Tuesday, March 19, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 232 மன்வந்தரங்களின் விவரங்கள்

பரீக்ஷித், சென்ற மன்வந்தரங்களில் பகவான் செய்த லீலைகள் அனைத்தையும் கூறுமாறு சுகரிடம் கேட்டான். சுகர் பரீக்ஷித்தைப் பார்த்துக் கூறலானார்.

இந்த கல்பத்தில்
ஸ்வாயம்புவ மனு முதலான ஆறு மன்வந்தரங்கள் முடிந்துவிட்டன. இவற்றுள் முதல் மன்வந்தரக் கதைகளை உனக்குக் கூறினேன்.

தர்மங்களைக் காக்க ஆகூதியின் மகனாக பகவான் யக்ஞராக அவதரித்தார். பின்னர் தேவஹூதியின் மகனாக கபிலராக அவதரித்து ஸாங்க்ய யோகத்தை நிறுவினார்.
இந்தக் கதைகளையெல்லாம் உனக்கு முன்பே கூறினேன்.

ஸ்வாயம்புவ மனு அரசைத் துறந்து தவம் செய்ய மனைவியுடன் கானகம்‌ சென்றார். 
சுநந்தா எனும் நதிக்கரையில் ஒரு காலை மட்டும் தரையில் ஊன்றி நூறு வருடங்கள் கடுந்தவம் மேற்கொண்டார். அப்போது அவர் தினமும் பகவானை ப்ரார்த்தனை செய்வார்.

எந்த சைதன்யத்தினால் இந்த ப்ரபஞ்சம் உயிருள்ளதாக விளங்குகிறதோ அதுவே பரமாத்மா. இவ்வுலகமே உறங்கும்போதும், எவர் சாட்சியாக விழித்திருக்கிறாரோ, அனைத்தும் அறிந்தவர் எவரோ, அவரே பகவான்.

இந்த ப்ரபஞ்சமும், மற்ற ஜீவராசிகளும் அவரிடமே குடிகொண்டிருக்கின்றன. அனைத்திலும் பகவானே நீக்கமற நிறைந்துள்ளார். அனைத்து செல்வங்களும் அவருடையதே.

அவரை புத்தியாலோ, அறிவாலோ, ஊனக்கண்களாலோ, மற்ற புலன்களாலோ அறிய இயலாது. எல்லா ஜீவராசிகளின் இதயத்திலும் உறைந்து நின்று, ஆனால் எதிலும் ஒட்டாமல் இருக்கும் ஸ்வயம்ப்ரகாசரை சரணடைவோம்.

ரிஷிகளும், முனிவர்களும், ப்ரும்மத்துடன் இரண்டறக் கலக்க விரும்பி கர்மயோகம் செய்கிறார்கள். முடிவில் அனைத்து கர்மங்களிலிருந்தும் விடுதலை பெறுகிறார்கள்.

சர்வ சக்தி படைத்த இறைவனும் கர்மங்களைச் செய்கிறார். ஆனால், அவற்றில் பற்று கொள்வதில்லை.

அவரே அனைத்திற்கும் தலைவர். எனவே எவருடைய தூண்டுதலும் இன்றி தானே அறநெறிகளை வகுத்து, அவற்றைக் காக்கவும் செய்கிறார். அத்தகைய பகவானை நான் சரணமாகப் பற்றுகிறேன்.

என்று தினமும் ப்ரார்த்தனை செய்தார் மனு.

ஒரு சமயம், தவத்திலிருந்த அவரைப் புசிப்பதற்காக அசுரர்கள் அவரை நோக்கி ஓடிவந்தனர். அவ்வமயம், யக்ஞ நாராயணர் தேவர்கள் சூழ அங்கு வந்து அசுரர்களைக்‌ கொன்று, மனுவைக் காத்தார்.

அக்னியின் புத்திரரான ஸ்வாரோசிஷர் இரண்டாவது மனு. த்யுமான், ஸுஷேணர், ரோசிஷ்மான் ஆகிய மூவரும் அவரது மகன்கள். 

அந்த மன்வந்தரத்தில் இந்திரனாக இருந்தவர் ரோசிஷ்மான். ஊர்ஜஸ்தம்பன் ஆகியோர் ஸப்தரிஷிகள்.
அப்போது இருந்த வேதசிரஸ் என்ற ரிஷியின் மனைவி துஷிதா. அவர்கள் இருவருக்கும் விபு என்ற பெயரில் பகவான் மகனாக அவதரித்தார்.

அவர் வாழ்நாள் முழுதும் ப்ரும்மசர்யத்தைப் பின்பற்றினார். அவரைப் பின்பற்றி 88000 ரிஷிகள் ப்ரும்மசர்யத்தில் இருந்தனர்.

ப்ரியவிரதனின் மகனான உத்தமன் மூன்றாவது மனுவாகப் பிறந்தான். அவரது புதல்வர்கள் பவனன், ஸ்ருஞ்ஜயன், யக்ஞஹோத்ரன் ஆகியோர்.

அந்த மன்வந்தரத்தில் வசிஷ்டரின் புதல்வரான ப்ரமதன் முதலானவர்கள் ஸப்தரிஷிகளாக இருந்தனர். ஸத்யர், வேத ச்ருதர், பத்ரர் ஆகியோர் ப்ரதான தேவர்கள். ஸத்யஜித் என்பவர் இந்திரன்.

அச்சமயத்தில் தர்மர் என்பவரின் மனைவியான ஸூந்ருதா என்பவளுக்கு ஸத்யசேநர் என்ற பெயருடன் பகவான் அவதரித்தார்.
அவரோடு ஸத்யவிரதர்கள் என்ற தேவர்கள் இருந்தனர்.

ஸத்யசேனர் இந்திரனின் தோழனாக இருந்து, தீய நடத்தையுள்ள அசுரர்களையும், பூதங்களையும் கொன்றார்.

உத்தமனின் சகோதரன் தாமஸன் என்பவர் நான்காவது மனு. ப்ருது, க்யாதி, நரன், கேது முதலிய பத்துபேர் அவரது புதல்வர்கள்.

ஸத்யகர்கள், ஹரிகள், வீரர்கள் ஆகியோர் தேவர்கள். திரிசிகர் என்பவர் இந்திரன். ஜ்யோதிதர்மன் முதலானவர்கள் ஸப்தரிஷிகள்.

தாமஸ மன்வந்தரத்தில் வித்ருதீ என்பவருக்கு வைத்ருதிகள் என்ற பெயருடைய பல தேவர்கள் தோன்றினர். அவர்கள் மறைந்திருந்த வேதத்தை தங்கள் சக்தியால் காப்பாற்றினர்.

இந்த மன்வந்தரத்தில் தான் ஹரிமேதஸ், ஹரிணி என்ற ரிஷி தம்பதியர்க்கு பகவான் ஹரி என்ற பெயரில் அவதரித்தார். அவர் முதலையிடம் சிக்குண்ட கஜேந்திரன் என்ற யானையைக் காத்தருளினார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment