Tuesday, April 21, 2020

ஸ்ரீமத் பாகவத பழம் - 437

நீரிலிருந்து வெளிவந்த அக்ரூரர் விரைவாகத் தன் அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு ரதத்தின் அருகில் வந்தார். 

அவரை வேண்டுமென்றே வம்பிழுத்தான் கண்ணன்.

சித்தப்பா.. உங்கள் முகம் ஏன் இப்படி வெளிறிப்போயிருக்கிறது? தண்ணீரில் ஏதாவது அதிசயத்தைப் பார்த்தீ்ர்களா? உங்களைப் பார்த்தால் எதையோ பார்த்து பயந்த மாதிரி இருக்கிறதே.

அக்ரூரர் சற்று திகைத்தார். பின்னர் அவனுக்கீடாக பதில் சொன்னார்.

இதுவரை நான் கண்டிராத மாபெரும் அற்புதம் நீதான் கண்ணா.. உன்னை விடப் பெரிய அற்புதம் என்ன இருக்கிறது. வான், மண், நீர், நெருப்பு இவையனைத்திலும் என்னென்ன அற்புதங்கள் உண்டோ அவையனைத்தும் உனக்குள் அடக்கம். என்றார்.

அதற்கு மேல் பேசினால் அவதார வேஷம் வெளிப்படுமென்று போகலாம் சித்தப்பா. நேரமாயிற்று என்றான் கண்ணன்.

காந்தினியின் மகனான அக்ரூரர் ரதத்திலேறியதும் ரதம் விரைந்து சென்றது. அவர்கள் மதுராவை அடைய மாலையாகிவிட்டது.

வழியெங்கும் கிராமத்து மக்கள் கூடி நின்று மிக்க மகிழ்ச்சியுடன் கண்ணனை வைத்த கண் வாங்காமல் பார்த்தனர்.

ஆங்காங்கே சில ‌மகளிர் ரதத்தை நிறுத்தி ஆரத்தி எடுத்தனர். மாலை, பூக்கள், அக்ஷதை ஆகியவற்றைத் தூவினர்.

கோகுல கண்ணன் இவன்தானா.. எவ்வளவு அழகு.. என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டனர்.

மதுராவின் கோட்டை வாயிலை அடைந்ததும், அங்கே நந்தன் முதலான கோபர்கள் மாட்டு வண்டிகளுடன் காத்திருந்தனர்.

அவர்களைப்‌ பார்த்ததும் கண்ணன், சித்தப்பா, எங்களை இங்கேயே விட்டுவிடுங்கள். நாங்கள் வண்டிகளை அவிழ்த்து சற்று இளைப்பாறிவிட்டுப் பின்னர் வருகிறோம். என்றான்.

அக்ரூரர் கண்களில் நீர் கட்டியது.
நீ‌ர் என்னைக் கைவிடலாகாது. நான் தனியாக மதுராவிற்குள் செல்லமாட்டேன். நீங்கள் அனைவரும் என் வீட்டிற்கு வாருங்கள். தங்கள் திருவடி  பதிந்தால் என் வீடு புனிதமாகும். என் முன்னோர் அனைவரும் மகிழ்வர்.

தங்கள் திருவடி நீரான கங்கை அனைத்துப் பாவங்களும் தீர்க்கும் புண்யநதியாவாள். அதை பரமேஸ்வரன் தலையில் தாங்குகிறார். ஸகரரின் மக்கள் அனைவரும் கங்கையாலேயே நற்கதியடைந்தனர்.

பெரியோர்கள் அனைவரும் தங்கள் திருநாமங்களைக் கேட்பதும் பாடுவதுமாக உள்ளனர். நாராயணரே! உமக்கு நமஸ்காரம். 
என்றார்.

கண்ணன் சொன்னான்.

அதெல்லாம் சரிதான் சித்தப்பா. இப்போது நிலைமை சரியில்லை. கம்சன் அழிந்ததும்‌ நான் நம் வீட்டுக்கு வருகிறேன். அதுவரை இவர்களோடு இருப்பேன். நீங்கள் மாமாவிடம் எங்களை அழைத்துவந்துவிட்டதாகக் கூறுங்கள். நாளை தனுர்யாகத்தில் பார்க்கலாம். என்றான். வேறு வழியின்றி அக்ரூரர், மனத்தைக் கண்ணனின் திருவடியில் விட்டு உடலை மட்டும் நகர்த்திக்கொண்டு  வீட்டுக்குச் சென்றார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..



No comments:

Post a Comment