Monday, September 3, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 88 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 32

பஞ்சபூதங்களும், புலன்களும் அவற்றின் தன்மாத்திரைகளிலிருந்து வெளிவந்ததை விவரித்தார் கபிலர்.
ஐந்து பூதங்களும் ஒன்றிலிருந்து ஒன்று உண்டானதால், அவற்றிற்கு தாயான வஸ்துவின் குணமும் உண்டு.
அதாவது ஆகாயத்தின் குணம் ஒலி. அதிலிருந்து தோன்றிய வாயுவிற்கு ஒலியும் உண்டு, தொடுவுணர்வும் உண்டு. வாயுவிலிருந்து தோன்றிய அக்னிக்கு ஒலி, தொடுவுணர்வு, ஒளி (ரூபம் - கண்ணுக்குப் புலப்படும்) ஆகியவை உண்டு.

அக்னியிலிருந்து தோன்றிய நீருக்கு ஒலி, தொடுவுணர்வு, உருவம், சுவை ஆகியவை உண்டு.

நீரிலிருந்து தோன்றிய மண்ணுக்கு ஒலி, உருவம், தொடுவுணர்வு, உருவம், சுவை, மணம் ஆகிய ஐந்து குணங்களும் உண்டு.

மஹத் தத்வம், அஹங்காரம், மற்றும் ஐம்பூதங்கள் ஆகிய இந்த ஏழு தத்வங்களும் ஒன்றோடொன்று சேராமல் தனித்து நின்றன.

பகவான் அந்த தத்வங்களினுள் காலம், கர்மம் ஆகியவற்றுடன் நுழைந்தார். அதனால் உந்தப்பட்ட அவை, ஒன்றோடொன்று பிரிக்க முடியாமல் ஒன்று சேர்ந்தன. அப்போது உயிற்ற முட்டை வடிவிலான அண்டம் தோன்றியது.

இந்த அண்டத்திற்கு விசேஷம்‌ என்ற பெயர் உண்டு. இது நாற்புறங்களிலும் ஜலம், அக்னி, காற்று, ஆகாயம், மஹத் தத்வம் ஆகிய ஆறு ஆவரணங்களால் சூழப்பட்டுள்ளது. இவை மேல்நோக்கு வரிசையில் ஒவ்வொன்றும் முன்னதைக் காட்டிலும் பத்து மடங்கு பெரியது. ஆறு ஆவரணங்களையும் (மறைப்புகள்) தாண்டி ஏழாவதாக ப்ரக்ருதி உள்ளது.

பகவான் ஸ்ரீ ஹரியின் உருவமான ஈரேழு பதினான்கு லோகங்களும் இந்த அண்டத்தில் அடங்கியுள்ளன.
ஒளிமயமான அண்டத்திலிருந்து விராட்புருஷன் தன்‌ உறக்கத்தை விட்டு எழுந்து உயிரற்ற அண்டத்தினுள் சக்தியாய் நுழைந்தார். இந்திரியக் கூட்டங்களைப்‌ பிரித்து ஸ்தூலமாகத் தனக்கு ஒரு ரூபம் ஏற்படுத்திக்கொண்டார்.

தன் ஒவ்வொரு இந்திரியத்திற்கும் ஒரு அதிதேவதையைப் படைத்தார். வாக்கின் அதிதேவதை அக்னி.
மூக்கின் அதிதேவதை வாயு. கண்களின் அதிதேவதை சூரியன். காதுகளின் அதிதேவதை திக் தேவதைகள்.

தோல், ரோமங்கள், மீசை, கேசம்‌முதலியவற்றின் அதிதேவதை மூலிகைகள்.

ஜனனேந்த்ரியத்தின் அதிதேவதை நீர்.
கழிவுகளை அகற்றும் இந்திரியத்தின் தேவதை ம்ருத்யு.

கைகளின் தேவதை இந்திரன். கால்களின் தேவதை மஹாவிஷ்ணு.
நாடி நரம்புகளின் அதிதேவதை நதிகள்.

வயிற்றின் தேவதை ஸமுத்ரம்.
ஹ்ருதயம், மனம் ஆகியவற்றின் தேவதை சந்திரன். புத்தியின் அபிமான தேவதை ப்ரும்மா. அஹங்கார தத்வத்தின் அதிதேவதை ருத்ரன். சித்தம் எனும்‌ பகுத்தறிவின் அபிமான தேவதை க்ஷேத்ரக்ஞன்.

அனைத்திற்கும் காரணமான விராட்புருஷன் யோகத்தில் இருந்தார்.

இவ்வளவு இந்திரியங்களும் தேவதைகளும் தோன்றி விராட்புருஷனை யோகத்திலிருந்து எழுப்ப முயன்றனர்.

அத்தனையும் தோன்றக் காரணமாய் இருந்த சக்தியான விராட்புருஷன், க்ஷேத்ரக்ஞனைத் தவிர மற்ற அனைத்து தேவர்களும் அவற்றின் இந்திரியங்களுள் உந்து சக்தியாய் நுழைந்து எழுப்பியும்‌ எழவே இல்லை.

பின்னர் அந்தராத்மாவான க்ஷேத்ரக்ஞன், சித்தத்தின் அதிஷ்டான தேவதையான வாசுதேவனுடன் இதயத்தில் நுழைந்தார். அக்கணமே விராட்புருஷன் ப்ரளய ஜலத்திலிருந்து வெளிவந்தார்.

இதுவே நம் விஷயத்திலும்‌ நடக்கிறது. புத்தியும் அந்தராத்மாவும் விழித்துக்கொள்ளும் வரை ஒருவன் தூக்கத்திலிருந்து விடுபடுவதில்லை.

அந்தராத்மாவான வாசுதேவனே அனைத்துயிர்களிலும் விளங்குகிறார்.

ஜலத்தில் ப்ரதிபலிக்கும் சூரியன், நீரின் குளிர்ச்சி, அசைவு முதலியவற்றால் பாதிக்கப்படுவதில்லை. அதுபோல்‌ பரமாத்மா இவ்வுடலினுள் இருப்பினும் உடலின் இன்ப துன்பங்கள் அவரைப் பாதிப்பதில்லை. அதனால் எந்தச் செயலுக்கும் அவர் சாட்சியே தவிர கர்த்தா இல்லை.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment