Monday, September 24, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 105 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 49

தக்ஷனின் கதையைத் தொடர்ந்து சொன்னார் மைத்ரேயர்.

தன் மாப்பிள்ளையான சிவன் ப்ரஜாபதியான தனக்கு மரியாதை அளிக்கவில்லை என்று அஹங்காரத்துடன் அவரைக் கண்டபடி ஏசத் துவங்கினான் தக்ஷன். அனைத்தையும் நிந்தாஸ்துதியாக ஏற்று பரமேஸ்வரன் அமைதி காத்தார்.

ஆனால் சபையிலிருந்த மற்றவர்கள் மிகுந்த அச்சத்துடன் தக்ஷனைத் தடுக்க முயற்சி செய்தும் அவன் கேட்காமல் யாகத்தில் ஹவிர்பாகம் கிடையாது என்ற சிவனுக்கு சாபமும் அளித்தான்.

தன் தலைவரை நிந்தனை செய்ததைப் பொறுக்க இயலாமல் நந்திதேவர் தக்ஷனுக்கு ஆட்டுத்தலை கிடைக்கட்டும் என்று சாபமளித்தார். அவர் இன்னொரு கொடூரமான சாபத்தை அந்தணர்க்கும் அளித்தார்.

அறிவிலியான தக்ஷன் கர்மங்களை மெய்யென்று எண்ணுகிறான். இவனும், இவனைச் சேர்ந்தவர்களும்‌ ஸம்சார சாகரத்தில் மாட்டிக்கொண்டு தவிக்கட்டும். இவன் செய்த நிந்தனையை அனுமதித்த அந்தணர்களுக்கு பிழைப்பிற்காக வேத அத்யயனம்‌செய்யும் நிலைமை வரட்டும். பிழைப்பிற்காகவே விரதங்களும், தவமும் மேற்கொண்டு பொறி இன்பத்தில் உழலட்டும் என்ற கொடூரமான சாபத்தை அளித்தார் நந்திதேவர்.

அதைக் கண்டு பொறுக்காத ப்ருகு முனிவர் சிவனடியார்கள்‌ ஆசாரம் விடுத்து பாஷண்டிகளாக அலையட்டும்‌ என்று சாபம் விடுத்தார்.

அவரது சாபத்தைக் கண்டு வருந்திய சிவன் தன் கணங்களுடன் அமைதியாக வெளியேறினார்.

விதுரா! ப்ரஜாபதிகள் அனைவரும் யாகத்தை முடித்துக்கொண்டு கிளம்பினார்கள்.

மாமனாருக்கும் மாப்பிள்ளைக்குமான இப்பகைமை வெகுகாலம் நீடித்தது.

ஒரு சமயம் ப்ரும்மதேவர் ப்ரஜாபதிகள் அனைவர்க்கும் தலைவனாக தன் மகன் தக்ஷனுக்கு பட்டாபிஷேகம் செய்தார்.‌ இதனால் அவனது கர்வம் மிதமிஞ்சி வளர்ந்தது.

அவன் பரமேஸ்வரனையும், ப்ரும்மநிஷ்டர்களையும் அவமதித்து வாஜபேயம்‌ என்ற யாகத்தைச் செய்து முடித்தான்.

பின்னர் ப்ருஹஸ்பதிஸவம் என்ற சிறந்த யாகத்தைத் துவங்கினான்.
அந்த வேள்வியில் தேவர்கள், ப்ரும்மரிஷிகள், பித்ருக்கள் அனைவர்க்கும்‌ மரியாதை செய்தான்.

அப்போது தக்ஷான் மகளான ஸதீதேவி ஆகாய மார்கத்தில் சென்ற தேவர்கள் பேசிக்கொண்டதிலிருந்து தன் தந்தை செய்யும் வேள்வி பற்றி அறிந்துகொண்டாள்.

கயிலைக்குச் சமீபத்தில் வசிக்கும் கந்தர்வர்கள் அவரது மனைவிகளுடன் நல்ல பட்டாடைகள் உடுத்தி, நகைகள் பல அணிந்து,‌ விமானம் ஏறிச்செல்லும் காட்சியைக் கண்டு தானும் போகவேண்டும் என்று ஆர்வம் கொண்டாள்.
தன்‌ கணவரான பரமேஸ்வரனிடம்‌ சென்று,
தங்கள்‌ மாமனார் இப்போது யாகம்‌நடத்துகிறாராம்.
எல்லா தேவர்களும்‌ அங்குதான் செல்கிறார்கள். நாமும் போகலாமே என்றாள்.

அந்த வேள்விக்கு என் சகோதரிகள்‌ அனைவரும் வருவார்கள். என் தாயையும் அவர்களையும் பார்த்து வெகு காலமாயிற்று. என் தந்தை எனக்களிக்கும் சீர்வரிசைகளை நான் தங்களுடன்‌ சேர்ந்து பெற விரும்புகிறேன்.

மாயையால் விளங்கும்‌ இப்பிரபஞ்சம் தங்களிடமே நிலைத்து விளங்குகிறது. ஆனால் நானோ பெண். உண்மை ஸ்வரூபத்தை அறிய இயலாத பேதை. தங்களின் கருணைக்குப் பாத்திரமானவள்.

தந்தை, உற்ற நண்பர், ஆசிரியர், கணவன் ஆகியோர் வீட்டிற்கு அழைப்பின்றிச் செல்லலாம் என்பது சாஸ்திரமல்லவா?

எனவே தயை கூர்ந்து என் வேண்டுகோளை நிறைவேற்றுங்கள் என்றாள்.

அதைக்கேட்டுச் சிரித்த பரமேஸ்வரன்,
தேவீ! நீ சொல்வது உண்மைதான். அன்புள்ளவர் வீட்டிற்கு அவசியம் செல்லலாம். ஆனால், அஹங்காரத்தினால் எண்ணம் மாசடைந்தவர்கள் சான்றோர் பெருமையை உணர்வதில்லை. அவர்கள் வீட்டிற்கு நம் உறவினர்தானே என்றெண்ணி ஒருக்காலும் போகக்கூடாது.

அவர்கள் அவமரியாதையாகப் பேசக்கூடும்.
வில்லால் அடிக்கும் அம்பைக் காட்டிலும் சொல்லால் அடிப்பது அதிக வேதனை தரும்.

சொல்லம்பால் புண்பட்டவனால் அதை மறக்க இயலாது. எபோதும்‌ அதை நினைத்துப் புலம்புவான்.

அழகியே! உன் தந்தை உயர்ந்தவர்தான். ஆனால் எனக்கு உன்னைத் திருமணம் செய்து கொடுத்ததை நினைத்து வருந்துகிறார். இப்போது நீ அங்கு சென்றால் அன்போ மரியாதையோ கிடைக்காது.

ஒருவரை ஒருவர் வணங்குவது அவர் உள்ளுறையும் இறைவனையே சேரும். ஆனால், அஹங்காரம்‌ நிரம்பியவர் மனத்தில் இறைவன் வெளிப் படுவதில்லை.

என்னிடம் பகை கொண்ட உன் தந்தையை நீ சென்று பார்த்தால் அவர் உன்னை அவமதிப்பார்.

நல்ல நிலையில் உள்ளோருக்கு உற்றார் உறவினரால் அவமானம் நேரிட்டால் அது அவரின் திடீர் மரணத்திற்கு காரணமாகிவிடும்.
என்றார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment