Sunday, April 5, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 424

சண்டை எதுவும் போடாமல் கால் விரலால் தீண்டியதற்கே ஒரு பாம்பு சாபவிமோசனம் பெற்றதைக் கண்ட கோபர்களும் கோபியர்களும் கண்ணனின் ஆன்மபலத்தை எண்ணி வியந்தனர். 

கண்ணனின் புகழைப் பாடிக்கொண்டு வண்டிகளில் ஏறி கோகுலம் திரும்பினர்.

மற்றொரு நாள் கண்ணனும் பலராமனும் அழகாக அலங்காரம் செய்துகொண்டு ஆநிரை மேய்க்க வனம் சென்றனர். அப்போது மூலிகையும் பூக்களும் பறிக்க,  வனத்திற்கு வந்த பெண்கள் தங்கள் நிலை மறந்து கண்ணன் மற்றும் பலராமனை நோக்கி வந்தனர். இருவரும்  அவர்களுடன் விளையாடத் துவங்கினர். மாலையானது தெரியாமல் விளையாட்டு தொடர்ந்தது.

இருள் சூழத் துவங்கியது. நிலவொளியில் யமுனைக் கரை தனி அழகுடன் விளங்கியது. ஆம்பல் பூக்களின் நறுமணமும், மெல்லிய தென்றலும், வண்டுகளின் ரீங்காரமும் நிரம்பிய அம்மாலை வேளையைப் புகழ்ந்து அனைவரும் பாடினர். கண்ணன் குழலிசையை வழங்க அனைவரும் மயங்கிய நிலையில் சூழலை மறந்தனர்.

அப்போது சங்கசூடன் என்னும் அரக்கன் அங்கு வந்தான். 

அங்கு அமர்ந்திருந்த அழகிய பெண்களில் சிலரைத் தூக்கிக்கொண்டு ஓடத் துவங்கினான்.

எல்லா கோபியரும் பயந்துபோய் அழத் துவங்கினர். கண்ணனும் பலராமனும் பயப்படாதீர்கள் என்று கத்திக்கொண்டே சங்கசூடனைத் தொடர்ந்து ஓடினர்.

அசுரனைப் பிடிக்கத் தலைப்பட்டபோது, அவன் உயிருக்கு பயந்து பெண்களைக் கீழே விட்டுவிட்டு வேகமாக ஓடத் துவங்கினான்.

பலராமனை கோபியர்க்குக் காவலாய் வைத்து, மற்ற கோபிகளுடன் சேர்த்துவிடச் சொன்னான் கண்ணன். பின்னர் தான் மட்டும் அசுரனைப் பின் தொடர்ந்தான். 

ஒரே பாய்ச்சலில் அசுரனை ஓங்கி முஷ்டியால் அடித்தான். கண்ணனைக் கண்ணாரக் கண்டுகொண்டே சங்கசூடனின் உயிர் பிரிந்தது. அவன் தலையில் ஒரு ஒளி மிக்க ரத்தினம் இருந்தது. 
கண்ணன் அதைப் பிடுங்கி எடுத்துக்கொண்டு வந்தான்.

கோபியரும் பலராமனும் கண்ணனுக்காக யமுனைக் கரையில் காத்திருந்தனர். அனைவர் முன்னிலையிலும் கண்ணன் அந்த ரத்தினத்தை பலராமனுக்குப் பரிசளித்தான். 

யமுனையில் களைப்புதீர நீராடி, ஜலக்ரீடைகள் செய்தபின் அனைவரும் வீடு திரும்பினர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..


No comments:

Post a Comment