Thursday, April 9, 2020

ஸ்ரீமத் பாகவத பழம்- 426

யுகள கீதம் (2)

மலையடிவாரத்தில் மேய்கின்ற பசுக்களைக் கண்ணன் குழலூதி அழைத்தான். அப்போது அங்கிருந்த செடி கொடிகள், மரங்கள் ஆகியவை பூக்களாலும், பழங்களாலும் கண்ணனை வணங்கின. 

கண்ணனின் வனமாலையை வண்டுகள் ரீங்காரமிட்டுக்கொண்டு சுற்றுகின்றன.  அழகிய கஸ்தூரி திலகம் விளங்கும் நெற்றியுடைய கண்ணன் தன் வேணுகானத்திற்கு, அவ்வண்டுகள் ஒத்திசைந்து ரீங்கரிப்பதைக் கண்டு மகிழ்ந்து பாராட்டி மேலும் கானம் செய்கிறான். அந்த கானத்தால் கவரப்பட்ட நீர்ப்பறவைகள் அனைத்தும் நீரை விட்டு வந்து கண்ணனின் திருவடியில் மனம் மயங்கி நின்று கேட்கின்றன.

உலகத்தார் அனைவர்க்கும் கேட்கும்படி மலை உச்சியிலிருந்து குழலிசைக்கிறான் கண்ணன். அப்போது மேகங்கள் தங்கள் இடியினால் குழலிசைக்கு அபஸ்வரம்‌ நேருமோ என்று பயந்து  மெதுவாக இரைகின்றன.  கண்ணன் மேல் சூரிய ஒளி படாதவாறு குடை பிடிக்கின்றன. மெல்லிய பூக்களைப்போன்று சாரல் தூவுகின்றன. 

எல்லாவிதமான கலைகளிலும் வல்லவனான கண்ணன் தன் குழலில் ஸ்வர வரிசைகளால்  விளையாடுகிறான். அப்போது இந்திரன் முதலான தேவர்களும் அதன் நுணுக்கங்கள் புரியாமல் மயங்கினர். மந்த்ரம், மத்யமம், தாரம் என்று ஸ்தாயி வேற்றுமைகளும் புரியவில்லை. ரிஷப, நிஷாத காந்தார வேற்றுமைகளும் பிடிபடவில்லை. பார்வதி இதென்ன ராகம் என்று வினவ, பரமேஸ்வரனோ ராகமா முக்கியம், அனுராகத்தைப் பார் என்கிறாராம். தேவர்களையும் மயக்குகிறது அவனது குழலிசை.

பசுக்கள் ப்ருந்தாவனத்தில் நடக்கும்போது அவற்றின் குளம்படிகளால் மண்ணைக் கீறிக்கொண்டே செல்கின்றனவாம். ஸ்ரீ வனத்தை மிகவும் நேசிக்கும் கண்ணன், குழலூதிக்கொண்டு செல்லும்போது, மாடுகளின் குளம்படிகளால் ஏற்பட்ட கீறல்களைத் தன்னுடைய சங்கு, சக்ர, பத்ம, வஜ்ர ரேகை உடைய தளிர்ப்பதங்களால் மூடிக்கொண்டே செல்கிறான். அதனால் கீறல் மறைந்து பூமிதேவி வேதனை தணிந்து  ஆனந்தம் கொள்கிறாள். அவனது ஒரே ஒரு பார்வையினாலேயே எங்கள் அன்பு அதிகமாகி, மெய்மறந்து செய்வதறியாமல் சிலைகளைப் போல் நிற்கிறோம்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



No comments:

Post a Comment