Sunday, September 30, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 110 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 54

அந்தணர்கள் தக்ஷனின் வேள்வியைத் தொடங்கவும், ஏற்கனவே பூதகணங்களால் வேள்வியில் ஏற்பட்ட தோஷங்களைப் போக்கவும், பகவான் விஷ்ணுவின் ப்ரீதிக்காக 'புரோடாசம்' என்ற ஹவிஸை மூன்று பாத்திரங்களில் தயார் செய்தனர். அதை அத்வர்யு என்ற ப்ரதான புரோஹிதர் கையொலேந்தி நிற்க, வேள்வி நாயகனான தக்ஷன் பகவான் விஷ்ணுவைத் தியானித்தான்.

அழைக்குமிடத்திற்கு ஓடிவரும் பெருமான் உடனே ஆவிர்பவித்தார்.

அவரது திருமேனி ஒளியில் அனைத்தும் மங்கிப்போயின. ப்ருஹத், ரந்திரம் என்ற இரு ஸாமவேதங்களையும் இறக்கைகளாகக் கொண்ட கருடன் மேல் ஏறிக் காட்சியளித்தார்.
ஸ்ரீ மத் பாகவத்தில் இரண்டு மூன்று அத்யாயங்களுக்கு ஒரு முறையேனும் பகவான் விஷ்ணுவின் ரூபவர்ணனை மிக விஸ்தாரமாகச் சொல்லப்படும்.
இவ்வாறு சொல்லிச் சொல்லி கதை கேட்பவரின் மனத்தில் காதுகளின் வழியாகவே பகவானின் ரூபத்தை ப்ரதிஷ்டை செய்து விடுகிறார் வியாஸ பகவான்.

நீலமேகத் திருமேனி, இடுப்பில் பீதாம்பரம், அதன்மேல் ரத்தினக் கற்கள் பதித்த தங்க ஒட்டியாணம், சூரிய ஒளி போல் கண்ணைப் பறிக்கும் கிரீடம், தாமரை மலரன்ன திருமுகம், கறுத்த அளகபாரம் (சுருண்ட கேசம்), காதுகளில் மகர குண்டலங்கள், பக்தர்களைக் காப்பதற்காகவே எட்டு கரங்களிலும் சங்கு, சக்கரம், தாமரை மலர், அம்பு, வில், கதை, வாள், கேடயம் முதலிய ஆயுதங்கள், கர்ணிகார மரம் போன்ற உறுதியான திருமேனி, மார்பில் ஸ்ரீ வத்ஸம் என்னும் திருமகள் வசிக்கும் மரு, கழுத்தில் வனமாலை, அழகான புன்சிரிப்பு, கருணை ததும்பும்‌ பார்வை இவற்றுடன் ப்ரபஞ்சமே மகிழும் வண்ணம் பகவான் தோன்றினார்.

ப்ரும்மா உள்ளிட்ட அத்தனை தேவர்களும் உடனே எழுந்து வணங்கினார்கள்.

பகவானின் புகழைச் சொல்லி மாளாது. எனினும் அனைத்து தேவர்களும் தங்களால் இயன்ற ஸ்துதிகளைச் செய்தனர்.

தக்ஷன் உடனே பூஜா பாத்திரங்களை எடுத்துக்கொண்டு பார்ஷதர்கள் சூழ பகவானின் திருவடியை அடைந்து துதித்தவாறே சரணடைந்தான்.

தக்ஷன், ரித்விக்குகள், ஸபையோர்கள், ஸ்ரீ ருத்ரன், ப்ருகு, ப்ரும்மா, இந்திரன், ரித்விக்குகளின் மனைவியர், ரிஷிகள், ஸித்தர்கள், தக்ஷனின் மனைவி, திக்பாலகர்கள், யோகிகள், ப்ரும்மா, அக்னி, தேவர்கள், கந்தர்வர்கள், வித்யாதரர்கள், ப்ராஹ்மணர்கள் அனைவரும் தனித்தனியாக பகவான் முன் சென்று அவரைத் துதி செய்து வணங்கினார்கள்.

அக்காட்சி, எப்படி இருந்ததெனில்,
ஒரு மஹாத்மா ஒரு க்ருஹத்திற்கோ, அல்லது ஒரு சபைக்கோ எழுந்தருளினால், அங்குள்ளவர் அனைவரும் பொதுவாக ஒரு முறை வணங்குவர். இருப்பினும் அதனால் மனத்ருப்தி கொள்ளாமல் தனித்தனியாக ஒருமுறை அவர் முன் சென்று வணங்குவதைப் போல் இருந்தது.

வேள்வி துவங்கியதும் அத்தனை தேவர்களுக்குமான ஹவிர் பாகம் வழங்கப்பட்டதைக் கண்டு மகிழ்வுற்ற பகவான் தானும் தனது ஹவியைப்பெற்றார்.

பின்னர் தக்ஷனை அழைத்துக் கூறலானார்.

தக்ஷனே! ஜகத்திற்கு ஆதிகாரணனான நானே ப்ரும்மாவாகவும், சிவனாகவும் உருக்கொண்டிருக்கிறேன். அனைத்து ஜீவன்களின் ஆன்மாவும் நானே. அவர்களின் அத்தனை செயலுக்கும் சாட்சியாக விளங்குகிறேன். ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களை ஏற்று மாயையை இயக்கி அந்தந்தச் செயல்களுக்கேற்ற உருவமும் பெயரும் கொண்டு விளங்குகிறேன்.

அறிவிலிகள் என்னையும், ப்ரும்மாவையும், சிவனையும் வெவ்வேறாகப் பார்க்கிறார்கள்.

எந்த மனிதனாவது அவனது தலை, கை, கால்கள் முதலியவற்றை வேறு ஒருவனுடையது என்று எண்ணுவானா? அதுபோலவே என் பக்தன் என்னிடமும், மற்ற ஜீவராசிகளிடமும் வேற்றுமை பாராட்டுவதில்லை.

எங்களுக்குள் வேற்றுமை காண்பவன் அமைதியைப் பெறுவதில்லை.
என்றார்.

மைத்ரேயர் கூறலானார்.

விதுரா..
இவ்வாறு கூறி அவனை ஆசீர்வாதம் செய்துவிட்டு பகவான் கிளம்பியதும், தக்ஷன் மற்ற தேவர்களுக்குரிய மரியாதைகளைச் செய்துவிட்டு வேள்வியை முடித்து அவப்ருதஸ்நானம் செய்தான்.

(அவப்ருதம் என்பது வேள்வியை முடித்துப் பின் செய்யவேண்டிய மங்கள ஸ்நானம்)

அனைத்து தேவர்களும் தக்ஷனை
உன்‌ மனம் என்றும் தர்மநெறியில் நிற்கட்டும்‌
என்று வாழ்த்திவிட்டு இருப்பிடம்‌ சென்றனர்.

இவ்வாறு தக்ஷன் மகளான ஸதீதேவி யோகத்தீயால் உயிர் நீத்த பின் ஹிமவானின் மனைவியான மேனா தேவியிடம் பார்வதி என்னும் பெயருடன் மகளாகப் பிறந்தாள். பரமேஸ்வரனையே புகலாகக் கொண்ட அவள், அவரையே கணவராக அடைந்தாள்.

இந்த சரித்திரத்தை ப்ருஹஸ்பதியின் சிஷ்யரும், பரம பாகவதருமான உத்தவரிடமிருந்து கேட்டறிந்தேன்.

விதுரா! இச்சரிதம் ஆயுளையும், புகழையும் வளர்க்கக்கூடியது. பாவமூட்டைகளை அழிப்பது. இதை பக்தியோடு தானும் கேட்டுப் பிறருக்கும் சொல்பவனது ஸம்சார துக்கம் நீங்கும்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment