Tuesday, March 26, 2019

ஸ்ரீ மத் பாகவத பழம் - 236

அனைத்து உலகங்களுக்கும் ஒரே ஆதாரமான பகவான் கஜேந்திரனின் குரல் கேட்டு, சுதர்சனத்தைக் கையிலேந்திக்கொண்டு, வேதமே உருவான கருடன் மேலேறி வெகுவேகமாக வந்தார்.

ஒரு பக்கம் காலை ‌முதலை இழுக்க, நிலை தடுமாறிக்கொண்டிருந்த கஜேந்திரன், தன்னைக் காக்கப் பறந்தோடு வரும் பகவானைக் கண்டதும், அருகிலிருந்த தாமரை மலரைத் துதிக்கையால் பறித்தது. துதிக்கையை உயரத் தூக்கி, நாராயணா! அகில குருவே! பகவானே! வணங்குகிறேன்! என்று மனத்தில் நினைத்தபடி சத்தமாகப் பிளிறியது.

அனைத்து ஜீவராசிகளின் தலைவனான இறைவனுக்கு அதன் குரல் புரியாதா? சட்டென்று கஜேந்திரனைப் பிடித்து கரைக்கு இழுத்து வந்தார். அதே சமயம் சக்ராயுதத்தால் முதலை வாயைப் பிளந்தார்.

அப்போது அனைத்து தேவர்களும் பூமாரி பொழிந்தனர். துந்துபி முதலிய வாத்யங்களை முழங்கினர். யானையைப் பீடித்திருந்த முதலை முற்பிறவியில் ஹூஹூ என்ற கந்தர்வனாக இருந்தான். தேவலர் என்ற மஹரிஷியின் சாபத்தால் முதலையானான். இப்போது பகவானது திருவருளால் முதலை உருவிலிருந்து விமோசனம் பெற்றுத் தன் பழைய உருவை அடைந்தான்.

அவன் இறைவனைத் தலையார வணங்கி வலம் வந்து அவரைப் பலவாறு துதித்தான். பின்னர் அனைவரும் பார்க்கும்போதே தன்னுலகம் சென்றான்.

கஜேந்திரன் பகவானது திருக்கரம் பட்டதும் அறியாமைத் தளை நீங்கி, பார்ஷத உருக்கொண்டான். பீதாம்பரமும், நான்கு திருக்கரங்களும், கொண்டு இறைவனை ஒத்த திருமேனியை அடைந்தான்.
கஜேந்திரன் முற்பிறவியில், இந்திரத்யும்னன் என்ற பெயருடன் பாண்டிய தேசத்து மன்னனாக இருந்தான்.

ஸ்ரீமன் நாராயணனை அல்லும் பகலும் பூஜித்து, அனைத்து விரதங்களையும் மேற்கொண்டான்.
ஒரு சமயம் தவம் செய்வதற்காகக் காட்டில் வந்து தங்கினான். ஒரு ஆசிரமம் அமைத்துக்கொண்டு, ஜபங்களையும், பூஜைகளையும் செய்துவந்தான்.

அப்போது அகத்திய முனிவர் அங்கு சிஷ்யர்களுடன் எழுந்தருளினார். அவரை கவனித்தபோதும், உபசாரங்கள் எதுவும் செய்யாமல், பூஜையைத் தொடர்ந்தான்.

ஒரு பூஜையோ, விரதமோ மேற்கொள்ளும் சமயத்தில் ஒரு மஹாத்மாவோ, குருவோ, அல்லது பெரியவர்களோ வந்தால், இறைவனே வந்ததாக எண்ணி, அவர்களுக்கு உரிய மரியாதையை அளித்த பிறகே பூஜையைத் தொடரவேண்டும்.

அவனது அலட்சியத்தைக் கண்டு கோபம் கொண்ட அகத்தியமுனி, இவனென்ன அறநெறிகளை அறியாதவனா? மதம் கொண்டு அந்தணரை அவமதிக்கிறானே. யானை போல் அறியாமை கொண்டவன். எனவே, யானையாகப் பிறக்கக் கடவது என்று சாபமிட்டார்.

இந்த்ரத்யும்னன் இதுவும் தெய்வ சங்கல்பம் என்று கொண்டான். இறைவனைப் பூஜித்த பலனால், அவனுக்கு யானைப் பிறவியிலும், பக்தி தொடர்ந்தது.

பகவான் அவனை சாபத்திலிருந்தும், துன்பத்திலிருந்தும் விடுவித்து சாரூப்ய முக்தி அளித்தார். பின்னர் அவனையும் அழைத்துக்கொண்டு கருடன் மீதேறி வைகுண்டம் சென்றார்
.
ஸ்ரீ சுகர் மேலும் கூறினார்.
பரீக்ஷித்! பகவானின் மஹிமையைக் கூறும் இந்த கஜேந்திரனின் கதையைக் கேட்பவர்க்குக் காலபயம் விலகும்.

கெட்ட கனவுகளின் தீய விளைவுகள் அழியும். இம்மையில் புகழும், மறுமையில் ஸ்வர்கமும் கிட்டும். எல்லாத் துன்பமும் விலகவேண்டுமெனில் அதிகாலை இதைப் பாராயணம் செய்ய வேண்டும்.

கஜேந்திரன் துதி கேட்டு மகிழ்ந்து பகவான் பின்வருமாறு கூறினார்.

அதிகாலை எழுந்து பொறி புலன்களை தன்வயப்படுத்தி, என்னையும், கஜேந்திரனான உன்னையும், இத்தடாகத்தையும், திரிகூடம் என்னும் இம்மலையையும், அதிலுள்ள குகை, வனம், மரங்கள், புதர்கள், கொடுமுடிகள், வைகுண்டம், ப்ரும்மதேவரின் ஸத்யலோகம், கைலாயம், பாற்கடல், ஒளிமிகுந்த ஸ்வேதத்தீவு, ஸ்ரீ வத்ஸம், கௌஸ்துபம், வனமாலை, கௌமோதகீ, சுதர்சனம், பாஞ்சஜன்யம், கருடன், ஆதிசேஷன், திருமகள், ப்ரும்மா, நாரதர், பரமேஸ்வரன், ப்ரஹலாதன், என் திரு அவதாரங்கள், சூரியன், சந்திரன், அக்னி, ப்ரணவம், என் மாயை, பசுக்கள், அறநெறிகள், தட்சனின் பெண்கள், கங்கை, ஸரஸ்வதி, அளகநந்தா, யமுனை, ஐராவதம், துருவன், ஸப்த ரிஷிகள், நளன், தர்மபுத்ரர், ஜனகன், என் விபூதிகள் ஆகியவற்றை மனதார நினைப்பவர்கள் அனைத்து பாவங்களும் நீங்கப்பெறுவர்.

ஹே! இந்த்ரத்யும்னா! நீ கஜேந்திரனாக இருந்தபோது செய்த இத்துதியை ப்ரும்ம முஹூர்த்தவேளையில் சொல்பவர்க்கு, இறுதிக்காலத்தில் தூய்மையான என் நினைவைத் தருவேன்.

இவ்வாறு கூறிய பின்னர், பகவான் பாஞ்சஜன்யத்தை ஊதியவண்ணம் கருடன் மேல் ஏறிச் சென்றார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment