Wednesday, September 26, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 107 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 51

ஸதீதேவி தன் ப்ராணனை விடுவதைக் கண்ட சிவகணங்கள் தக்ஷனைக் கொல்ல ஆயுதங்களைக் கையிலேந்திக்கொண்டு வேகமாக ஓடிவந்தனர். அவர்களது வேகத்தைக் கண்டு, ப்ருகு ரிஷி வேள்வியைக் கெடுப்பவர்களைக் கொல்லும் பொருட்டு அதற்குரிய மந்திரங்களைக்கூறி அக்னியில் ஹோமம் செய்தார். அப்போது ருபுக்கள் என்ற வலிமை மிக்க தேவகணங்கள் ஆயிரக்கணக்கில் எழுந்தனர். இவர்கள் தங்கள் தவலிமையால்‌ சந்திரலோகம் சென்று ஸோமபானம் அருந்தியவர்கள்.

தேஜஸ் மிகுந்த அவர்கள் கைகளில் கொள்ளிக்கட்டைகளோடு எதிர்ப்பதைக் கண்டு அனைவரும் நாற்புறமும் சிதறிஓடினர்.

தக்ஷன் அவமதித்ததால் ஸதிதேவி தன் இன்னுயிரை நீத்ததையும், தன் கணங்கள் அனைவரும் ருபுக்களால் விரட்டப்பட்டதையும் நாரதர் மூலம் அறிந்த சிவபெருமான் மிகுந்த கோபம் கொண்டார்.
மிகுந்த கோபத்துடன் உதடுகளைக் கடித்துக்கொண்டு மின்னல் மற்றும் அக்னி ஜ்வாலைபோல் ஒளிரும் தன்‌ ஜடாமுடியிலிருந்து ஒரு சடையைப் பிடுங்கி பயங்கரமாக அட்டஹாஸம்‌ செய்து செய்துகொண்டு, அதைத் தரையில் ஓங்கியடித்தார்.

(சிரிப்பது ஹாஸம்.
புன்முறுவல் செய்வது மந்தஹாஸம்.
ஹாஹா என்று சத்தம்போட்டு வாயை நன்றாகத் திறந்து சிரிப்பது அட்டஹாஸம்)
உடனே அதிலிருந்து மேகம்போல் கருத்த திருமேனி, அக்னியாய் ஒளிரும் மூன்று கண்கள், பயங்கரமான பற்கள், மண்டையோட்டுமாலை, பலவிதமான ஆயுதங்கள் ஆகியவற்றுடன் வீரபத்திரன் தோன்றினார்.

அவர் பரமேஸ்வரனை இரு கரம்‌கூப்பி வணங்கி,
நான் என்ன செய்யவேண்டும்? உத்தரவிடுங்கள்
என்றார்.

பரமேஸ்வரன் அவரைப் பார்த்து
ஹே! ருத்ரனே! நீ எனது அம்சமே. என் கணங்களுக்குத் தலைமை தாங்கிச் சென்று தக்ஷனையும் அவனது வேள்வியையும் அழித்துவிட்டு வா
என்றார்.

விதுரா!
வீரபத்ரன் பரமேஸ்வரனை வலம் வந்து வணங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

மிகவும் ஆர்ப்பரிக்கும் ருத்ரகணங்கள் சூழ, முத்தலை கொண்ட சூலத்தைக் கையிலேந்தி, காலில் வீரக்கழல்மணிகள் ஒலிக்க பயங்கரமாக கர்ஜித்துக்கொண்டு வேள்விச்சாலையை நோக்கி ஓடினார் வீரபத்திரன்.

அப்போது வேள்விச்சாலையில் இருந்த தக்ஷனும் அவனைச் சார்ந்தவர்களும் வடதிசை யிலிருந்து கிளம்பிய புழுதி வெள்ளத்தைப் பார்த்து
இதென்ன பேரிருள்? எங்கிருந்து இவ்வளவு புழுதி கிளம்பியது? என்று பேசிக்கொண்டனர்.

புயற்காற்றில்லை. தீயோரைத் தண்டிக்கும் ப்ராசீனபர்ஹிஸ் அரசனாக இருக்கிறான். எனவே திருடர் பயமும்‌ இல்லை.

(நல்ல அரசன் இருந்தால் திருடர் பயம் இருக்காது.)

பசுக்கள் மேய்ச்சல் முடிந்து வரும் வேளையும் இல்லை. ப்ரளயம்தான் வரப்போகிறதோ என்று விதம்விதமாக கற்பனை செய்தனர்.

தக்ஷனின் மனைவியும், மற்ற பெண்களும் தக்ஷன் செய்த பாவத்தின் விளைவால் ஏதோ அசம்பாவிதம் நேரப்போகிறது என்று பயந்தனர்.

வீரபத்திரன் காலரூபனாக அழிக்கக் கிளம்பியதும் அவரது கோபக்கனலால் அனைவர் மனத்திலும் பயம்‌ உண்டாகியது. தக்ஷனுக்குப் பல துர்நிமித்தங்கள் தோன்றின.

அதற்குள்ளாக அங்கு ஓடிவந்த ருத்ர கணங்கள் யாகசாலையைச் சூழ்ந்துகொண்டனர்.

சிலர் குள்ளர்கள். சிலர் மஞ்சள் நிறத்தவர். சாம்பல்‌ நிறத்தவர் சிலர். சிலர் முதலைபோல் வயிறும் வாயும்‌ படைத்தவர்கள்.

சிலர் கிழக்கு மேற்காகப் போடப்பட்டிருந்த தூலங்களை உடைத்தனர். பத்னி சாலைகளை அழித்தனர். யாகசாலையின் முன்புறமுள்ள சபா மண்டபம், ஆக்னீத்ரசாலை, யஜமானனின் அறை, போஜன சாலை, சமையற்கூடம் அனைத்தையும் த்வம்சம் செய்தனர்.

வேள்விக்குண்டங்கள், வேள்விக்கான பாத்திரங்கள் அனைத்தும் உடைக்கப்பட்டன. வேள்வித்தீயில் சிறுநீர் கழித்து அணைத்தனர்.

அங்குள்ள முனிவர்களையும் பெண்களையும்‌ பயமுறுத்தினர்.

மணிமான் ப்ருகுமஹரிஷியைப் பிடித்துக் கட்டினார். வீரபத்ரன் தக்ஷனையும், சண்டீசர் பூஷாவையும், நந்திகேஸ்வரர் பகனையும்‌ பிடித்துக்கொண்டார்கள்.

மற்ற கணங்கள் கற்களால் அனைவரையும் அடிக்க அனைவரும்‌ சிதறி ஓடினர்.

முன்பொருசமயம் ப்ரஜாபதிகள் நிறைந்த சபையில் மீசையை முறுக்கிக்கொண்டு சிவனைக் கேலி செய்தார் ப்ருகுமுனி. வீரபத்ரன் அவரது மீசையைப் பிய்த்தெறிந்தார்.

நடுச்சபையில் தக்ஷன் சிவனை அவமதித்தபோது அவனைக் கண்களால் ஊக்குவித்த பகனின் கண்களைப் பிடுங்கினார்.

தக்ஷன் பரமேஸ்வரனை ஏசும்போது பற்கள் வெளியே தெரியும்படி சிரித்த பூஷாவின் பற்களை அடித்து நொறுக்கினார்.

அனிருத்தன் திருமணத்தில் பலராமர் பகடையாடும்போது கலிங்கமன்னன் சிரித்தான். அப்போது கோபம்கொண்ட பலராமன் அவனது பற்களை உடைத்தது போல்‌ இருந்தது இது.

பின்னர் வீரபத்ரன் தக்ஷனைக்‌கீழே தள்ளி அவன் தலையைக் கொய்ய முயற்சி செய்தார். எவ்வளவு முயற்சி செய்தபோதும் தலை வெட்டுப்படவில்லை.
சற்றுச் சிந்தித்த வீரபத்திரன் வேள்விச் சாலையில் வேள்விக்கான பசுவை பலியிடும்‌ முறையால் தக்ஷனின் தலையைக் கொய்தார்.

இச்செயலைக்கண்டு பூதகணங்கள் அனைவரும் கொண்டாடினர். தக்ஷனைச் சேர்ந்தவர்கள் ஹாஹா என்று கதறினர்.

தக்ஷனின் தலையை வேள்வித்தீயில் போட்டு வேள்விச்சாலை முழுவதையும் தீக்கிரையாக்கிவிட்டு வீரபத்ரன் கயிலாயம்‌ சென்றார்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment