தைக் காக்கும் பொறுப்பு அவருடையது. அவர் நமக்கு நிச்சயம் நன்மை செய்வார்
என்று கூறி அவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு ஸ்ரீவைகுண்டம் சென்றார்.

தேவர்கள் பகவானைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார்களே தவிர, அவரைக் கண்டதில்லை. எனவே, ப்ரும்மாவே, மனத்தை ஒருநிலைப்படுத்தி, வேதங்களால் பகவானைத் துதிக்கலானார்.
அவர் சொல் கேட்டு தேவர்களும் பகவானை மனமுருக வேண்டினர். மிக விரிவாக பகவானின் விபூதிகள் அனைத்தையும் புகழ்ந்து அவர்கள் துதி செய்தனர். அப்போது ஸர்வ வல்லமை பொருந்திய பகவான் ஆயிரம் சூரிய ப்ரகாசத்துடன் அவர்கள் முன் தோன்றினார்.

பகவானது ஒளியால், தேவர்களது கண்கள் கூசின. அதனால் சுற்றி இருப்பது எதையும், தங்களையும் கூடப் பார்க்க இயலவில்லை.
பரமேஸ்வரனும், ப்ரும்மாவும் மட்டும் அவ்வொளியைக் கண்டனர். அவ்வழகு தனிச் சிறப்புடையது.

மரகதமலை போன்ற திருமேனி. செவ்வரியோடிய சிவந்த கண்கள், உருக்கி வார்த்த தங்கம் போல் பட்டாடை, அழகே உருவான அங்கங்கள், வில் போல் வளைந்த புருவங்கள், அழகிய திருமுகம், ரத்ன கிரீடம், தோள்வளைகள், மகர குண்டலத்தின் ஒளியால் மின்னும் கன்னங்கள், முத்துமாலைகள், திருமார்பில் திருமகள், கழுத்தில் கௌஸ்துபம், நீண்ட வனமாலை, சுதர்சனமும், சக்ரமும் தாங்கிய திருவுருவம்.

அனைவரும் விழுந்து வணங்கினர்.
நேரில் வந்த பகவானைப் பலவாறு துதித்தபின்,

பகவானே! தங்களை நேரில் காணவேண்டும் என்று பேராவல் கொண்டிருந்தோம். இப்போது எங்கள்‌ மனம் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கித் திளைக்கிறது. எங்கள் உள்ளும் புறமும் விளங்குவது தாங்களே. எங்கள் விருப்பம் தங்களுக்குத் தெரியாததா? எங்களைக் காத்து அருள் புரியுங்கள். நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கட்டளையிடுங்கள் என்று கூறினர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment