Thursday, September 27, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 108 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 52

மைத்ரேயர் தொடர்ந்து கூறினார்.

ருத்ரகணங்களின் செய்கையால் பயந்துபோன தேவர்களும் புரோஹிதர்களும் ஓடிச்சென்று ப்ரும்மாவிடம்‌ முறையிட்டனர்.

இந்நிகழ்ச்சியை முன்பே எதிர்பார்த்திருந்த ப்ரும்மனும் ஸ்ரீமன்‌நாராயணனும் தக்ஷனின் வேள்விக்குச் செல்லவில்லை.

தேவர்கள் கூறியதைக் கேட்ட ப்ரும்மா,
தேவர்களே! வலிமை மிக்க ஒருவன் தனக்கு எதிரானவனுக்கு தீமை எண்ணினால், அவன் எண்ணும் தீமைகள் அனைத்தும் அவனுக்கே வந்துவிடும்.

முறைப்படி வேள்விகளில் ஹவிர்பாகம் கொடாமல் பரமேஸ்வரனுக்கு பெருந்தவறு இழைத்துவிட்டீர்கள். அவர் எளிதில் அருள் புரியும் வள்ளல். அவர் தாளிணை பற்றி மன்னிப்புக் கோருங்கள்.

நீங்கள் துவங்கிய வேள்வி முற்றுப்பெற வேண்டுமானால், உடனே சென்று பாவ மன்னிப்பு வேண்டுங்கள். ஏற்கனவே தக்ஷனின் சொல்லம்புகளால் மிகவும்‌ புண்பட்டிருக்கிறார். இப்போது அன்பு மனைவியையும்‌ இழந்துவிட்டார். அவருக்குக் கோபம் வருமாகில் அனைத்து உலகங்களும்‌ அழியும்.

அவரது பராக்ரமத்தையும் உண்மை நிலையையும் எவரும் அறியமாட்டார்.

அவரைச் சமாதானப் படுத்துவதும் கடினம். அவர் திருவடிகளில் தஞ்சம் புகுவதே ஒரே வழி
என்றார்.

பின்னர் அவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு ப்ரும்மா தானும்‌ கைலாயம் கிளம்பினார்.
ஏற்கனவே வைகுண்டத்தை மிக அழகாக நேரில் காண்பிப்பதாக வர்ணித்திருக்கிறார் வியாஸ பகவான்.
இப்போது கைலாயத்தை அழகுற வர்ணிக்கிறார்.

கைலாய மலையில் மூலிகைகள், தவம், மந்திரம், யோகம்‌ இவற்றால் சித்தி பெற்றவர்களும்‌, மற்றும் பிறவியிலேயே சித்தி பெற்ற தேவர்களும் யோகிகளும் முனிவர்களும் நித்ய வாசம்‌ செய்கின்றனர்.

கின்னரர்கள், கந்தர்வர்கள், அப்ஸரப் பெண்டிர்கள்‌ நிறைந்தது அம்மாமலை.
பல வண்ணமயமான தாதுக்கள் நிறைந்த உயர்ந்த சிகரங்களை உடையது.

மரங்கள், செடிகொடிகள், புதர்கள்‌ மண்டியது. காட்டு விலங்குகள்‌ கூட்டம்‌ கூட்டமாகச் சஞ்சரிப்பது.

பளிங்கு போன்ற நீரோடைகளும் அருவிகளும் கொண்டது. குகைகளும் தாழ்வரைகளும் நிரம்பியது. சித்தர்கள் மற்றும் அவர்களது மனைவிமார்களின் விளையாட்டுத் தோட்டமாக விளங்குவது.

மயில்கள் அகவல் ஒலிகள், பஞ்சம ஸ்வரத்தில் குயில்களின் குரல்கள் , வண்டுகளின் ரீங்காரம், பல்வேறு பறவைகளின் கலகலவென்ற ஓசை, நதிகளின் சலசலப்பு போன்ற பல்வேறு நாதங்கள்‌ கேட்டுக்கொண்டே‌ இருக்கும்.

ஏராளமான கற்பகத்தருக்களைக் கொண்டது. அங்குமிங்கும் நடந்து செல்லும் யானைகளைக் கண்டால் மலைதான் அசைகிறதோ என்று தோன்றும்.

மந்தாரம், பாரிஜாதம், ஸரவம், தமாலம், தேக்கு, பனை, மருதம், மா, கதம்பம், வேம்பு, நாகம், புன்னாகம், சம்பகம், பாடலம், அசோகம், மகிழம், குந்தம், மருதோன்றி முதலிய மரங்கள், நூறு‌ இதழ்கள் கொண்ட பொற்றாமரைகள், ஏலக்காய், மாலதிக்கொடிகள், குடை மல்லிகை, மல்லிகை, வ்ருக்ஷி ஆகிய பூக்களும்‌ நிரம்பி வழிகின்றன.

இன்னும் கைலாயத்தில் காணப்படும் ஏராளமான மரங்கள், பூக்கள், விலங்குகளின் வகைகள் அனைத்தும் விவரமாகச் சொல்லப்படுகின்றன.
அங்கு அவர்கள் அளகாபுரியைக் கண்டனர். ஸௌகந்திகம் என்னும் தாமரைப்பூக்கள் நிறைந்த ஸௌகந்திக வனத்தைக் கண்டனர்.

அளகாபுரிக்கு வெளியில் பகவானின் தாமரைத் தாள்கள் பட்டு, நந்தா, அளகநந்தா என்று பவித்ரமான புண்ய நதிகள்‌ உள்ளன.

பொன், வெள்ளி, நவமணிகளால் இழைத்துச் செய்யப்பட்ட விமானங்களில் யக்ஷர்களது மனைவிகள்‌ உலா வருகின்றனர். அதனால் அளகாபுரி மின்னல்களால் சூழப்பட்ட ஆகாயம்போல் காட்சியளித்தது. நீலத்தாமரைகள்‌ மிகுந்த தடாகங்கள் காணப்பட்டன.

அனைத்தும் கண்டுகொண்டே சென்ற தேவர்கள் அங்கு ஒரு பெரிய கல்லால மரத்தைக் கண்டனர்.

அம்மரம்‌நூறு யோஜனை உயரமுடையது. எழுபத்தைந்து யோஜனை தூரத்திற்கு அதன் கிளைகள் படர்ந்திருந்தன. அங்கு எப்போதும்‌ நிழல்‌ நிரம்பியிருந்தது. பறவைகளின் கூடுகளே இல்லை.

அம்மரத்தடியில் வசித்தால்‌ மனம் ஒன்றுபடும். முக்தியின்பம்‌ பெற விரும்புவோர் வந்து கூடுமிடம்‌ அது.

அவ்வாலமரத்தடியில்
சினம் தவிர்த்த யமனோ?
என்னும்படி வீற்றிருக்கும் சிவபெருமானைக் கண்டனர் தேவர்கள்.
அமைதியே உருவாக ஸனகர், முதலியவர்களும், குபேரனும்‌ சேவை செய்ய பரமேஸ்வரன் அமர்ந்திருந்தார்.
உலகங்கள் அனைத்திற்கும் தலைவர், ஏழைப் பங்காளன், நண்பர், அன்புள்ளத்தால் அனைவர்க்கும் அருள் செய்பவர். உலக நன்மைக்காக உபாசனை, தவம், தியானம் ஆகியவற்றைச் செய்பவர்.

மாலைவேளை மேகம் போல் செந்நிறத் திருமேனி கொண்டவர். பொன்னார் மேனி, விபூதி, தண்டம், சடைமுடி, மான்தோல், சந்திரகலை ஆகியவற்றோடு விளங்கினார்.

தர்பையினாலான ஆசனத்தில் அமர்ந்த முனிவர்கள் நாற்புறமும் சூழ, மத்தியில் நாரதருக்கு ப்ரும்ம தத்வத்தை உபதேசம்‌ செய்து கொண்டிருந்தார்.

தனது இடது பாதத்தை வலது தொடையில் வைத்து, இடது முழங்காலில் திருக்கரத்தை வைத்து ஊன்றி, வலது முன்னங்கையில் ருத்ராக்ஷமாலை ஏந்தி ஞான முத்திரை காண்பித்துக்கொண்டிருந்தார்.

அவரை தேவகணங்கள் திருவடிகளில் விழுந்து வணங்கினர். ப்ரும்மாவைக் கண்ட பரமேஸ்வரன் எழுந்திருந்து இரு கரம்‌கூப்பி அவரை வணங்கினார்.

அக்காட்சி வாமன அவதாரம் எடுத்தபோது லோகபூஜ்யரான மஹாவிஷ்ணு கச்யப முனிவரை வணங்கியது போலிருந்தது.

உடனே மற்ற தேவர்களும், முனிவர்களும் ப்ரும்மாவை வணங்கினர்.

ப்ரும்மதேவர் பரமேஸ்வரனிடம்‌ பேசலானார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment