Tuesday, May 26, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 473

கடலுக்குள் அமைந்திருக்கும் புதிய நகரான துவாரகையின் பாதுகாப்பை உறுதி செய்துவிட்டு பலராமனும் மதுராவின் கோட்டைவாசலுக்கு வந்துவிட்டான். 

ஜராசந்தன் வேகமாகத் தாக்குதலைத் துவங்கினான். கண்ணனும் பலராமனும் பயந்தவர்கள் போல் கையிலிருந்த செல்வங்களைக்‌ கீழே போட்டுவிட்டு ஓடத்துவங்கினார்கள்.

அவர்கள் ஓடுவதைப் பார்த்த ஜராசந்தன் பதினேழு முறை தான் தோற்று நிராயுதபாணியாக நின்றதை மறந்தான். இப்போது அவர்கள் தன்னைக் கண்டு பயந்து ஓடுவதாக சிரித்தான். தேரில் அவர்களைத் துரத்தினான்.

வெகுதூரம் ஓடிய கண்ணனும்‌ பலராமனும் எப்போதும் மழை பெய்துகொண்டிருக்கும் பிரவர்ஷணம் என்ற மலையின் மீது ஏறினர்.

துரத்திக்கொண்டு வந்த ஜராசந்தன் எவ்வளவு தேடியும் அவர்களைக் காணவில்லை. 
வெகுநேரம் தேடி ஓய்ந்துபோனான். பின்னர் மலையைச் சுற்றித் தீமூட்டிவிட்டுக் கிளம்பிச் சென்றான்.

அவன் சென்றதும் ஒரு யோஜனை உயரமுள்ள அம்மலையிலிருஎது கண்ணனும் பலராமனும் கீழே குதித்தனர். (ஒரு யோஜனை என்பது எட்டு மைல்கள்)
பின்னர் யார் கண்களிலும் படாமல் துவாரகையை அடைந்துவிட்டனர்.

ஜராசந்தன் கண்ணன் தனக்கு பயந்து ஓடி ஒளிந்து இறந்து விட்டதாகப் பறைசாற்றிக்கொண்டிருந்தான்.

துவாரகையில் மிகவும் மகிழ்ச்சியாக காலம் ஓடிற்று. ஆனர்த்த தேசத்து மன்னர் ரைவதன் என்பவர் ப்ரும்மாவின் ஆலோசனைப்படி தன் மகள் ரேவதியை பலராமனுக்கு திருமணம் செய்து கொடுத்தார். இது பற்றி விரிவாக ஒன்பதாவது ஸ்கந்தத்தில் பார்த்தோம்.  நினைவுகூர்வதற்காக அப்பகுதி இங்கே கொடுக்கப்படுகிறது.

ஸ்ரீ மத் பாகவத பழம் - 273
- ஹரிப்ரியா

சர்யாதிக்கு சுகன்யாவைத் தவிர, உத்தானபர்ஹிஸ், ஆனர்த்தன், பூரிஷேணன் என்று மூன்று மகன்கள் இருந்ததைப் பார்த்தோம். இவர்களில் ஆனர்த்தனுக்கு ரேவதன் என்ற மகன் பிறந்தான்.

இந்த ரேவதன் என்பவன் கடலின் நடுவில் குசஸ்தலி என்ற நகரத்தை நிர்மாணம் செய்தான். அதிலிருந்து கொண்டே ஆனர்த்தம் முதலான நாடுகளை ஆண்டு வந்தான்.

அவனுக்கு மிகவும் சிறந்து விளங்கக்கூடிய நூறு புதல்வர்கள் பிறந்தனர். அவர்களில் மூத்தவன் ககுத்மீ. இவன் ரைவதன் என்றும் அழைக்கப் படுகிறாரன்.
அவனுடைய மகள் ரேவதி என்பவள்.
அவர்கள் அனைவருமே சான்றோர்களாக இருந்தமையால் எளிதில் ப்ரும்மலோகம் வரை செல்ல முடிந்தது.

ரேவதிக்கு திருமணத்திற்கு வரன் தேடுவதற்காக ஆலோசனை வேண்டி ககுத்மீ, ரேவதியையும் அழைத்துக்கொண்டு ப்ரும்மலோகம் சென்றான். 
உத்தம ஸாதுக்களுக்கு ப்ரும்மலோகத்தின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். இவன் சென்ற சமயம் ஒரு இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. ஸரஸ்வதி வீணையை மீட்டிக்கொண்டு பாட, மற்ற அப்ஸரஸ்களும் தேவர்களு‌ம் நடனமாடிக்கொண்டிருந்தனர்.

நிகழ்ச்சியின் நடுவே சென்று ப்ரும்மாவைத் தொந்தரவு செய்யவேண்டாம் என்று நினைத்த ககுத்மீ அங்கேயே ஓரமாகக் காத்திருந்தான். 
சிறிது நேரத்தில் நிகழ்ச்சி முடிந்ததும், ப்ரும்மதேவரை வணங்கித் தான் வந்த விஷயத்தைக்‌ கூறினான்.

தன் மகளுக்கு திருமணத்திற்குத் தகுந்த வரனைக் காட்டும்படி வேண்டி நிற்கும் ககுத்மீயைப் பார்த்து ப்ரும்மா திகைத்துப் போனார். பின்னர் சிரித்துக்கொண்டே கூறலானார்.

ககுத்மீ! நீ உன் மகளுக்கு வரனாக யார் யாரையெல்லாம் பற்றி யோசித்து வைத்திருந்தாயோ, அவர்கள் ஒருவரும் இப்போது பூமியில் இல்லை. அவர்களது பேரப்பிள்ளைகள் கூட இல்லை. பூமிக்கும், ப்ரும்மலோகத்திற்குமான காலக் கணக்குகள் வெவ்வேறானவை. 
நீ இங்கே சற்று நேரம் தாமதிப்பதற்குள், பூமியில் இருபத்தேழு சதுர்யுக காலம் முடிந்துவிட்டது. 

(பூமியில் ஒரு வருடம் என்பது ப்ரும்ம லோகத்தில் ஒரு நிமிடம் என்பதாக கணக்கு. கிருஷ்ணாவதாரத்திலும் ப்ரும்ம மோஹன லீலையின்போது ப்ரும்மா ஒரு  தாமதிப்பதற்குள் பூமியில் ஒரு வருடம் ஓடிவிட்டது என்பதாக அறிகிறோம். காலக் கணக்குகள் மாறுபடும் விஷயத்தை முசுகுந்தன், மற்றும் கட்வாங்கர் கதைகளிலும் அறியலாம். மூன்றாவது ஸ்கந்தத்தில் காலக் கணக்கு ஏற்கனவே விரிவாகக் கூறப்பட்டது)

உன்னுடைய சுற்றத்தார் கூட எவருமே தற்போது பூமியில்‌ இல்லை.

நீ ஒன்று செய்யலாம். இப்போது பகவானின் அம்சமாக பெரும் பலவானான பலராமன் பூமியில் அவதாரம் செய்திருக்கிறார்.

உன் மகளுக்கு அவர்தான் பொருத்தமானவர். பூலோகத்து மனிதர்கள் யுகாந்தர மனிதர்கள் போல் சக்தி படைத்தவர்கள் அல்லர். தற்போதுள்ளவர்கள் பலம், உயரம், அறிவு அனைத்திலும் மிகவும்‌ குறைந்தவர்கள். உன் மகளுக்கேற்ற புருஷனாக, பகவானின் அம்சமான பலராமனே தகுதியானவர்.
என்றார். (தர்ம புத்திரரும் நாட்டில் ஆங்காங்கே கலகங்கள் ஏற்படுவதையும், மக்கள் மனத்தில் அமைதியில்லை என்பதையும், அடுத்து வரும் சந்ததியினர் மிகவும் உயரம் குறைவாக இருப்பதையும் பார்த்து, கலியுகம் வந்துவிட்டதென்று அறிகிறார்.)

ககுத்மீ, அப்படியே செய்கிறேன் என்று கூறி ப்ரும்மாவிடமிருந்து விடைபெற்று தன் நகரம் வந்தான். அங்கே அவனது குடும்பம், மக்கள், நாடு எதுவுமே இல்லை. அடையாளம் தெரியாத மனிதர்கள் வசித்து வந்தனர். அவனது வம்சத்தவர்கள் வேறெங்கோ புலம் பெயர்ந்திருந்தார்கள். ககுத்மீக்கு அப்போதைய மனிதர்களைக் கண்டால் வேடிக்கையாக இருந்தது.

மக்களுக்கும் இவனைப் பார்த்தால் வேற்று கிரகவாசிபோல் இருந்தது. இனி அங்கிருப்பது சரியல்ல என்றுணர்ந்த ககுத்மீ, துவாரகைக்குச் சென்று, வசுதேவரிடமும், தேவகியிடமும் அனுமதி பெற்று ரேவதியை பலராமனுக்கு நிச்சயம் செய்தான்.

ரேவதி பல யுகங்களுக்கு முன் பிறந்த பெண்ணானதால், இரு மடங்கு உயரமுடையவளாய் இருந்தாள்.
அவ்வாறு இருந்தால், கேலிக்குரியதாகிவிடும். மேலும் அவளுக்கும் தன்னையொத்த எவரும் இல்லாமல் சிரமம் ஏற்படும் என்பதால், பலராமன் தன் கலப்பையால் அவளின் தலையில் அழுத்தி, அவளைத் தனக்கேற்ற உயரமுள்ள பெண்ணாக, சம காலத்து மனிதர்களைப் போல் ஆக்கிக்கொண்டார்.

அவர்களின் திருமணம் பெற்றோரும், மக்களும் வாழ்த்திக் கொண்டாட கோலாஹலமாக இனிதே நடந்தேறியது.

# மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment