Thursday, April 30, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 445

மல்லர் அரங்கில் நுழைந்த கண்ணன் அங்கிருந்த ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொரு விதமாகத் தெரிந்தான்.

மல்லர்களுக்கு அவனைப் பார்த்ததும் அடிவயிற்றில் பகீரென்று கிலி படர்ந்தது. 

குழுமியிருந்த பெண்களுக்கு மன்மதன் போல் இருந்தான்.

கோபர்களுக்கு அவர்களது அன்புக்குரிய கோவிந்தனாகக் காட்சியளித்தான்.

தீய சுபாவம் கொண்ட அரசர்க்கு ஆளுமை மிகுந்த அரசன் போல் தெரிந்தான்.

நந்தன், சுநந்தன் முதலியவர்கள் அவனை அன்புக் குழந்தையாகக் கண்டனர்.

கம்சனுக்கு கண்ணனைப் பார்த்ததும் யமனைப் பார்ப்பதுபோல் இருந்தது.

யோகிகளும் பக்தர்களும் பகவானாகக் கண்ணுற்றனர்.

வ்ருஷ்ணி குலத்தவர் கண்ணனைக் கண்டதும் இஷ்ட தெய்வத்தைக் கண்டதுபோல் பெருமகிழ்ச்சியுற்றனர்.

பெரும்பாலானோர் முதன் முதலாகக் கண்ணனைப் பார்ப்பவர்கள்.

மிகுந்த ஆச்சரியத்துடன் தாங்கள் கண்ணனைப் பற்றிக் கேள்விப்பட்டதையெல்லாம் பேசிக்கொண்டனர்.

இந்த ஒரு விஷயத்தில் நவ வித பக்தி ரஸங்களும் வெளிப்படுமாறு வர்ணிக்கிறார் ஸ்ரீ சுகர்.

குவலயாபீடத்தைக் கொன்ற சேதி கம்சனை எட்டியிருந்தது. பார்க்க திடமானவன் போல் இருந்தாலும் உள்ளுக்குள் பயந்து நடுங்கிக்கொண்டிருந்தான்.

அத்தனை பேரும் கண்ணனின் அழகைக் கண்களால் பருகினர்.

இவ்விருவரும் பகாவான் நாராயணனின் அம்சமாமே.

இவன் தேவகி மகனாம். யாருக்கும் தெரியாமல் நந்தன் வீட்டில் வளர்ந்திருக்கிறான். இவ்வளவு நாள்களாக கோகுலத்தின் வழியாகப் போய் வந்திருக்கிறோம். நமக்குத் தெரியவே இல்லை பார்.

கம்சராஜா இவனைக் கொல்ல நிறைய அசுரர்களை அனுப்பினாராம். இவன் அத்தனை பேரையும் கொன்னுட்டானாமே.

இவன் மலையைத் தூக்கினானாம் தெரியுமா?

ஒரு விஷ‌மடு இருந்ததே. அதிலிருந்து காளியப்பாம்பை விரட்டிவிட்டானாமே

நம்ம ராஜாவைக் கொல்லத்தான் வந்திருக்கான்னு பேசிக்கறாங்க.

அப்டி நடந்தா நமக்கெல்லாம் நல்ல காலம்தான். 

சரி சரி நமக்கேன் வம்பு.
என்ன நடக்கறதுன்னு பாக்கலாம்.

அப்போது பெரிதாக முரசொலி எழும்ப சாணூரன் கண்ணனையும் பலராமனையும் பெயர் சொல்லி சண்டைக்கு அழைத்தான்.

ஹே க்ருஷ்ணா! பலராமா! நீங்களிருவரும் சிறந்த வீரர்கள்தானே! மல்யுத்தம் செய்யவே அரசர் உங்களை அழைத்திருக்கிறார். நீங்கள் மாடு மேய்ப்பவர்கள் என்று உலகத்திற்கே தெரியும். இருப்பினும் அரசர் விரும்புவதால் நாம் மற்போர் செய்வோம். என்றான்.

அதைக் கேட்ட கண்ணன் சிரித்தான்.

நாங்களும் போஜராஜனின் குடிமக்களே. எமக்கும் அரசர் விருப்பத்தை நிறைவேற்ற ஆசைதான்.

ஆனால், மற்போர் சமமானவர்களுடன் நிகழவேண்டும். நாங்கள் சிறுவர்கள். நீங்கள் தேர்ந்த மல்யுத்த வீரர்கள். நாம் போர் செய்தால் மக்கள் போட்டியில் முறைகேடு என்று சந்தேகம் கொள்ளமாட்டார்களா? எங்களுக்கீடானவர்களை அழையுங்கள். யுத்தம்‌ செய்யத் தயார். என்றான்.

அதற்கு சாணூரன், 
மிகவும் சாமர்த்தியமாகப் பேசுவதாக நினைக்கிறாயா? இப்போதுதான் வாசலில் குவலயாபீடத்தைக் கொன்றாய். அதிலிருந்தே தெரியவில்லையா நீ எத்தகைய பலவான் என்று. இந்த பலராமனும் மிகுந்த பலம் பொருந்தியவன் என்றறிவோம். முறைகேடு ஏதுமில்லை. நீ என்னுடன் யுத்தம் செய். பலராமன் முஷ்டிகனுடன் போர் செய்யட்டும்.
என்றான்.

விட்டில் பூச்சிகளைப் போல் வலிய வந்து விழுகிறார்களே‌ என்ற கண்ணனின் எண்ண ஓட்டத்தை பலராமனும் கண்ணால்  ஆமோதிக்க மல்யுத்தம் துவங்கிற்று.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



No comments:

Post a Comment