Wednesday, April 8, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 425

யுகள கீதம் - 1

இது பஞ்ச கீதங்களுள் ஒன்று. 
கோபியர்கள் கண்ணன் குழலூதும் அழகைப் பாடிக்கொண்டே தத்தம் அன்றாட வேலைகளைச் செய்வதைக் குறிப்பிடும் கீதம். 

யுகளம் என்றால் இரண்டு. இரண்டிரண்டு அடிகளாக வாக்கிய அமைப்பு அமைந்திருப்பதால் யுகள கீதம் என்றழைக்கப்படுகிறது.

இரண்டிரண்டு அடிகளில் முதல் ஸ்லோகம் கண்ணனின் அழகையும், இரண்டாவதில் அதனால் கோபியரின் மனங்களில் ஏற்படும் விளைவையும் சொல்கிறது.

இருபத்து நான்கு  ஸ்லோகங்கள் கொண்டது.

கண்ணன் மாடு மேய்க்கக் காலையில் கிளம்பிவிடுவான். அவன் சென்றபிறகு, பகற்பொழுது முழுவதும் கோபியர்க்குத் துன்ப காலமாகக் கழிந்தது. ப்ரணாமோ துக்க சமன: என்னும்படியாக எப்படிப்பட்ட துயரமாயினும் ஹரியின் நாமம் அதற்கு ஆறுதலாய் அமையுமல்லவா..

இனி யுகள கீதம்.

இடது தோளில் கன்னத்தைச் சாய்த்து புருவத்தை  வளைத்து, குழலில் விரல்களை அளையவிட்டு, கண்ணன் தேவகானமாய்  இசைக்கிறான். அதைக் கேட்டு வானத்தில் சென்றுகொண்டிருக்கும் அப்ஸரஸ்கள் மனத்தைப் பறிகொடுத்து ஆடைகள் நழுவும் உணர்வு கூட இல்லாமல் நிற்கின்றனர்.

கண்ணன் குழலூதும்போது, முத்துமாலை போல் கோர்வையாக உள்ள பல்வரிசை அவ்வப்போது பளீர் பளீரென்று இதழ்களுக்கிடையில் ஒளிர்கிறது. மார்பில் விளங்கும் ஸ்ரீவத்ஸமோ கருமேகத்தில் ஏற்படும் மின்னலைப்போல் ப்ரகாசிக்கிறது.  இவன் குழலூதுவதென்னவோ அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர்ப்பை ஊட்டத்தான். ஆனால், காளைகள், பசுக்கள், உள்பட அனைத்து ஜீவன்களும் கண்ணனின் அருகே ஓடிவந்து மெய்மறந்து நிற்கின்றன. மேய்ந்த புல்லை அசைபோடவோ, விழுங்கவோ மறந்து கடைவாயில் வழியவிடுகின்றன. காதுமடல்களை சிறிது அசைத்தாலும் கானம் கேட்பது தடைப்படுமோ என்று செவிமடல்களை மேல்நோக்கி விரித்து நீட்டிக்கொண்டு அசையா நிற்கின்றன.
இவையனைத்தும் பார்க்க முப்பரிமாணச்  சித்திரங்கள் போல் உள்ளன. 

கண்ணன் சிலசமயம் பலராமனுடன் காட்டில் மாடு மேய்க்கும்போது, கோபர்கள் அவனுக்கு அலங்காரம் செய்து விடுகின்றனர். தலையில் மயில்பீலி, பூங்கொத்து ஆகியவற்றைச் செருகி, பாறைகளில் கிடைக்கும் வண்ணத் தாதுப்பொடிகளை அவனது கன்னங்களில் பூசி, இலை மற்றும் தளிர்களாலான மாலையைச் சூட்டி, மல்யுத்த வீரன்போல் கச்சை கட்டிவிடுகின்றனர். அவர்கள் கைப்பாவையாக மாறி கண்ணனும்  என்ன அலங்காரம் செய்து விட்டாலும் அதை அன்போடு ஏற்கிறான். பின்னர், தொலைவில் சென்ற மாடுகளை அவற்றின் பெயரைக் குழலில் இசைத்து அழைக்கிறான். அப்போது, தன் அலை ஓசையால் குழலிசையின் இனிமைக்கு ஊறு வருமோ என்று பயந்து யமுனை தன் அலைகளை அடக்கிக்கொண்டு சிலையாக ஓடாமல் நிற்கிறாள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



No comments:

Post a Comment