Friday, September 28, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 109 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 53

தேவகணங்கள் புடைசூழ கைலாயம் சென்ற ப்ரும்மதேவர் பரமேஸ்வரனை வணங்கிவிட்டுக் கூறலானார்.

சங்கரா! தாங்கள் பூரண ப்ரும்மம் என்பதை அறிவேன். வேத‌மார்கத்தைக்‌ காப்பாற்ற எண்ணி தக்ஷன்‌ மூலம்‌ இந்த வேள்வியை உருவாக்கியதே தாங்கள்தானே. விரதங்கள், அனுஷ்டானங்கள், வர்ணாஸ்ரம ‌தர்மம் ஆகியவற்றைத் தோற்றுவித்தவரும் தாங்களே.

புண்ய கர்மங்கள் செய்பவர்க்கு ஸ்வர்கத்தையும்‌ முக்தியையும் அருள்கிறீர்கள்.

தீயசெயல் செய்பவர்க்குக் கொடிய நரகத்தை அளிக்கிறீர்கள்.

சாதாரணமான பாமரனைக் கோபம்‌ அடிமைப்படுத்துதல் இயல்பு. ஆனால், தங்கள் திருவடியில் மனத்தை லயிக்கச் செய்பவர்கள்,‌ சகல ஜீவராசிகளிடத்தும் தங்களையே காண்பவர்களைக் கோபம் எவ்வாறு அடிமைப்படுத்த முடியும்?

எங்கும்‌ எதிலும்‌ வேற்றுமை பாராட்டி, கண்மூடித்தனமாக கர்ம மார்கத்தில் உழல்பவர்கள், தீய எண்ணம் கொண்டவர்கள். பொறாமைத்தீயில் வெந்துபோகிறவர்கள்.

இவர்களை இவர்களது நடத்தையே கொன்றுபோடும். அவ்வாறிருக்க பெரியோர்களான தாங்கள் அவர்களைக்‌ கொல்லத் தேவையில்லையே.

பகவானான பத்மநாபனின் மாயை வெல்லமுடியாதது. அநேகமாக எல்லோருமே அதன்‌ அடிமைகள்தாம். அவர்கள் மனம் பேதலித்து வேற்றுமை பாராட்டும்‌ இடத்தில் இது விதியின் வலிமையே அன்றி இவனாகச் செய்யவில்லை என்று கருணை கொள்வார்களேயன்றித் தம்‌வலிமையைக் காட்டுவதில்லை.

வேள்வியில் தங்களுக்கு ஹவிர்பாகம்‌ உண்டு என்பது நியதி. அறிவிலிகளான இந்த புரோஹிதர்கள் தங்களுக்கு ஹவிர்பாகம் கொடாமல் வேள்வியை நடத்தியது மாபெரும் தவறுதான். தாங்கள் இவ்வேள்வியை அழித்ததும் நியாயமே. ஆனால், பாதியில் நின்றுபோன யாகத்தைப் பூர்த்தி செய்யக் கருணை செய்யுங்கள்.

வேள்வி செய்யும் தக்ஷன் உயிருடன் எழட்டும். பகனுக்கு கண்கள்‌கிடைக்கட்டும். ப்ருகு முனிவரும் பூஷாவும் இழந்தைவைகளைப் பெறட்டும். ஆயுதங்கள் கற்கள் இவைகளால் உடல் நொறுங்கிய தேவர்கள் தங்கள் கருணையால் விரைவில் குணமடையட்டும்.

வேள்வியில் எஞ்சிய அனைத்துமே உமது பாகமாகட்டும். தாங்கள் பாகத்தை ஏற்றாலேயே வேள்வி பூர்த்தி அடையட்டும்
என்று வேண்டினார்.

பரமேஸ்வரன் சிரித்தவாறே கேளுங்கள் என்று சொல்லிக் கூறலானார்.

ப்ரும்மதேவரே! பகவானின் மாயையில் மயங்கிய புத்தியற்ற தக்ஷன் போன்றவர்களின் செயல்களைப் பற்றி நான் சிந்திப்பதோ பேசுவதோ இல்லை.

