Sunday, September 23, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 104 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 48

தன்‌ மகளிடம் மிகுந்த அன்பு கொண்ட தக்ஷன்‌ ஏன் மாப்பிள்ளையிடம் பகைமை பாராட்டினான்?

சகல விதமான அசையும் அசையா ஜீவராசிகளின் தந்தை போன்றவர் பரமேஸ்வரன். அவரிடம்‌ கூட ஒருவனால் பகைமை பாராட்ட முடியுமா என்ன?

ஸதி தேவி உயிரை விடும்‌ அளவிற்கு என்ன நேர்ந்தது?

என்று கேட்டார் விதுரர்.
ஹரி பக்தி செய்கிறேன் என்று சிவன் உள்ளிட்ட மற்ற தெய்வங்களிடம் குற்றம்‌ பாராட்டுவதும், சிவ பக்தி செய்கிறேன் என்று ஹரியிடம்‌ தோ‌ஷம் பாராட்டுவதும் தவறு
என்றுணர்த்தவே ஹரியின் அவதாரங்களை விரித்துக் கூற ஆரம்பிக்கும் முன்னரே,
ஹரியிடம் ஏற்பட்ட அளவற்ற பக்தியால் சிவனிடம் தோஷம் பாராட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி, இந்த சரித்திரத்தை வைத்திருக்கிறார் வியாசர்.

மற்ற அனைத்து புராணங்களையும் விடவும் ஸ்ரீ மத் பாகவதம் ஏற்றம் பெறுவதன் காரணமும்‌ இஃதே.

மற்ற தெய்வங்களிட துவேஷமின்றி இஷ்ட தெய்வத்திடம் ப்ரேமையை வைக்கவேண்டும். அப்படிச் செய்பவர்க்கு எல்லா தெய்வங்களும் அனுகூலமாக நிற்கும்.

அனைத்து தேவதா, மனுஷ்ய, ஜீவ ஸ்வரூபங்களும் ஒரே பகவான் என்னும்போது அவர்களின் வெவ்வேறு ரூபங்களை மனத்தில்‌ கொண்டு குற்றம் பாராட்டலாகாது.

ஹரியும் சிவனும் ஒண்ணு.. அறியாதவனுக்கு இரு தெய்வங்களின் அருளும் எட்டாக்கனியே..

மைத்ரேயர் கூறத் துவங்கினார்.

முன்பொரு சமயம் விஸ்வஸ்ருஜகன் என்ற ப்ரஜாபதிகள் நடத்திய ஸத்ரயாகத்தில் முனிவர்கள், தேவர்கள், அக்னிதேவர்கள் அனைவரும் பரிவாரங்களுடன் குழுமினர்.

மகிமை மிக்க பெரியோர் நிறைந்த சபையில் தேஜஸ் மிக்க தக்ஷன் நுழைந்தான். அவனது ஒளி அனைவரையும் கவர்ந்தது. அவனைக் கண்டு ப்ரும்மாவையும், பரமேஸ்வரனையும் தவிர மற்ற அனைவரும் எழுந்து நின்றனர்.
அனைவரையும்‌ பணிந்து, பின் தன் தந்தையான ப்ரும்மதேவரையும் வணங்கி ஆசனத்தில் அமர்ந்தான்.

தன்முன் அமர்ந்திருக்கும் சிவபெருமான் மட்டும் எழுந்திருக்காதது அவனுக்கு எரிச்சலை ஊட்டியது.

அவரை எரித்துவிடுவான் போலப் பார்த்துக் கொண்டு பேசலானான்.

பெரியோர்களே, நான் பொறாமையினாலோ, கர்வத்தாலோ கூறவில்லை.

இதோ‌ இங்கிருக்கும் சிவன் காந்தக் கண்ணழகியும், இளவரசியுமான என் மகளை அக்னி சாட்சியாக மணந்தான். எனக்கு மருமகன் மற்றும் சீடன் போன்ற இவன் எழுந்து வணங்கி மரியாதை செய்திருக்க வேண்டும். அகம்பாவத்தினால் வாய் வார்த்தையாகக் கூட மரியாதை செய்யவில்லை.

விருப்பமின்றி தகுதியற்றவர்க்கு வேதத்தைச் சொல்லிக் கொடுத்தாற்போல் விருப்பமின்றி என் மகளை இவனுக்குக் கொடுத்தேன்.

அவளுக்கு சற்றும்‌ பொருத்தமில்லாதவன். மயானங்களில் சஞ்சரிக்கிறான். சாம்பலையும், அருவருக்கத்தக்க கபால மாலையும் அணிகிறான். ஆடுகிறான். பாடுகிறான். பித்தன் போல் இருக்கிறான். உண்மையில் பெயரளவில்தான் சிவன். (சிவன் என்றால் மங்களமானவன் என்று பொருள்).

பித்தர்களே இவனுக்குப் பிடித்தமானவர்கள்.

பூதகணங்களின் தலைவன். ப்ரும்மதேவரின் பரிந்துரையால் இவனுக்குப் பெண்ணைக் கொடுத்தேன்.
என்று கத்தினான்.

உண்மையில் இது நிந்தாஸ்துதி ஆகும். ஞானியும், எப்போதும் ஆனந்தத்தில்‌ திளைப்பவரும், தன் சரீர நினைவே அற்றவராக சஞ்சரிப்பவருமான பரமேஸ்வரன் உண்மையில் இதைக் கேட்டு மகிழ்ந்தார்.

எனினும் தக்ஷன் விரோதத்தினால் பேசுகிறான். புறத்தோற்றத்தை மட்டுமே பார்க்கிறான். ஞானஸ்வரூபத்தை அறியவில்லை என்பதால் மௌனமாக இருந்தார்.

அவர் எதுவும் பேசாமல் உணர்வுகளற்று இருப்பதைக் கண்ட தக்ஷன் மேலும் ஆத்திரமடைந்து அவருக்கு சாபம் விடுத்தான்.

இனி இவனுக்கு எந்த யாகத்திலும் தேவர்களுக்குச் சமமாக ஹவிர்பாகம் கிடையாது.

வேள்விச் சாலையில் இருந்த அனைவரும் தக்ஷனைத் தடுத்தனர்.

சிவநிந்தை கேட்டதால் காதுகளைப் பொத்திக் கொண்டனர்.

பரமேஸ்வரன் பேசாமல் இருப்பதைக் கண்டு, தன் தலைவரை ஏசுவதைக் காணச் சகியாமல் கொதித்துப்போன நந்தி தேவர் தக்ஷனுக்கு சாபமிட்டார்.

அறிவிலியான தக்ஷன் ஆன்மா வேறு, பரமாத்மா வேறு என்று பேதம்‌கொண்டான். தன்னைப்‌பற்றிய புகழ்ச்சியில் மயங்கி கர்வம் மிகுந்து ஆத்ம ஸ்வரூபத்தை மறந்தான். இவன் விரைவிலேயே மனிததன்மையை இழந்து ஆட்டுத்தலையைப் பெறட்டும்
என்றார்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment