Saturday, September 8, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 93 விதுர மைத்ரேய ஸம்வாதம்‌- 37

ஆத்ம ஸாக்ஷாத்காரம்‌ அடைந்தவனுக்குத் தன் உடல் பற்றிய நினைவு இருப்பதில்லை. உட்கார்ந்திருக்கிறானா, நிற்கிறானா, நடக்கிறானா, திரும்பி வந்துவிட்டானா என்பதும் தெரியாது.

உடல் இருந்தபோதிலும், அதிலிருந்து வேறுபட்டே நிற்கிறான்.

இவ்வுடல் முன்வினைக்கு அடிமைப்பட்டது. கர்மப்பயனை அனுபவித்து முடியும்வரை பொறி புலன்களுடன்தான் இருக்கும்.‌

ஆனால், பக்தியோக ஸமாதியை அடைந்தவன், இறைதத்வத்தின் உண்மையை அறிந்தவன் இவ்வுடலையோ, அதைச் சார்ந்த உறவுகளையோ தனதென்று நினைப்பதில்லை.

கனவில் கண்ட உடல் கனவு உள்ளவரை‌ உண்மையென்று தோன்றும். கனவு கலைந்ததும் அவ்வுடலின் நினைவு மறைந்துவிடும்.
உடலிலிருந்துகொண்டே சாட்சியாகப் பார்த்துக்கொண்டிருக்கும் பரமன் உடலிலிருந்து வேறுபட்டவனே. தனித்தவன்.

ஒரு கட்டை தீப்பற்றி எரியும்போது தீப்பொறி, புகை எல்லாம் உண்டாகிறது. ஆனால் அவை தீ இல்லை. கட்டையையும் தீ என்பதில்லை. தீ கட்டையைப் பற்றிக்கொண்டிருக்கிறது.

அதுபோலவே உடலில் குடியிருக்கும் ஜீவன் உடலில் இருக்கும் பஞ்சபூதங்கள், பொறி, புலன்கள், அந்தக்கரணம் (புத்தி, மனம், சித்தம்) ஆகியவற்றை இயக்குகிறது. ஆனால் சாட்சியாகவே இருக்கிறான். அவற்றோடு சம்பந்தப்படுவதில்லை.

வளியை வாகனமாய்க் கொண்ட ஜீவனும்
குடியேறிய காயமிது - உந்திப்பற
ஒருநாள் பறந்திடும் - உந்திப்பற
- கலிதர்ம உந்தியார்
மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி

அண்டஜம் (முட்டையிலிருந்து தோன்றியவை)

ஸ்வேதஜம் (வியர்வையிலிருந்து தோன்றியவை)

உத்பிஜம் (விதையிலிருந்து தோன்றியவை)

ஜராயுஜம் (கருவில் தோன்றியவை)

ஆகிய அனைத்து ஜீவராசிகளும் உடலால் வேறுபட்டவை. ஆனால், பஞ்சபூதங்களிலிருந்து தோன்றியவைதாம். அதனால் எல்லா ஜீவன்களிலும் தன்னையும், தன்னுள் எல்லா ஜீவன்களையும் பார்க்கவேண்டும்.

எரியும் தீ அனைத்தும் ஒன்றே. ஆனாலும் அது பற்றியிருக்கும் பொருளின் நீள அகலத்தைப் பொறுத்து மாறுபாட்டுடன் தெரிகிறது.
அதுபோல் ஜீவன், தான் அண்டியிருக்கும் குணம், உருவம் ஆகிய வேறுபாடுகளால் பலவாறாகத் தெரிகிறது.

வெல்லம் வார்க்கப்படும் அச்சைப் பொறுத்து தெரிவதுபோல்.
வளையல், தோடு, மாலை என்று விதம் விதமாக அலங்கரித்துக்கொள்கிறோம். ஆனால், அவற்றைத் திருட வருபவனுக்கு ரூபம் தெரிவதில்லை. அனைத்தும் தங்கம் என்று ஒரே விஷயமாகத் தெரிகிறது.

ப்ரக்ருதி என்பது பகவானின் ஒரு அம்சம். உண்மையான பகவத் தத்வத்தை மறைக்கும் திரை. அதுவே மாயை. அதுவே அனைத்திற்கும் காரணமாகவும் அதிலிருந்து தோன்றும் காரியமாகவும் இருக்கிறது. இவ்விதமானதென்று அறியவொண்ணாதது.

அதை பக்தன் பகவானின் அருளாலேயே வெற்றிகொண்டு ப்ரும்ம ஸ்வரூபமாகவே ஆகிவிடுகிறான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் மதுரகீதம்

ராகம் : வராளி
தாளம் : ஆதி
பல்லவி
பரப்ரும்மம் நாத ப்ரும்மம்
நாம ப்ரும்மம் நாராயணனே
அனுபல்லவி
ப்ரும்மம் ஒன்றே ப்ரும்மானுபவம் ஒன்றே
ப்ரும்மானுஸந்தானம் எங்கும் எதிலும் எப்போதும் நன்றே
சரணம்
இருக்கின்ற ஒன்றை இல்லாத இவ்வுலகில்
அறிய அல்லலுறும் க்மானிடர்காள்
அறிபவனும் ஹரி அறிகின்ற பொருளும் ஹரி
அறியும் செயலும் ஹரி இதுவே சரி!


  • #மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment