Thursday, September 20, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 101 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 45

மைத்ரேயர் கூறினார்.

மாசற்ற விதுரா! நீ விரும்பிக் கேட்டபடி கபிலருக்கும் தேவஹூதிக்கும் நடந்த உரையாடலை விரித்துக் கூறினேன்.
ஆன்ம யோகம் பற்றிய கபிலரின் கொள்கைகள் மிகவும் ரகசியமானவை. அவற்றைச் சொல்பவர், கேட்பவர் அனைவர்க்கும் ஸ்ரீ மன் நாராயணனின் பாத தாமரைகளில் பக்தி உண்டாகி அவரையே அடைவர்.

தொடர்ந்து ஸ்வாயம்புவ மனுவின் வம்ச வரலாற்றைக் கூறலானார் மைத்ரேயர்.

ஸ்வாயம்புவ மனுவிற்கு ஆஹூதி, ப்ரஸூதி, தேவஹூதி என்று மூன்று பெண்கள்.

ஆகூதி என்ற பெண்ணை மனு, ருசி என்ற ப்ரஜாபதிக்கு 'புத்ரிகா தர்மம்' என்ற நிபந்தனையின்படி திருமணம் செய்து கொடுத்தார்.

புத்ரிகா தர்மம் எனப்படுவது யாதெனில், புத்ரன் இல்லாமல் பெண்ணை மட்டும் பெற்றவர், பெண்ணுக்குப் பிறக்கும் புத்ரனை தனக்குக் கொடுக்கவேண்டும் என்ற உறுதிமொழியோடு கொடுப்பதாகும்.

ஆகூதிக்கு சகோதரர்கள் இருந்தபோதிலும், மனுவிற்கு பிள்ளைகள் அதிகம் வேண்டும் என்பதால் அப்படிச் செய்தார்.

ருசிக்கும் ஆகூதிக்கும் ஆண் ஒன்று பெண் ஒன்று என்று இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர்.

ஆண்மகவாய்ப் பிறந்தவர் யக்ஞன் என்னும் பெயர் கொண்ட மஹாவிஷ்ணுவின் வேள்வித் திருமேனியே ஆகும்.
பெண்மகவு மஹாலக்ஷ்மியின் அம்சமாக நாராயணனை விட்டகலாமல் பிறந்த தக்ஷிணை என்பவள்.

மனு மகள் ஆகூதியின் மகனைப் பெருமகிழ்ச்சியோடு எடுத்துவந்து தான் வளர்க்கலானார்.
ருசி தக்ஷிணையைத் தானே வைத்துக் கொண்டார்.

பின்னர் யக்ஞருக்கும்‌ தக்ஷிணைக்கும் திருமணம் நடந்து பன்னிரண்டு மகன்களைப் பெற்றார்.

ஸ்வாயம்புவ மனுவின் காலத்தில் அவர்கள் தூஷிதர்கள் என்ற தேவர்களாக இருந்தனர்.

விஷ்ணுவின் அம்சமான யக்ஞன் இந்திரனாக இருந்தார்.

மனுவின் புதல்வர்களான பிரியவிரதன், உத்தானபாதன் இருவரும் மஹாவீரர்கள்.
அவர்களது வம்சத்தினரே மன்வந்தர அரசர்களாயினர்.

விதுரரே!
தேவஹூதியின் கதையைச் சொன்னேன். மனு, தன்
இன்னொரு மகளான ப்ரஸூதியை ப்ரும்மாவின் மகனான தக்ஷனுக்கு மணம் முடித்தார்.

அவர்களது வம்ச பரம்பரைதான் மூவுலகும் பரவி நிற்கிறது.

கர்தமரின் ஒன்பது பெண்களும் ஒன்பது ரிஷிகளை மணந்தார்கள் என்று முன்னமே பார்த்தோம்.
அவர்களின் வம்சத்தைக்‌ கூறுகிறேன் கேளும்.

கலை என்பவள் மரீசியை மணந்தாள். அவள் கச்யபர், பூர்ணிமான் என்ற இரு பிள்ளைகளைப் பெற்றாள்.
பூர்ணிமானுக்கு விரஜன்,விச்வகன் என்ற பிள்ளைகளும், தேவகுல்யை என்ற பெண்ணும் தோன்றினர். இந்த தேவகுல்யைதான் தன் அடுத்த பிறவியில் தேவநதியான கங்கையாகத் தோன்றினாள்.

கர்தமரின் பெண்ணான அனஸூயை அத்ரி மஹரிஷியை மணந்தாள்.
அவர்களது புதல்வர்கள் தத்தர், துர்வாசர், சந்திரன் என்ற மும்மூர்த்திகளின் அம்சங்களாவர்.

விதுரர் உடனே கேட்டார்.
குருவே, இம்மூன்று மூர்த்திகளும் எதற்காக அத்ரியின் ஆசிரமத்தில் அவதாரம் செய்தனர்?

மைத்ரேயர் பதிலிறுக்கத் துவங்கினார்.
விதுரா!
அத்ரி மஹரிஷி அனஸூயாவுடன் ருக்ஷ பர்வதம் சென்று அங்கு பகவானைக் குறித்து ஒற்றைக் காலில் நின்று நூறு வருடங்கள் தவமியற்றினார்.

தனக்கு இறைவனுக்கொப்பான புதல்வன் வேண்டும் என்பதே அவரது தவத்தின் நோக்கம்.
அவரது தவத்தில் மகிழ்ந்து பகவான் மும்மூர்த்திகளாய்க் காட்சி அளித்தார்.

ஆச்சர்யமடைந்த அத்ரி, அவர்களை விழுந்து வணங்கிப் பூஜித்தார். பின்னர், நான் குழந்தை வரம் வேண்டி ஒரு பகவானைத்தானே தியானம் செய்தேன்? ஒரே பகவான்தான் உலகைப் படைத்து காத்து அழிக்கும் பொருட்டு மூவராய்ப் பிரித்துக்கொண்டீர்கள். ஆனால், எனக்கு
நீங்கள் மூவராய்க் காட்சி தருவதன் நோக்கம் என்ன? என்று வினவினார்.

மும்மூர்த்திகள் அழகாகப் பதில் சொன்னார்கள்.
நீங்கள் எந்த ஜகதீச்வரனை வேண்டினீர்களோ அவரே தான் நாங்கள். உங்கள் தவத்தில் மகிழ்ந்தோம்.
எங்கள் மூவரின் அம்சமாகவும் உங்களுக்கு மூன்று புதல்வர்கள் பிறப்பார்கள்.
என்றனர்.

அதன்படியே அத்ரிக்கு, மஹாவிஷ்ணுவின் அம்சமாக தத்தரும், சிவனின் அம்சமாக துர்வாசரும், ப்ரும்மாவின் அம்சமாக சந்திரனும் தோன்றினார்கள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment