Monday, April 20, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 436

யமுனையில் நீராடச் சென்ற அக்ரூரர் நீருக்கடியிலும் தேரிலுமாக இரண்டு இடங்களிலும் கண்ணனைக் கண்டார். 

நீருக்கடியில் வைகுண்ட தரிசனம் கிடைக்கப்பெற்றுத் தன்னிலை மறந்தார்.

பின்னர் மெதுவாக உணர்வு பெற்று பகவானைத் துதிக்கலானார்.

மூலபுருஷரும், முடிவற்றவருமான தம்மை வணங்குகிறேன். ஸ்ரீமன் நாராயணனான உமது நாபியிலிருந்துதான் ப்ரும்மா தோன்றினார். அவரிடமிருந்து ப்ரபஞ்சம் தோன்றிற்று.

பூமி, நீர், ஆகாயம், காற்று, அக்னி, அவற்றின் காரணமான மஹத் தத்வம், மூலப்ரக்ருதி, அதன் புருஷன், மனம், பொறிகள், புலன்கள், அவற்றின் தேவதைகள், ஆகிய அனைத்துக் காரண வஸ்துக்களும் உம்மிடமிருந்து தோன்றின. இது என்று சுட்டிக்காட்ட முடிந்த அனைத்தும் தங்கள் படைப்பாகும். அவையனைத்தும் ஜடமே. அவற்றால் தம்மை அறிந்துகொள்ள இயலாது. தாங்கள் ஆத்ம ஸ்வரூபமாக அவற்றுள் உறைகிறீர்கள். அதனாலேயே அவற்றிற்கு உணர்வு வருகிறது.

ப்ரும்மதேவர் உமது அம்சமானாலும் ரஜோகுணத்தின் அடிப்படையில் தோன்றியவர். அவரும்கூட தமது உண்மை உருவை அறியமாட்டார்.

ஸாத்வீக குணமுள்ளவர்கள் தங்களை அந்தர்யாமியாகவும், எங்கும் பரவி நிற்பவராகவும், தங்களைப் பூஜை செய்கிறார்கள். 

வேதம் ஓதும் அந்தணர்கள் ரிக், யஜுர், சாம வேதங்களின் மூலமும், பல வித வேள்விகளாலும் பல்வேறு தேவர்களைப் பூஜை செய்தாலும் அவையனைத்தும் உம்மையே அடைகின்றன.

ஞானிகளோ தமது செயல்களின் பலன்கள் அனைத்தையும் உமக்கே அர்ப்பணம் செய்கிறார்கள். 
உலக இன்பங்களை முற்றிலும் துறந்து ஞானத்தால் தங்களை வழிபடுகின்றனர்.

சிலர் சைவ வைஷ்ணவ தீக்ஷை பெற்று பாஞ்சராத்ரம், ஆகமங்கள் ஆகியவற்றின் மூலம் வாசுதேவன்,  ஸங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன் ஆகிய மூர்த்திகளாக தங்களைப் பூஜிக்கிறார்கள்.

சிலர் சைவம், பாசுபதம் ஆகிய முறைகளில் பரமேஸ்வரனின் வடிவில் தங்களை வழிபடுகின்றனர்.

எந்தெந்த தேவதைகளிடம் ‌யார் பக்தி செய்தாலும், அவர்கள் அனைவரும் தங்களையே வழிபடுகிறார்கள்.

மலைகளில் தோன்றும் ஆறுகள்  ஆறு குளங்களை நிரப்பி, பல்வேறு வழிகளில் ஓடி‌ முடிவில் கடலை அடைவதுபோல் எல்லா விதமான வழிபாடுகளும் முடிவில் தங்களையே அடைகின்றன.

அனைத்து ஜீவன்களிம் ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகியவற்றால் கோக்கப்பட்டவை.

நீங்கள் எதிலும்‌ ஒட்டாதவர். எப்போதும் தனித்து விளங்குபவர்.

மேலும் பகவானின் விஸ்வரூபத்தை வர்ணிக்கிறார் அக்ரூரர். அதன் பின் பகவன் எடுத்த ஒவ்வொரு அவதாரங்களையும் விரிவாக வர்ணித்துத் துதி செய்தார்.

பின்னர் உங்களைச் சரணடைந்தேன். ஜீவன்களுக்கு விடுதலைக்கான நேரம் வரும்போதுதான் மஹான்களுக்கு சேவை செய்யத் தோன்றும். சித்தத்தின் அதிஷ்டான தேவதையாக விளங்கும் வாசுதேவனான உமக்கு நமஸ்காரம்.

அஹங்காரத்தின் தேவதையான ஸங்கர்ஷணரூபனே உமக்கு நமஸ்காரம்.

அநிருத்தனாக இருந்து மனத்தைக் கட்டுப்படுத்துவரே. உமக்கு நமஸ்காரம்.

புத்தியின் தேவதையான ப்ரத்யும்னரே உமக்கு நமஸ்காரம். இந்திரியங்களின் தலைவரான ஸ்ர்வேஸ்வரா! உமக்கு நமஸ்காரம்

என்றார்.

பகவான் அவருக்கு ஆசி வழங்கிவிட்டுக் காட்சியை மறைத்துக்கொண்டான்.
நீரிலிருந்து வெளிவந்தார் அக்ரூரர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



No comments:

Post a Comment