Saturday, April 4, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 423

ஒரு சமயம் நந்தன் தன் உறவினர்களை அழைத்துக்கொண்டு அம்பிகாவனம் என்ற வனத்திற்குச் சென்றார். சிவராத்ரி அன்று அங்கு கோவில் கொண்டிருக்கும் பரமேஸ்வரனைப் பூஜை செய்ய எண்ணினார்.

ஸரஸ்வதி நதிக்கரையில் அமைந்த வனம் அது. நதியில் நீராடி, பரமேஸ்வரனையும், அம்பளையும் வழிபட்டார். 

நந்தன், சுநந்தன் முதலானோர் நீரை மட்டும் பருகி உபவாசம் இருந்தனர். அன்றிரவு நதிக்கரையிலேயே கூடாரம் அமைத்துத் தங்கினர்.

அப்போது ஒரு பெரிய ஆபத்து வந்தது. ஒரு பெரிய மலைப்பாம்பு நந்தனை விழுங்கத் துவங்கியது. 

உறங்கிக்கொண்டிருந்த அனைவரும் திடுக்கிட்டு எழுந்தனர். கோபர்கள் ஓடிச்சென்று தீப்பந்தங்களை எடுத்து வந்து பாம்பை அடித்தனர். ஆனால் அது எதற்கும் அசையாமல், தொடர்ந்து நந்தனை விழுங்கிக்கொண்டே இருந்தது. நத்தன் கொஞ்சம் கொஞ்சமாக பாம்பின் வாயினுள் போய்க்கொண்டிருந்தார்.

யசோதை அலறிக்கொண்டு மூர்ச்சையாகி விழுந்தாள். இன்னும் பல பெண்களும் துடித்துப்போய் கண்ணா காப்பாற்று என்று கதறினர். சத்தம் கேட்டு எழுந்து வந்தான் கண்ணன். 

கண்ணன் மெதுவாக அந்தப் பாம்பின் அருகில் சென்று அதைத் தன் திருவடியால் தீண்டினான். 

இறைவனின் திருவடி மகிமை சொல்லுக்கடங்குமா? தாமரைப் பாதம் பட்டதும், அந்தப் பாம்பு தன் உடலை விட்டு அழகிய வித்யாதரனின் உருவம் பெற்றது.

மிகுந்த ஒளியுடன் தங்க மாலைகளும், பட்டாடையும் அணிந்த அந்த வித்யாதரனைப் பார்த்து அனைவரும் ஹா என்று அதிசயித்தனர்.

கண்ணன் அவனைப் பார்த்துக் கேட்டான்.

யார் நீ? இவ்வளவு அழகாக இருக்கும் நீ எப்படி பாம்புருவைப் பெற்றாய்? 

அந்த வித்யாதரன் கண்ணனை வணங்கினான். பின்னர் கூறலானான்.

என் பெயர் சுதர்சனன்.

செல்வமும் செழிப்பும்‌ மிக்கவனாய் இருந்தேன். ஒரு சமயம் என் விமானத்திலேறி உலகைச் சுற்றி வந்தேன். 

அப்போது வனத்தில் தவத்தினால் ஒட்டி உலர்ந்த உடலுடன் விளங்கிய ஆங்கீரஸ கோத்ர மஹரிஷிகளைப் பார்த்தேன். என் அழகு தந்த இறுமாப்பால் அவர்களைப் பரிஹாசம் செய்தேன். எனது பிழையால் சினந்த அவர்கள் என்னை மலைப்பாம்பாகும்படி சபித்தனர்.

கருணையே வடிவான அவர்களது சாபத்தினால் எனக்கு இன்று பெரு நன்மை விளைந்தது. கிடைத்தற்கரிய உமது திருவடியும் தங்கள் தரிசனமும் கிட்டியது. பெரும்பேறு பெற்றவன் ஆனேன். சம்சாரத்தில் பயமுற்றவர்களின் பயமனைத்தையும் போக்குவது தங்கள் சரணமே. தங்களைச் சரணடைந்தேன்.

பக்தர்களை எப்போதும் கைவிடாதவர் நீங்கள். உமது திருநாமங்களைக் கூறுபவன், அதைக் கேட்பவனையும், தன்னையும் அக்கணமே தூய்மைப்படுத்துகிறான். எனக்கோ உமது திருவடியே கிடைத்துவிட்டது. என்னுடைய எல்லா பாவங்களும் நீங்கிவிட்டது பெருமானே! எனக்கு விடை கொடுங்கள். நான் இனி உமது புகழைப் பாடிக்கொண்டு இவ்வுலகை வலம் வருவேன்.

என்று கூறி கண்ணனை வலம் வந்து வணங்கிவிட்டுப் புறப்பட்டான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..




No comments:

Post a Comment