ஆனால், தவறு செய்பவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டாமா? அதனால்தான் இச்சிறிய தண்டனை.

தக்ஷன் தலை எரியுண்டதால் அவன் ஆட்டுத்தலையைப்‌ பெறட்டும். மித்ரன் என்ற தேவனின் கண்களால் பகன் யாகத்தைப் பார்க்கட்டும். மாவுப் பண்டங்களைச் சாப்பிடும் பூஷா வேள்வி செய்யும் எஜமானனது பற்களால் மென்று சாப்பிடட்டும். வேள்வியில் எஞ்சியதை எனக்களித்த தேவர்களது உடலுறுப்புகள் முன்போல் ஆகட்டும்.

கையிழந்த அத்வர்யு முதலானவர்கள் அஸ்வினி தேவர்கள் மற்றும்‌ பூஷா ஆகியோரின் கரங்கள் வாயிலாகத் தன்‌காரியங்களைச் செய்துகொள்ளட்டும். ப்ருகுமுனிவர் ஆட்டுக்கடாவின் மீசையைப்‌ பெறட்டும்.
என்றார்.

ஏதோ இந்த அளவிற்கு இரங்கி‌செய்தாரே என்று அத்தனை தேவர்களும் உடனேயே நன்று நன்று‌ என்று ஆர்ப்பரித்தனர்.

பரமசிவனிடம் விடைபெற்றுக்கொண்டு மீண்டும் வேள்விச்சாலை க்கு வந்தனர் தேவர்கள்.

அங்கு ஸ்வனீயம்‌ என்ற யக்ஞப்பசுவான ஆட்டின் தலையை தக்ஷனின் உடலில் பொருத்தியதும் அவன் உயிர் பெற்றெழுந்தான். முன்பு பகைமையினால் மனம் கலங்கியிருந்த தக்ஷன் இப்போது மனத்தெளிவடைந்து சிவனின் கருணையை நினைத்துக் கண் கலங்கினான்.
பேச நா எழவில்லை. பொங்கும் இதயத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு மனதார சிவனைத் துதிக்கலானான்.

இறைவா! தங்களை நான் அவமதித்தபோதிலும் அதைப் பொருட்படுத்தாமல் அனுக்ரஹமே செய்தீர்கள்.

ஒருவன் ஆசார அனுஷ்டானமின்றிப் பெயரளவில் அந்தணனாக இருந்தாலும்கூட நீங்களும் மஹாவிஷ்ணுவும் அவனைப் புறக்கணிப்பதில்லை. அப்படியிருக்க வேள்வி செய்பவர்களை எப்படிப் புறக்கணிப்பீர்கள்?

தாங்களே ப்ரும்மாவாக இருந்து அனைத்து வேதங்களையும், ஜீவராசிகளையும் படைத்தீர்கள். மாடு மேய்ப்பவன் கையில் கோல் கொண்டு பசுக்களை ஒருமுகப்படுத்திக் காப்பதுபோல் தாங்கள் சாஸ்திரங்களைக் கொண்டு அனவரையும் சகல ஆபத்துக்களிலிருந்தும் காக்கிறீர்கள்.

தங்கள் பெருமையறியாமல் கீழான சொல்லம்புகளால் உம்மைத் தாக்கிவிட்டேன். நான் தங்களுடைய கருணைக்கு எவ்விதக் கைம்மாறும் செய்ய இயலாதாவன்.

என் மேல் தாங்கள் மகிழ்ச்சி கொள்ளவேண்டும்
என்று தக்ஷன்
மிகவிரைவில் மனம் மகிழும் இயல்புடைய பரமேஸ்வரனைத் துதித்தான்.

பின்னர்
ப்ரும்மாவின் அனுமதிபெற்று ரித்விக்குகள், புரோஹிதர்கள் ஆகியவர்களின் உதவியுடன்‌ மீண்டும் யாகத்தைத் துவங்கினான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment