Sunday, March 10, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 227 யுதிஷ்டிர நாரத ஸம்வாதம்

நாரதர் தொடர்ந்து கூறலானார்.
தர்மநந்தனரே! 
ப்ரஹலாதனுக்கு பகவான் செய்த அருளைக் கண்டு அனைத்து தேவர்களும் மகிழ்ந்தனர். ப்ரும்மா மீண்டும் பகவானைத் துதி செய்தார். நரஹரி அவரிடம், இனி மீண்டும் இம்மாதிரி வரங்களைத் தராதீர்கள் என்று கூறிவிட்டு அனைவரும் பார்க்கும்போதே மறைந்தார்.

எல்லா தேவர்களையும் ப்ரஹலாதன் முறைப்படி பூஜை செய்ய, அவர்கள் மகிழ்ந்து அவனை வாழ்த்திவிட்டுத்  தத்தம் இருப்பிடம் சென்றனர். 

இவ்வாறு துவார பாலகர்களான ஜெயனும், விஜயனும் திதியின் புதல்வர்களாகப் பிறந்து, பகவானின் கையாலேயே இறந்துபட்டார்கள்.

முனிவர்களின் சாபமானதால், மீண்டும் ராவண கும்பகர்ணர்களாகப் பிறந்தனர். அவ்வமயம் ஸ்ரீ ராமனின் கரத்தால் மடிந்தனர். போர்க்களத்தில் ஸ்ரீ ராமனின் அம்பு பட்டு வீழ்ந்தபோதும், பகவானைப் பார்த்துக் கொண்டே அவரை மனத்திலிருத்திய வண்ணம் உயிர் நீத்தனர்.

அவர்களே இப்போது சிசுபாலன், தந்தவக்த்ரனாகப் பிறந்துள்ளனர். சிசுபாலன் இப்போது நம் கண்ணெதிரிலேயே ஸாயுஜ்யத்தை அடைந்தார்.

பகவான் க்ருஷ்ணனிடம் பகை கொண்ட அனைத்து அசுரர்களும் பகவானை நினைத்ததாலேயே பாவங்கள் நீங்கி ஸாயுஜ்யத்தை அடைகின்றனர். கூட்டில் அடைபட்ட புழு,  குளவியை  நினைத்து பயந்து பயந்து தானும் குளவியாக மாறுவதுபோல் தான் இதுவும்.

தீயோரை நினைத்து நினைத்து விமர்சனம் செய்துகொண்டே இருப்பவருக்கு அந்த தீய குணங்கள் வந்துவிடும். ஸாதுக்களை நினைக்க நினைக்க ஒருவன் தானும் ஸாதுவாகிறான்.

சிசுபாலன் போன்றவர்களுக்கு ஸாயுஜ்யம் எப்படிப் பொருந்தும் என்று கேட்டாயல்லவா? எதை நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம். 

பகவானைப் பெறுவதற்கான பக்தி யோகமும், பாகவத தர்மமும் விளக்கிக்கூறப்பட்டது. பகவத் தத்வமும் விளக்கப்பட்டது.

இந்த சரித்திரத்தை சிரத்தையோடு கேட்கிறவர்களும், சொல்பவர்களும், நினைக்கிறவர்களும் இவ்வுலகத் தளைகளினின்று விடுபடுவர்.

யுதிஷ்டிரா! இம்மாநிலத்தில் தங்களைப் போல் பாக்யவான்கள் எவருமில்லை. ஸாக்ஷாத் பரப்ரும்மமாகிய பகவான், உங்கள் வீட்டில் ஒரு உறவினராய்த் தங்கி, விளையாடி, உங்களிடையே உலா வருகிறார். 
பல பக்தர்களுக்குக் கணநேரக் காட்சியளித்து மறைந்துவிடும் பெருமான், தங்களுடன் வருடக்கணக்காய் உறவாடுகிறார். 

அனைத்து தேவர்களும், முனிவர்களும் அவரது தரிசனம் பெறவேண்டி தங்கள் திருமாளிகைக்கு அடிக்கடி வந்து போகிறார்கள். அந்த பகவான் க்ருஷ்ணன் உங்கள் நண்பன், அம்மான் மகன், உங்கள் கட்டளைகளை முடித்து வைப்பவன், குருவாகவும் இருந்து நல்வழிப்படுத்துகிறான். நீங்கள் அழைக்கும் குரலுக்கு ஓடிவருகிறான்.

இப்போது இச்சபையில் நாங்கள் செய்யும் பூஜையை ஏற்று அவர் அருள் புரியவேண்டும். முன்பொரு சமயம் மயன் என்ற மாயாவி ருத்ரனின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்த முனைந்தபோது, பகவான் க்ருஷ்ணன்தான் அவரது புகழைக் காத்தார்.

அவ்வாறே அவர் தங்கள் புகழையும் காக்கிறார்.
என்றார்.

உடனே யுதிஷ்டிரர், அதென்ன விஷயம்? மயன் யார்? அவன் ஏன் ருத்ரனின் புகழை அழிக்க முற்பட்டான்? பகவான் எப்படி அவரது புகழைக் காத்தார்? 
என்று கேட்டார்.

நாரதர் மீண்டும் கூறத் துவங்கினார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment